Tuesday, July 25, 2017

ரொசெட்டா ஸ்டோன்

1799ல் நெப்போலியன் எகிப்தின் மேல் படை எடுக்கிறார். வரலாற்றில் மிகுந்த ஆர்வமுடைய நெப்போலியன் தன்னுடன் பெரிய வரலாற்றறிஞர்கள் குழாமை அழைத்து சென்றார். எகிப்தில் உள்ள மம்மிகள், கலைபொருட்களை அவர் ஆராய்ந்து, சித்திரங்கள் தீட்டினர். அப்போது காமிரா இல்லை என்பதால் சித்திரங்களை வைத்தே ஆராயவேண்டியிருந்தது.

1799ல் ரொசட்டா எனும் பகுதியில் ரொசட்டா ஸ்டோன் எனப்படும் கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தார் நெப்போலியன். உலக வரலாற்றின் மைல்கல்லான கண்டுபிடிப்பு ரொசட்டா ஸ்டோன். ஏனெனில் அதுநாள்வரை பண்டைய எகிப்தின் எழுத்துருவான ஹைரலோக்ரோபிக் எழுத்துருவை யாராலும் படிக்க முடியவில்லை. அதனால் ஏராளமான மம்மிகள், கல்வெட்டுக்கள் கிடைத்தும் யாராலும் அவை சொல்லும் செய்திகளை அறிய முடியாது எகிப்திய வரலாற்று ஆராய்ச்சியே ஸ்தம்பித்த நிலையில் இருந்தது.

இந்நிலையில் ரொசட்டா கல்வெட்டில் 

பண்டைய எகிப்திய ஹைரலோக்ரோபிக் எழுத்துரு (இது எகிப்திய புரோகிதர்களின் மொழி. இன்றைய சமச்கிருதம் போல)
மக்களின் டிமாடிக் எழுத்துரு (மக்களின் மொழி. பிராகிருதம் போல)
கிரேக்க மொழி

என மூன்று மொழிகளில் ஒரே செய்தி கல்வெட்டாக சாசனம் செய்யபட்டிருந்தது.




இந்த கல்வெட்டை செதுக்கியவர் அன்றைய மன்னர் ஐந்தாம் டாலமி. பண்டைய பாரோக்கள் ஆட்சி முடிவுக்கு வந்து கிரேக்கர்கள் எகிப்தை கைப்பற்றி ஆண்டுகொண்டிருந்தனர். அப்படிப்பட்ட கிரேக்க மன்னரே ஐந்தாம் டாலமி. ஆனால் கிரேக்கர்களை பாரோக்களாக ஏற்க எகிப்தியர்கள் மறுத்த நிலையில் தன் ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க தன் அருமை பெருமைகள், தான் கடவுளின் அருள் பெற்றவர் மாதிரியான செய்திகளை கல்வெட்டில் செதுக்கி எகிப்தின் மூலை முடுக்கெங்கும் நாட்டினார் ஐந்தாம் டாலமி. இது செதுக்கபட்ட காலம் கிபி 2ம் நூற்றாண்டு.

ஏன் மூன்று மொழிகள்?

மன்னர் மற்றும் அதிகாரிகள் மொழி கிரேக்கம்
மக்கள் பேசிய மொழியான டிமாடிக்
புரோகிதர்கள், பூசாரிகள் பேசிய மொழியான ஹைரலோகிராபிக் எழுத்துரு

இந்த மூன்று மொழிகளிலும் ஒரே தகவலை செதுக்கியிருந்தார் ஐந்தாம் டாலமி. இதை கண்டதும் பிரெஞ்சு வரலாற்று நிபுணர்கள் ஆனந்த கூத்தாடினர். ஏனெனில் பண்டைய கிரேக்க மொழியை அவர்களால் படிக்க இயலும். அதே செய்தி எகிப்திய ஹைரலோகிராபிக் மொழியிலும் இருப்பதால் கிரேக்க மொழிபெயர்ப்பை வைத்து , எகிப்திய ஹைரலாகிராபிக் மொழி சொல்லும் சொற்கள் என்ன என எளிதில் கண்டுபிடிக்க முடியும். அதன்பின் சொற்களை வைத்து எழுத்துருவையே முழுமையாக உருவாக்க முடிந்தால் பன்டைய ஹைரலாகிராபிக் மொழியை படிக்க இயலும். அப்படி மட்டும் படிக்க முடிந்தால் 5000 ஆன்டுகால கல்வெட்டுகள், மம்மிகள், பேபிரஸ் டாகுமெண்டுகள் என எகிப்தீன் பண்டைய வரலாறு முழுக்க படிக்க முடியும்.

சுருக்கமாக சொன்னால்:

இதுமட்டும் நடந்தால் வரலாற்றியலின் மிக, மிகப்பெரும் மைல்கல்லான அரிய கண்டுபிடிப்பாக இருக்கும். நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்தது விண்ணியலில் எப்படிபட்ட சாதனையாக இருக்குமோ, அதற்கொப்பான வரலாற்றுசாதனையாக இருக்கும்.

ஆனால் "மேன் ப்ரபோசஸ், காட் டிஸ்போசஸ்"

முதல்சோதனை ஆங்கிலேயர் வடிவில் வந்தது. நெப்போலியன் எகிப்தை விட்டு பிரான்ஸ் போனதும் எகிப்தின் மேல் படை எடுத்து ரொசட்டா கல்லை திருடிக்கொண்டு போனார்கள் ஆங்கிலேயர்கள். இதை கேள்விப்பட்ட நெப்போலியன் கடுமையான கோபமடைந்தார். பிரெஞ்சு வரலாற்று அறிஞர்கள் கடும் விரக்தியில் ஆழ்ந்தார்கள். ஆனால் கல்லில் இருந்த எழுத்துக்கள் பிரதி எடுக்காப்ட்டிருந்ததால் அதை வைத்து ஆய்வை துவக்கினர். அதே சமயம் லண்டனில் ஆங்கிலேயரும் ஆய்வை துவக்கினார்கள். அப்போது நெப்போலியனின் பிரான்சு உலக வல்லரசாக ஆகியிருந்தது. ப்ரிட்டிஷ் சாம்ராஜ்யம் மட்டும் சளைத்ததா என்ன? அது சூரியன் மறையாத சாம்ராஜ்யமாக இருந்தது. இரு நாட்டு வரலாற்று நிபுனர்களுக்கும் உலக வரலாற்றியல் துறையை தலைகீழாக புரட்டிபோடும் அந்த மகத்தான சாதனையான ஹைரலோகிராபிக் எழுத்துருவை மீன்டும் கண்டுபிடிப்பது யார் என்பதற்கான போட்டி நடைபெற்றது. இரு வல்லரசுகளும் பணத்தை அள்ளிவீசின. 19ம் நூற்றாண்டின் மிகப்பெரும் வரலாற்று மேதைகள் அப்பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் எளிதாக முடிக்க முடியும் என நினைத்த பணி எத்தனை சிரமம் என பின்னர் தான் தெரிந்தது. ஹைரலாகிராபிக் எழுத்துரு சித்திர எழுத்துரு. அவற்றில் பறவைகள், சூரியன் போன்ற பல எழுத்துக்கள் காணபட்டன. நாம் சூரியன் என எழுதவெண்டுமெனில் சூ ரி ய ந் என எழுத்துக்களை பயன்படுத்துவோம். அவர்க ஒரு சூரியனையே வரைந்துவிடுவார்கள். ஆக இது படிக்ககூடிய எழுத்துருவே அல்ல என வரலாற்றறிஞர்கள் நம்ப துவங்கினர்.



(இடப்புற தாமஸ் யங், வலப்புறம் சாம்போலின்)


இந்த சூழலில் தாம்ஸ் யங் எனும் ஆங்கிலேயர் ஒரு புதுமையான படிக்கும் முறையை கண்டுபிடித்தார். அதாவது 

கிரேக்க மொழிபெயர்ப்பில் டாலமி எனும் சொல் எத்தனை முறை வருகிறது என பார்த்தார். 25 முறை வந்தது

அதேபோல ஹைரலாகிராபிக் எழுத்துருவில் 25 முறை வரும் சொல் எது என பார்த்தார். அப்படி ஒரு சொல் கிடைத்தது. அப்போது அது தானே ஹைரலாகிராபிக் எழுத்துருவில் டாலமி என்பதாக இருக்கவேண்டும்?

இப்போது டாலமிக்கு முன்பாக "மன்னர் டாலமி" என கிரேக்கத்தில் இருந்தால் ஹைரலாகிராபிக் எழுத்துருவில் இருக்கும் டாலமிக்கு முன்பாக இருக்கும் வார்த்தையும் மன்னர் என்பதாக தானே இருக்கவேண்டும்?

ஆக இப்படி கணக்குபோட்டு அவர் மொழிபெயர்க்கதுவங்கினார். நம்ப முடியாத வகையில் வெகுவிரைவில் மொழிபெயர்த்தும் விட்டார். அதன்பின்னர் அதை சகாக்களுக்கு மகிழ்ச்சியுடன் காட்டுகையில் தலையில் இடி இறங்குவதுபோன்ற கேள்வியை ஒருவர் கேட்டார்

"பன்டைய எகிப்தியர்கள் இடமிருந்து வலமாக எழுதினரா, அல்லது வலமிருந்து இடப்புறமாக எழுதினரா?"

யாருக்கு தெரியும்? இடமிருந்து வலமாக எழுதுவாக நினைத்துதான் தாம்ஸ் யங் மொழிபெயர்த்திருந்தார். வலமிருந்து இடம் என்றால் அப்படியே அது தலைகீழாக மாறிவிடுமே?

பத்தாண்டு வேலை இப்படி ஒரே கேள்வியில் தரைமட்டமானதை கண்டு தாமஸ் யங் கண்ணீர் வடித்தார்

அதே சமயம் பிரான்ஸில் ஜான் பிரான்ஸிஸ் சாம்போலின் என இன்னொரு வரலாற்று அறிஞர். அவர் மிகுந்த ஏழை. அவரது வாழ்நாள் கனவு உலகம் பிறந்தநாள் எது என கன்டுபிடிக்கவேண்டும் என்பது. அவரது காலக்ட்டத்தில் பைபிள்படி ஆதாம், ஏவாள் தான் முதல் மனிதர்கள். சார்லஸ் டார்வின் அப்போது பள்ளிமாணவன். அவரது பரிணாமவியல் கோட்பாடு உருவாகவே இல்லை. ஆக உலகம் தோன்றிய முதல் வாரத்திலேயே மனிதர்கள் தோன்றிவிட்டார்கள் என நம்பினார் சாம்போலின். இப்படி இருக்க உலகின் முதல் எழுத்துரு என கருதப்படும் எகிப்திய எழுத்துருவை படிக்க முடிந்தால் அதன் காலகட்டம் தெரியும் அல்லவா? அதை தெரிந்தால் உலகம் தோன்றிய ஆண்டு எது என கணித்துவிடலாமே?

இன்று வேடிக்கையாக இருந்தாலும் அன்று இந்த ஆர்வம் தான் சாம்போலினை உந்தியது. அவர் மிக வறிய நிலையில் பாரிசுக்கு போய் மேற்படிப்பு படிக்க முடியாத நிலையில் இருந்தார். அவரது சகோதரர் அந்த சூழலில் தான் உழைத்து அந்த காசில் தம்பியை படிக்க வைத்தார்.

பாரிசுக்கு போன சாம்போலினுக்கு மிகபெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பிரான்சின் மிகப்பெரும் வரலாற்று அறிஞர்கள் எகிப்திய எழுத்துருவை படிக்க முடியாது, அது வீண்வேலை என்றார்கள். தாமஸ் யங்கை பாடாய்படுத்தின "இடமிருந்து வலமா, வலமிருந்து இடமா" பிரச்சனையும் அவரை தாக்கியது. ஆனால் இதற்கு தாம்ஸ் யங் கடைபிடித்ததை போல அல்லாது மிக, மிக எளிய உத்தி ஒன்றின் மூலம் தீர்வுகண்டார் சாம்போலின்.

"ஒரு மொழி அத்தனை சீக்கிரம் அழியாது. எகிப்திய மொழி இன்று இல்லை. ஆனால் அதன் சகோதர மொழிகள் உயிருடன் இருக்கும். அந்த சகோதர மொழிகளின் இலக்கணம், எழுத்துக்கள் எல்லாமே எகிப்திய ஹைரலாகிராபிக் மொழியை ஒத்து இருக்கும். ஆக சகோதர மொழிகளை படித்தால் ஹைரலாகிராபிக் மொழியை படிக்கலாம்" என மிக எளிய வழிமுறை ஒன்றை கண்டுபிடித்தார் சாம்போலின்.

இந்தியை வைத்து சமஸ்கிருதத்தை அறிவது போல இது

ஆனால் ஹைரலாகிராபிக் மொழிக்கு சகோதர மொழிகள் எதுவுமே இல்லை. இந்த சூழலில் இதற்கான விடை பாரிசிலேயே சாம்போலினுக்கு கிடைத்தது. ஆம் பாரிசில் எகிப்திய காப்டிக் கிறிஸ்தவர்களின் சர்ச் ஒன்று இருந்தது. அங்கே போன சாம்போலின் காப்டிக் மொழி எகிப்தின் மிக தொன்மையான மொழி என அறிந்தார். அம்மொழியை கற்றார்.

அதன்பின் காப்டிக் மொழியின் எழுத்துரு, இலக்கணம், வார்த்தை அமைப்பு ஆகியவற்றை வைத்து பண்டைய ஹைரலாகிராபிக் எழுத்த்ருவை ஆராய்ந்தார். அதிசயிக்கதக்க வகையில் அது பொருந்திபோனது. காப்டிக் மொழி என்பது ஹைரலாகிராபிக் மொழியின் மக்கள் பேசும் வடிவம் என கன்டுபிடித்தார் சாம்போலின்.

அதன்பின் ஹைரலாகிராபிக் எழுத்துருவை முழுக்க மீள் உருவாக்கம் செய்து பண்டைய எகிப்திய மன்னன் ராமசேஸ் என்பவரது பெயரை முதல், முதலாக பலத்த ஆரவாரத்துக்கு இடையே ஒரு கருத்தரங்கில் படித்து காட்டினார் சாம்போலின்.

அங்கே வந்த தாம்ஸ் யங் அவரை பாராட்டினார். தாம்ஸ் யங் கடைபிடித்த கணிதவியல் முறைக்கு மாற்றாக தற்கால மக்களின் வாழ்வியலை ஆராய்ந்து தீர்வுகண்ட சாம்போலினின் அறிவுகூர்மையை தாமஸ் யங் தொழில் போட்டி, தேச பக்தியை எல்லாம் தாண்டி பாராட்டினார்.


(ஹைரலாகிராபிக் எழுத்துரு)


அதன்பின் எகிப்து சென்று ஏராளமான கல்வெட்டுக்கள், பாபைரஸ் டாக்குமென்டுகளை படித்துகாட்டி தன் எழுத்துரு வேலை செய்கிறது என்பதை நிருபித்தது மட்டுமல்லாது பன்டைய எகிப்தின் முழு வரலாற்றையும் கண்டறிந்தார் சாம்போலின். 1500 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முதலாக ஹைரலாகிராபிக் எழுத்துருவை மீண்டும் படிக்க முடிந்தது. சுமார் ஐம்பது நோபல் பரிசுகள் பெறுவதற்கு ஒப்பான வரலாற்று சிறப்பு வாய்ந்த கண்டுபிடிப்பு இது.

வரலாற்று அறிஞர் சாம்போலின் தனி மனிதராக எகிப்து எனும் நாகரிகத்தின் 5000 ஆண்டுகால வரலாற்றை நமக்கு மீண்டும் கிடைக்க செய்தார். அதற்கு காரணம் ஐந்தாம் டாலமி எனும் 14 வயது மன்னன் எழுதிய மொக்கை கல்வெட்டு ஒன்றே. உலகின் வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்புமுனை இப்படி மிக யதேச்சையாக நிகழ்ந்தது.


--

இது குறித்த மேலதிக தகவல்களை இக்கல்லை நேரில் பார்த்த முனைவர் சுபாஷினி பகிர்ந்து கொள்கிறார்




எகிப்திய ஹீரோக்லிப்ஸ் எழுத்துருவை வாசிக்க முடியாது ஆய்வுலகம் தவித்துக் கொண்டிருந்த வேளையில் ஆய்வுலக அதிசயமாகக் கிடைத்ததுதான் ரொசேட்டா கல் (Rosetta Stone).  எகிப்தின் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் எழுத்து ஹீரோக்ளிப்ஸ். ஓவியங்களே எழுத்துக்கள் என்ற வகையில் இவை அமைந்திருக்கும்.  எத்தனையோ ஆண்டுகளாக ஹீரோக்ளிப்ஸ் எழுத்துக்களை வாசிக்க முடியாமையினால் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்றே அறியமுடியாமல் ஆய்வுலகம் தவித்துக் கொண்டிருந்தது. இந்தப் பிரச்சனைக்கு வடிகாலாக அமைந்தது இந்த ரொசேட்டா கல். பார்ப்பதற்கு அது ஒரு பெரும் பாறை போன்ற கல் தான். ஆனால் அதில் இருப்பதோ உலகின் மிக முக்கிய ஆவணம். இதில் உள்ள செய்தி மிக சாமானியமானதுதான் ஆனால் அதில் உள்ள எழுத்துருதான் சிறப்பு பெற்றது. ஏனெனில் மூன்று மொழிகளின் எழுத்துருக்கள் ஒரே கல்லில் ஒரே செய்தியை வழங்கும் வகையில் இந்தக் கல் அமைக்கப்பட்டுள்ளது. கி.மு 196ல் 5ம் தாலமி முடிசூடிக்கொண்ட நிகழ்வை இந்தக் கல் ஹீரோக்ளிப்ஸ், எகிப்திய டெமோட்டிக் எழுத்துரு, கிரேக்கம் ஆகிய மூன்று மொழி எழுத்துருக்களில் காட்டுகின்றது. இதில் உள்ள கிரேக்க, எகிப்திய டெமோட்டிக் எழுத்துருக்களைக் கொண்டு ஹீரோக்ளிப்ஸ் எழுத்துக்களை ஆய்வாலர்கள் உடைனே மொழிபெயர்த்து ஒலியை அறிந்தனர். இதுவே விடைகாணாது இருந்த பல எகிப்திய ஆராய்ச்சிகளுக்கு விடையளிக்கும் மந்திரக்கோலாக அமைந்தது. இந்த ரொசேட்டா கல் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் தான் உள்ளது.




--

செல்வன்

No comments:

Post a Comment