Thursday, July 20, 2017

வீரக்கை என்னும் சதிக்கல்

-- து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.



முன்னுரை:
இரண்டு ஆண்டுகளுக்குமுன், திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டத்திலிருக்கும் சேவூரில் “தினமலர்”  நாளிதழின் திருப்பூர்ப் பகுதிச் செய்தியாளர் மகேஷ் அவர்கள் தாம் பார்த்திருந்த ஒரு நடுகல் சிற்பத்தைப்பற்றித் தந்த தகவலின் அடிப்படையில், கட்டுரை ஆசிரியரும் அவிநாசியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலரான ஜெயசங்கரும் சேவூரில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

வெட்டப்பட்ட ஒரு கையின் சிற்பம்:

சேவூர்-புளியம்பட்டிச் சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு அருகில் சாலையோரம், “தினமலர்” செய்தியாளர் குறிப்பிட்ட அந்த நடுகல் சிற்பம் இருந்தது. இது 13.4.2014 அன்று வைக்கப்பட்ட நடுகல். தேதி, நடுகல்லில் பொறிக்கப்பட்டிருந்தது. கருங்கல்லில் நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட சிற்பத்துடன் கூடிய நெடிய பலகைக்கல். சந்திரன் மற்றும் சூரியன் ஆகியவற்றின் உருவங்கள் கல்லின் உச்சிப்பகுதியில் செதுக்கப்பட்டு, அதன் கீழ்ப்புறம் இரு பெண்கள் மலர்கொண்டு பூசிக்கும் தோற்றத்தில் ஒரு சிவலிங்கமும் அதன் கீழாக உயர்த்திய நிலையில் ஒரு கையும் செதுக்கப்பட்டிருந்தன. 

சேவூர்  நடுகல் 

மக்களிடை வழங்கும் செய்தி:
அங்குள்ள மக்களிடம் இந்த நடுகல்லைப்பற்றிக்கேட்டபோது, அவர்கள் சொன்னதாவது: இந்த நடுகல்லில் காணப்படுவதுபோலவே சிற்பங்கள் செதுக்கப்பட்ட பழங்கால நடுகல் ஒன்று முன்பு இங்கு சாலையோரம் இருந்தது. சரக்குந்து ஊர்தியொன்றால் அது தாக்குண்டு உடைந்து போனது. உடைந்த துண்டுகளை ஆற்றில் எறிந்துவிட்டனர். பழமையான நடுகல் திப்புசுல்தான் காலற்றதாகும். வீரன் ஒருவன் கை வெட்டுப்பட்ட நிலையில் இறந்துபடுகிறான். அவன் நினைவாக, கையை முன்னிலைப்படுத்தி எழுப்பப்பட்ட நடுகல். பழங்கல்லில் இருந்தவாறே உருவங்களை அமைத்து, தற்போது இக்கல் எழுப்பப்பட்டுள்ளது.  மக்கள் சாமிக்கல் என்று அழைத்து வழிபடுகின்றனர். பழங்கல் பாதுகாக்கப்படவில்லையே என்னும் வருத்தம் தோன்றினாலும் அதன் நினைவைக் காக்கின்ற முயற்சியாகப் புதியதொரு கல்லையாவது பழமையின் கருத்து மறையாமல் இருக்கும் வண்ணம் நாட்டியுள்ளனர் என்பது ஆறுதல் தருகிறது. பழங்கல்லின் காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டு ஆகும்.

மீளாய்வு:
மேற்படி நடுகல்லில், வீரனின் உருவம் எதுவும் காணப்படாததும், கை மட்டுமே மையப்படுத்தப்பட்டுள்ளதும், இந்நடுகல் வழக்கத்துக்கு மாறாயுள்ள ஒரு நடுகல் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதோடல்லாமல், மீளாய்வு நோக்கில் கருத்துகளைத் தேடவேண்டும் என்ற எண்ணத்தையும் வலுவாக்கியது. நடுகல்லில் காணப்படும் கை ஓர் ஆணின் கையல்ல. பெண்ணின் கை. கையில் வளையல்கள் காணப்படுகின்றன. வீரர்களுக்கு எடுக்கப்படும் நடுகற்களில், குறிப்பாகக் கையை மட்டும் புடைப்புச் சிற்பமாகக் கொண்ட நடுகல் பற்றிய செய்தி கேள்விப்பட்டிராத ஒன்று. எனவே, இந்த நடுகல் வேறு வகையினதாக இருக்கவேண்டும்; இதுபற்றி மக்களிடையே வழங்கும் செய்திகள் சரியானவையாக இருக்கவாய்ப்பில்லை. இந்தக்கோணத்தில் தேடுதல் தொடர்ந்த வேளையில், 1918-ஆம் ஆண்டின் தொல்லியல் ஆண்டறிக்கையில் ஒரு குறிப்பு, மேற்படி நடுகல்லைப்பற்றிய தெளிவைத் தந்தது. 1917-ஆம் ஆண்டு, ஆந்திரப்பகுதியில் அனந்தபூர் மாவட்டத்தில் வனவோலு என்னும் ஊரில் கோட்டைக்கருகில் ஒரு சதிக்கல் கல்வெட்டு கண்டறியப்பட்டுப் பதிவானது பற்றி எழுதப்பட்டிருந்தது.  

வீரக்கை (HERO-HAND) என்னும் சதிக்கல்:
பெனுகொண்டா என்னும் ஊரில், இராமதேவ நாயக்கன் என்பான் இறந்ததும், அவன் மனைவி கங்காசானி என்பவள் தீப்பாய்ந்தாள். அவளுடைய இச்செயலைப் பெருமைப்படுத்தும் வகையில், திப்ப நாயக்கன் என்பவன் ஒரு நந்தவனத்தை அமைத்து அதன் முன்பாக ஒரு வீரக்கை  (HERO-HAND) நடுகல்லை நிறுவினான். இச்செய்தியைக் கொண்ட கல்வெட்டு கன்னட மொழியில் எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டின் காலம் கி.பி. 1405.

குற்றாலத்தைச் சேர்ந்த சொ. சந்திரவாணன் என்பவர், தம்முடைய “தமிழகத்தில் சதி”  என்னும் ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடுவதாவது: உடன் உயிர் விடும் பழக்கம் மன்னரில் தொடங்கி அனைவரிடமும் பன்னெடுங்காலம் இருந்துள்ளது. தீப்பாய்ந்த அம்மன், மாலையிட்ட அம்மன், பாவாடைக்காரி (பூவாடைக்காரி, பூ=தீ ) என்று பலவாறு வணங்கப்படும் பெண் தெய்வங்கள் இவ்வாறு உடன் உயிர் நீத்த “சதி”ப் பெண்களே. கணவனோடு சுமங்கலியாகச் சுவர்க்கம் புகுதல், சமுதாயம் ”சதி”ப்பெண்களைத் தெய்வமாகப் போற்றுதல் ஆகிய நம்பிக்கையின் அடிப்படையில் “சதி” என்னும் மரபு சமுதாயத்தில் தொடர்ந்தது.

தமிழகத்தில் பெரும்பாலும், கையில் வாள் பிடித்த நிலையில் ஆணின் உருவமும், பூச்செண்டு, கண்ணாடி, குங்குமச்சிமிழ், அல்லது பழம் போன்றதோர் உருண்டைப்பொருளைக் கையில் பிடித்த நிலையில் பெண்ணின் உருவமும் பொறிக்கப்பட்ட சதிக்கற்கள் காணப்படுகின்றன. சில சதிக்கற்களில் கல்வெட்டுப் பொறிப்பும் உண்டு. பொறிப்புகளில் ”கணவனைப் பிரியாதாள்”,  “துணைவனைப் பிரியாதாள்”  ஆகிய தொடர்கள் காணப்படுகின்றன. ஆளுருவங்களே அன்றி, ஒருசில மங்கலப்பொருள்களால் உணர்த்தியும் சதிக்கற்கள் அமைவதுண்டு. ஒரு பெண்ணின் வலது கை, தோளிலிருந்து “ட” வடிவம் போல உயர்த்திக்காட்டப்பட்டு,  பூணிடப்பட்ட கம்பத்தில் அந்தக்கை இணைக்கப்பட்டுக் காணப்படுவதுண்டு. சென்னை அருங்காட்சியகத்தில் இது போன்ற கம்பங்கள் உள்ளன. இக்கம்பங்கள் உள்ள இடங்கள், ”வீரமாத்தி” என்னும் பெயரில் அழைக்கப்படுகின்றன. ஒரு கல்வெட்டு “தோளும் கையும் கொடுத்த கம்பம்”  என்று இதைக்குறிப்பிடுகிறது.

இந்திய அளவில் சதிக் கற்கள்:



இறந்த கணவனின் காலைத் தழுவியவாறு “சதி”
 
இந்திய அளவில், இந்தியாவின் மைய மாநிலப்பகுதி, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சதிக்கற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. இவ்விடங்களில் பெரும்பாலும், சதிக்கற்கள் ஓரிரு அடுக்குகள் கொண்டதாக உள்ளன. மேல் அடுக்கில், ஒரு பெண்ணின் கை புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கும். செங்கோணத்தில் (90 பாகை) மடித்த நிலையில் தோளும், செங்குத்தாக உயர்த்திய நிலையில் முன்கையும் காணப்படும். சில போது, பெண் தன் கையில் பெருவிரலுக்கும் முன்விரலுக்கும் இடையில் எலுமிச்சம் பழமொன்றை ஏந்தியிருப்பாள். கைக்கு மேற்புறம், நிலவும், கதிரும் வடிக்கப்பட்டிருக்கும். சில போது, நிலவு, கதிர் ஆகியவற்றோடு பூச்செண்டு, தேங்காய் ஆகியன காணப்படும். அருகில் சிவலிங்கம் இருப்பதும் உண்டு. இன்னொரு அடுக்கில், வீரன் வாளொடு நின்ற நிலையிலும், அவனருகில் அவன் மனைவி (சதி) நின்ற நிலையிலும் இருப்பது போன்ற தோற்றம். சில போது, மற்றுமொரு அடுக்கில், வீரன் குதிரையின் மீது அமர்ந்த நிலையில் (போர்க்காட்சியை உணர்த்துவது) இருப்பது போன்ற தோற்றம். வீரனின் தலைக்குமேல் குடை இருந்தால், அவன் அரசனாகவோ அல்லது படைத்தலைவனாகவோ இருப்பான். இறந்துபோன கணவனின் காலைத் தழுவிய நிலையில் மனைவி இருப்பதாக வடிக்கப்பட்ட சதிக்கற்களும் உள்ளன. ”சதி”ப்பெண்ணை வணங்குகின்றவர்களுக்கு அவள் நலமும், வளமும் சேர்ப்பாள் என்பது மக்கள் நம்பிக்கை.

கருநாடகத்தில் சதிக்கற்கள்:
சாமராஜநகர் சதிக்கல்தோளும் கையும் கொடுத்த கம்பம்-கையில் ஏந்திய எலுமிச்சை

கருநாடகத்தில் வீரக்கற்கள் என்னும் நடுகற்களைப்போலவே சதிக்கற்கள் என்னும் நடுகற்கள் மிகுதியும் காணப்படுகின்றன. சென்ற ஆண்டு நண்பர்களோடு “ஹம்பி”  என்னும் விஜயநகரம் சென்றபோது, சாமராஜ நகரம் என்னும் ஊருக்கு நாலுகல் தொலைவில் சாலையோரம் ஒரு நடுகல்லைப் பார்த்தோம். மகிழுந்தை நிறுத்தி அதனை ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம். அப்போது அது ஒரு நடுகல் என்ற பொதுக்கருத்து மட்டுமே மனதில் நின்றது. சேவூர் நடுகல்லை மீளாய்வு செய்கையில், சாமராஜநகரத்து நடுகல், “தோளும் கையும் கொடுத்த கம்பம்” என்ற வகையைச் சேர்ந்த “சதிக்கல்” லுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்பது உணரப்பட்டது. இந்தச் சதிக்கல் சிதைவு ஏதுமின்றித் தெளிவான புடைப்புச் சிற்பங்களைக் கொண்டுள்ளது. ”சதி” என்னும் மரபுப்படி, உயிர் நீத்த பெண்ணின் வளைகள் அணிந்த ”ட” வடிவக் கை; அக்கை பிணைக்கப்பட்ட, வேலைப்பாடுகளோடு காணப்படும் கம்பம்; இறந்து பட்ட வீரனைத் தேவமகளிர் விண்ணுலகத்துக்கு அழைத்துச் செல்லும் காட்சி; வீரன் விண்ணுலகு அடைந்ததைக் குறிப்பால் உணர்த்தும் சிவலிங்க வழிபாடு; நடுகல்லின் கீழ்ப்பகுதியில் “சதி”ப் பெண்ணை வணங்குகின்ற பெண்மக்கள் ஆகிய அனைத்துக் கூறுகளும் இச்சிற்பத்தில் உள்ளன. இந்தச் சதிக்கல்லில் ”சதி”ப்பெண் தன் கையில் பெருவிரலுக்கும் முன்விரலுக்கும் இடையில் எலுமிச்சம் பழமொன்றை ஏந்தியிருப்பது சிறப்பான கூறு.

சதிக்கற்களில் உள்ள உருவங்கள் உணர்த்தும் உள்ளுறைக் கருத்துகள்:
சதிக்கற்களில் காணப்பெறும் புடைப்புச் சிற்ப உருவங்கள் பல கருத்துகளை உணர்த்துவதாக அமைகின்றன. நிலவு, கதிர், சிவலிங்கம் ஆகியவை சுவர்க்கம் என்னும் விண்ணுலகைக் குறிப்பன. பெண்ணின் கையில் உள்ள வளை, “சதி”ப்பெண்ணை வணங்குவோருக்கு அவள் அருளும் ஆசியைக்குறிக்கும்.

சேவூர் நடுகல்லும் சதிக்கல்லே:

மேற்குறித்த செய்திகளின் அடிப்படையில், சேவூரில் காணப்படும் நடுகல், ஒரு சதிக்கல் என்பது தெளிவாகிறது. நடுகல்லில் மேற்பகுதியில் நிலவும், கதிரும் காணப்படுகின்றன. அதனை அடுத்து, இரு பெண்கள் சிவலிங்க வழிபாடு செய்யும் காட்சி உள்ளது. அதனை அடுத்து, வளை அணிந்த “சதி”ப்பெண்ணின் கை. வீரக்கை (HERO-HAND) என்னும் சதிக்கல்லின் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளதில் ஐயமில்லை. திப்புசுல்தான் காலத்தைச் சேர்ந்த ஒரு சதிக்கல்லின் மூல நடுகல்லான அரியதொரு தொல்லியல் சின்னத்தை நாம் இழக்க நேர்ந்தது வருத்தமளித்தாலும், வியப்பை அளிக்காது. காரணம், தொல்லியல் சார்ந்த எவ்வளவோ எச்சங்களை அவற்றின் அருமை அறியாதார் அழிப்பதும், அருமை அறிந்தவர் அவற்றை அழிவிலிருந்து காக்கும் வழியறியாது விழிப்பதும் தொடர்ந்து நடைபெறுகின்றனவே. தொல்லியல் துறையும், அரசும் அக்கறை கொள்ளவேண்டும். சேவூரின் வீரக்கை வகைச் சதிக்கல்லின் மூலவடிவத்தை மறந்துபோகாமல் நினைவூட்டும் வண்ணம் அதே வடிவில் படியெடுத்ததுபோல் மற்றொரு நடுகல்லை மக்கள் அதே இடத்தில் வைத்து வழிபடுவதைப் பாராட்டியே ஆகவேண்டும்.


நன்றி:
1.  இணையம் வழி பார்த்த ஓர் ஆய்வுப்பதிவு.
The  iconography of Sati: An Archaeological study of sati memorial Pillars of Central Asia-by Ameeta Singh, Sarojini Naidu Govt. Girls College, Bhopal.

2.  தமிழகத்தில் சதி-ஆய்வுக்கட்டுரை-.சந்திரவாணன்.

3.  இணையத்தில் கிடைத்த படங்களுக்காக.



___________________________________________________________


து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
___________________________________________________________



No comments:

Post a Comment