Wednesday, January 13, 2016

நகரத்தார் பொங்கல் பண்டிகையில் விளக்கு எடுத்தல்

 -- முனைவர் கி. காளைராசன்.

படம் உதவி:  http://nnagarathars.blogspot.com/
காப்புரிமை:  நாட்டுகோட்டை நகரத்தார் தனவணிகன்

நகரத்தார் பொங்கல் பண்டிகையின் போது மிக முக்கியமான வழிபாடாக முன்னோர்களைக் கும்பிடுகின்றனர். தமிழர் திருநாள், உழவர் திருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் எனத் திருவிழாக்கள் வந்திருக்க வேண்டும்.  மகர சங்காராந்தி தினத்தன்று ஆற்றில் தீர்த்தமாடி அந்தணர்களுத் தானம் கொடுத்தல் என்பது உண்டு, கல்வெட்டுகளில் மகர சங்காராந்திப் புண்ணிய காலத்தில் தீர்த்தமாடித் தானங்கள் கொடுத்ததாக விஜயநகரம் கிருஷ்ணதேவராயர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. தீர்த்தமாடித் தானம் கொடுப்பது என்பதே முன்னோர் வழிபாட்டையே குறிக்கும். கோவிலூர் புராணத்திலும் இதுபற்றிய குறிப்பு உள்ளது. அமாவாசை மற்றும் பிதுர் பூசை நாட்களில் கோவில் அருகில் உள்ள தீர்த்தக்குளத்தில் மூழ்கித் தானம் கொடுத்தோனால் காயாவில் தானம் கொடுப்பதைவிடக் கூடுதலான பலன் என்று மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார்.

நகரத்தார்கள் தைப் பொங்கல் அன்று விளக்குச் சட்டி எடுத்தல் என்பதை முக்கியமாகச் செய்து வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்தியாவைப் பொறுத்தவரை, ஏன் உலகத்தைப் பொறுத்தவரை  இதுபோன்றதொரு மரபு வேறு எந்த ஒரு சமூகத்திலும் காணப்படவில்லை. விளக்குச் சட்டி விளக்கு எடுத்தல் என்பது நகரத்தார் சமூகத்தில் மட்டுமே இப்பொது காணப்படுகிறது. விளக்கு வைக்க ஒரு சட்டியும் ஒரு மூடியும் இருக்கும். பெண்ணுக்கு வைக்கும் சீர்வரிசையில் கட்டாயம் ஒரு விளக்குச் சட்டி விளக்கு இருக்கும். முன்பு மண்சட்டியாக இருந்துள்ளது. பின்னர் எவர்சில்வர், பித்தளை, வெள்ளி என்று சீர் வைத்தனர். வசதி இருக்கும் வீடுகளில் தங்கத்தினால் விளக்குச்சட்டி விளக்கு வைக்கின்றனர்.

விளக்குச் சட்டி விளக்கின் அடிப்பாகம் சமமாக இருக்காது. அடிப்பாகம் வளைவாக கூம்பாக, முதுமக்கள்தாழி போன்று இருக்கும். இக் காரணத்தினால் விளக்குச் சட்டியைத் தரையில் அப்படியே வைக்க முடியாது. கலவடையை வைத்து அதன்மீதுதான் வைக்க முடியும். சீர்வரிசையில் இந்தச் சலவடையையும் சேர்த்து வைத்திருப்பார்கள். வீட்டிற்கு வந்த மருமகள் முதல் பொங்கல் நாளிலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நாளன்று இந்த விளக்குச் சட்டி விளக்கை ஏற்றிவைத்துக் கும்பிடுகின்றனர்.  தை முதல் நாள் பொங்கல் அன்று, நடுவீட்டில் கோலம் போடுகின்றனர். பொங்கல் வைக்கும் இடத்தில் கோலம் போடுகின்றனர். இதேபோல் விளக்குச் சட்டி வைக்கும் இடத்திலும் கோலம் போடுகின்றனர். இந்த விளக்குச் சட்டி வைக்கும் கோலத்திற்குள் சமையலுக்குப் பயன்படுத்தும் அனைத்துக் காய்கறிகளையும், கருனைக் கிழங்கு,வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, பனங்கிழங்கு, கரும்பு, கண்ணுப்பிள்ளை, ஆவாரம்பூ,சக்கரை வள்ளிக் கிழங்கு,அச்சு வெல்லம், தேங்காய் இவையெல்லாம் வைப்பர். 

நடுவில் ஒரு சின்னப் பிள்ளையாரை வைத்திருப்பர்.  இந்த வழிபாட்டிற்கு என்றே சிறிய வடிவிலான பிள்ளையார் வைத்திருப்பர்.  விளக்குச்சட்டி விளக்குப் பிள்ளையார் என்றே இந்தப் பிள்ளையாருக்குப் பெயர். இரண்டு விளக்கு இருக்கும். அதில் ஒன்று மிகச் சிறிய விளக்கா இருக்கும்.  இந்தச் சிறிய விளக்கில் நெய் ஊற்றித் தீபம் ஏற்றி வைப்பார்கள்.  மற்றொரு விளக்கையும் ஏற்றி வைப்பார்கள். பொங்கல் வைத்து சாமிக்கு எல்லாம் படைத்து வைத்துக் கும்பிட்டதற்குப் பிறகு, விளக்கு சட்டி விளக்கிற்கு என்றே ஒரு இலைபோட்டு வைத்திருப்பார்கள். அதைச் சொளகு (முறம்) கவிழ்த்து வைத்து, கவிழ்த்த முறத்தின் மீது இந்த இலைஉள்ள சாதம், அப்பளம், பொங்கலுடன் படைக்கப்பட்ட அனைத்து படையல் களுடனும் அப்படியே எடுத்து வைப்பார்கள்.  பின்னர் மனைவியும் கணவனும் ஒன்றாகச் சேர்ந்த அந்த முரத்தை அப்படியே எடுத்து மெதுவாகச் சென்று விளக்குச்சட்டி விளக்கு வைக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்வார்கள். பெண்கள் முதலில் செல்வார்கள். பின்னர் ஆண்கள் செல்வார்கள்.

முன்பு வளவுகளில்தான் பொங்கல் வைப்பார்கள். அங்கிருந்து மெதுவாக எடுத்து வருவார்கள். சாமிவீட்டு வாசலுக்கு முன்னாள் வரும்போது, அந்த இரண்டு விளக்குகளையும் ஏற்றி, ஒன்றிற்கு ஒன்று எதிராக இருக்கும்படி அந்த இலைமீது வைப்பார்கள். மெதுவாக வலதுகாலை முதலில் உள்ளே வைத்து நுழைய வேண்டும். சாமி வீட்டில் உள்ள விளக்கிற்கு நேராக இதை வைத்துக் கும்பிடுவார்கள், பின்னர் அந்தச் சிறிய விளக்கை எடுத்து மெதுவாக அந்த விளக்குச் சட்டி விளக்கிற்குள் வைக்க வேண்டும். அதற்குள் பிள்ளையாரைச் சுற்றி எல்லாமும் ஏற்கனவே இருக்கும். இருக்கும் அந்தச் சிறிதளவு இடத்திற்குள்ளாக பிள்ளையாருக்கு எதிரே இந்த விளக்கையும் மெதுவாக வைக்க வேண்டும். மருமகள்தான் இதைச் செய்வார். விளக்குச்சட்டி விளக்கு வைக்கும் போதும் எடுக்கும் போதும் சங்கு ஊதுவார்கள். கரும்பும் (இரண்டு மொழி) பனங்கிழங்கும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும், அதை அப்படியே (கிழங்கை அவிக்கவோ, சுடவோ கூடாது. பச்சைக் கிழங்கைத்தான் பயன்படுத்துவார்கள்) வைத்தாற்போல் மூடி வைப்பார்கள். அந்த விளக்கில் நெய் இருக்கும் வரை தீபம் எறிந்து கொண்டிருக்கும்.

கணவனும் மனைவியுமாகத்தான் இதைச் செய்வார்கள். ஆடி, புராட்டாசி, தை மாதங்களில் பிதுர்கள் வழிபாடு. திருக்குறள் ஒன்று வழிபாட்டு முறை பற்றிக் குறிப்பிடுகிறது. ஒருவனுக்கு ஐந்துபேர்களைக் காக்க வேண்டிய கடமை உள்ளதாகத் தெரிவிக்கிறார்.

“தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்
தான் என்றாங்கு ஐம்புலத்தார் ஓம்புதல் தலை“

என்று திருவள்ளுவர் வழிபாட்டில் முதல்முதலில் தென்புலத்தாரேயே தெய்வவழிபாட்டிற்கும் முன்னதாகக் குறிப்பிடுகிறார். தென்புலத்தார் என்பது முன்னோர்களையே குறிக்கிறது. கண்ணகி கோவலன் உடன் இல்லாததால் வழிபாடு செய்யமுடியாமல் இருந்ததாகக் குறிப்பிடுவாள்.

ஏன் விளக்கை உள்ளே வைக்கிறார்கள்? என ஆராய்ந்து பார்த்தால், முதுமக்கள் தாழியுடன் இது ஒத்துப் போவதை அறிய முடியகிறது. முதுமக்கள் தாழியின் அடிப்பாகமும் சமமாக இல்லாமல் கூர்மையாக இருக்கும். எனவே முதுமக்கள் தாழியை அப்படியே தரையில் வைக்க முடியாது. கீழே கலவடை(பிரிமனை)போன்று ஒன்றை வைத்தே அதன்மீது முதுமக்கள் தாழியை வைத்து மூடியிருப்பார்கள்.

காரைக்குடி செஞ்சையிலும், செட்டிநாட்டிலும் நாங்கள் கண்டுபிடித்த முதுமக்கள் தாழிகளின் அடிப்பகுதியில் கலவடை இருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம். முதுமக்கள் தாழியின் உள்ளே, அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், விளக்கு,(ஒருகாலத்தில் அவர்கள் விளக்கை ஏற்றி தாழியின் உள்ளே வைத்திருந்திருக்க வேண்டும்)  அகல் விளக்கு,தானியங்கள், உணவுகள், பயன்படுத்திய ஆயுதங்கள் எல்லாம் உள்ளே கிடக்கின்றன. எனவே ஒரு மனிதனின் இறப்பிற்குப் பின்னால் அவனை இதுபோன்று முதுமக்கள் தாழியின் உள்ளே வைத்து எல்லாப் பொருட்களையும் வைத்து விளக்கு ஏற்றி வைத்து மூடி வைத்துள்ளதை அறிய முடிகிறது. விளக்குச்சட்டி விளக்கைப் பார்த்தோமானால் முதுமக்கள்தாழி போன்றே உள்ளது. முதுமக்கள் தாழியின் காலம் சங்ககாலத்திற்கும் முன்னாடி, சங்ககாலத்தை ஒட்டி எனக் கணித்துள்ளனர். எனவே விளக்குச்சட்டி விளக்கு எடுக்கும் இந்த விழாவும் சங்ககாலம் முதற்கொண்டு தொன்று தொட்டு நகரத்தார்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

விளக்குச்சட்டி விளக்கைக் கொண்டுபோய் வைப்பதற்கு முன்னாடியே, விளக்கை வைக்கும் இடத்தில் நூலினால் கோலம் போடுவார்கள். இதற்காக ஏடுகளில் கட்டியிருக்கும் நூலை எடுத்து அரிசிமாவில் நனைத்து எடுத்து சுற்றில் ஒரு செவ்வகம் அதன்மேல் ஒரு முக்கோணம் வீடுபோல் கோலம் போடுவார்கள்.  கணவனும் மனைவியும் சேர்ந்துதான் இதையும் செய்வார்கள். நூலின் ஒரு நுனியைக் கணவனும்,மறு நுனியை மனைவியும் பிடித்துக் கொள்ள, அப்படியே அந்த நூலைப் பிடித்து சுண்டிவிடுவார்கள்.  நூலில் உள்ள மாவு சுவற்றில் ஒட்டிக் கொள்ளும். இதைத் தும்பு (தும்பு என்றால் கயிறு) பிடித்தல் என்கின்றனர்.

நடுகல் பற்றி, தொல்காப்பியத்தில், காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல் என வருகிறது. பெரும்படை வாழ்த்தல் வழிபடுதல். வீட்டிற்குள்ளேயே முன்னோர்களை வரவழைத்துக் கும்பிடுவதைக் குறிப்பிடுகிறது. விளக்கை விளக்குச்சட்டியின் உள்ளே வைக்கும் போது சங்கு ஊதுகின்றனர். பின்னர் சாமியைக் கும்பிட்டுச் சாப்பிடுகின்றனர். முதுமக்கள் தாழியை முழுமையாகப் பார்த்தவர்களுக்கும், விளக்குச்சட்டி விளக்கு எடுத்தல் நிகழ்ச்சியை முழுமையாகப் பார்த்தவர்களுக்கும்தான்  இவற்றின் ஒற்றுமை முழுமையாக விளங்கும். வீட்டில் உள்ள வளவில்தான் பொங்கல் வைப்பார்கள். பொங்கல் வைத்த முடித்தவுடன் பொங்கல்பானைக்கு எதிரில் வைத்துப் படைத்துவிட்டு பின்னர் விளக்குச்சட்டி விளக்கை எடுத்து உள்ளே வைத்த பின்னர், சாமியைக் கும்பிட்டு விட்டே, பொங்கல் சாப்பிடுகின்றனர்.

எனவே பொங்கல் விழாவில் முன்னோர் வழிபாடே பிரதானமாக உள்ளது. நகரத்தார்கள் தொன்று தொட்டு இதனைச் சிறப்பாகச் செய்து வருகின்றனர். இந்த வழிபாட்டின் வழியாக நகரத்தார்கள் பொங்கல் அன்று முன்னோர்களை (நீத்தார்களை)யே முதலில் வணங்குகின்றனர். பின்னரே அவர்கள் தெய்வத்தை வணங்குகின்றனர். அதன் பின்னரே அவர்கள் பொங்கல் உண்கின்றனர். விளக்குச்சட்டி விளக்கிற்கும், முதுமக்கள் தாழிக்கும் உள்ள தொடர்பை கோவையில் நடைபெற்ற ஆவணம் கூட்டத்தில் விளக்கிக் கூறினேன்.  வளவில் பொங்கல் வைத்து பால்பொங்கியவுடனேயே சூரியனை வழிபாடு செய்கின்றனர்.


குறிப்பு:
காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் நா.வள்ளி அவர்கள் சொன்னபடி, கி.காளைராசன் எழுதியது.



 
கி.காளைராசன்
முனைவர் கி.காளைராசன்
kalairajan26@gmail.com

No comments:

Post a Comment