Wednesday, December 9, 2015

வட்டெழுத்துகளுடன் 1200 ஆண்டுகள் பழைமையான ஐயனார் சிற்பம் கண்டுபிடிப்பு

-- தென்கொங்கு சதாசிவம். சு.





திருப்பூரில் இயங்கிவரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த சு.வேலுச்சாமி, க.பொன்னுச்சாமி, சு.சதாசிவம் மற்றும் பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகியோர் திருப்பூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள கொடுவாயில் உள்ள நாகீஸ்வரர் கோவிலில் வட்டெழுத்துகளுடன் 1200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஐயனார் சிற்பத்தைக் கண்டறிந்துள்ளனர்.

இதைப் பற்றி ஆய்வு மையத்தின் இயக்குநர் பொறியாளர் சு.ரவிக்குமார் மேலும் கூறியதாவது பண்டைய காலத்தில் தரைவழிப் பயணம் மேற்கொண்டு வணிகம் செய்தவர் சாத்துவர் என்றும், கடல் வழிப்பயணம் மேற்கொண்டு வணிகம் செய்தவர் நாயகர் என்றும் அழைக்கப்பட்டனர். பண்டைய காலத்தில் வணிகம் செய்த வணிகர்கள் தங்களின் காவல் தெய்வமாக ஐயனாரை வழிபட்டனர். அவ்வணிகர்கள் தாங்கள் பயணம் செய்து வணிகம் செய்யும் பெருவழிகளில் இவ்வய்யனார் சிலைகளை அமைத்து வழிபாடு செய்தனர். அந்த வகையில் தமிழகத்தின் பண்டையப் பெருவழிகளில் முக்கியமானதும் சங்க காலத்தில் மேலை நாட்டாரும் சேரர் கடற்கரை தலைநகராம் முசிறியில் இருந்து சோழர் துறைமுகத் தலைநகரான பூம்புகார் வரை (முசிறி (பட்டணம்), பேரூர், வெள்ளலூர், சூலூர், பல்லடம், காங்கேயம், கரூர், உறையூர் வழியாகப் பூம்புகார் வரை சென்றது).  பயணம் செய்து வணிகம் செய்த சிறப்பு மிக்க பெருவழியான இராசகேசரிப் பெருவழியருகே இவ்வட்டெழுத்துக்களுடன் கூடிய ஐயனார் சிற்பம் காணப்படுவது சிறப்புடையதாகும். இச்சிற்பம் 105செ.மீ உயரமும், 75 செ.மீ அகலமும் உடையதாகும்.

ஐயனார் பீடத்தின் மீது வலது காலை மடித்து வைத்த நிலையிலும், இடது காலைக் குத்திட்டு வைத்து அதன் மீது இடது கையை வைத்தபடியும் (சிதைந்து உள்ளது), வலது கையில் செண்டு (ஆயுதம்) பிடித்த படியும் மகாராஜ லீலாசனத்தில் உள்ளார். தலை ஜடாபாரம் அலங்காரத்தில் உள்ளது. காதில் குதம்பை என்னும் பத்ர குண்டலமும், கழுத்தில் கண்டிகை, சரப்பளி, வீரச்சங்கிலி என மூன்று அணிகலன்களையும் அணிந்துள்ளார். இடுப்பில் உதரபந்தமும், கையின் மேற்பகுதியில் தோள்வளை, கீழ் பகுதியில் சூடக வகை அணிகலன்களும், இடையில் அரைஞான் எனப்படும் கடிசூத்ரம் அணிந்துள்ளார். இடையணியாக அரைப்பட்டிகை என்ற அழகிய ஓர் அணியை அணிந்துள்ளார். இடுப்பில் கொசுவம் வைத்த நிலையில் மரவுரி அல்லது பஞ்சாடை அணிந்துள்ளார். காலில் வீரத்திற்கு அடையாளமாக மணியொன்று காட்டப்பட்டுள்ளது. இதற்க்கு வீரக்கழல் என்று பெயர். பாதத்தில் அணியாக அரியகம் எனப்படும் காற்சதங்கை அணிந்துள்ளார். சிற்பத்தின் மேற்பகுதியில் இரண்டு சேடிப்பெண்கள் சாமரம் வீசும் நிலையில் உள்ளனர்.

இவ்வட்டெழுத்துகளைப் படித்த உலகின் தலை சிறந்த தொல்லியல் அறிஞர்களுள் ஒருவரும் தமிழகத் தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குநருமான முனைவர் ர.பூங்குன்றனார் இரண்டு வரிகளில் உள்ள இவ்வெழுத்துக்கள்

“ஸ்ரீ முல்லை பதகி நாகமுழு(க்)
கோ புன கணமா(ன்) ஏற்றை சாத்தன்”


 என்று வருகிறது என்றார். கொங்கு மண்டலம் பெரும்பாலும் முல்லை நிலமாக உள்ளது அந்த நிலம் குறிக்கப்பட்டுள்ளது, கணமான் என்பது ஒரு குலத்தின் தலைவனைக் குறிக்கலாம். புனம் திணையைக் குறிக்கும் சொல், ஏற்றை என்பது காளைகளைக் குறிக்கலாம் என்றும், சாத்தன் என்ற பண்டைய தரைவழி வணிகக் குழுவின் பெயரில் முடிவது மிகச் சிறப்பாகும் என்றார். மேலும் எழுத்து அமைப்பு, பிற்கால ஐயனார் சிலைகளில் காணப்படும் இரண்டு மனைவிகள், யானை, நாய், பன்றி போன்ற விலங்குகள் இல்லாமையாலும் இது கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும் என்றார்.


 
 
தொல்லியல் முனைவோர் 

திரு. தென்கொங்கு சதாசிவம். சு

thenkongu@gmail.com


 

No comments:

Post a Comment