Tuesday, December 31, 2013

வங்காளத்தின் இராணி பவானி - பவள சங்கரி


பவள சங்கரி திருநாவுக்கரசு

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வங்காள நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் உரிமையுடன் உச்சரிக்கப்பட்ட ஒரு பெருமை வாய்ந்த பெயர் என்றால் அது ராணி பவானி என்பதுதான்.


தன்னுடைய நிர்வாகத் திறன், அரசியல் செல்வாக்கு மற்றும் தாராள குணம்  மூலமாக இன்றும் அந்த மக்களின் மனதில் நிலையானதொரு இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர். ரமாகந்தா என்ற ராஜ்ஷாகியைச் சேர்ந்த ஜமீந்தாரின் மனைவி இவர். ஜமீந்தார் ரகுநந்தன் அவர்களின் மகன் தான் ரமாகந்தா. வடக்கு வங்காளத்தின் நட்டோர் சொத்துகளின் நிறுவனரின் தத்துப் பிள்ளை. ரமாகந்தாவின் திறமையற்ற நிர்வாகத்தினால் இவர்கள்  பல சொத்துகளையும் இழக்க நேரிட்டது. 1746ம் ஆண்டில் ரமாகந்தா இறந்த பின்பு, அவருடைய மனைவி, இராணி பவானி தேவி என்று அனைவராலும் போற்றப்பட்டவர் ஜமீந்தாரினியாக பொறுப்பேற்றார்.  பின்பு   தம் பொறுப்புகளை உணர்ந்து  சொத்துகளையும் காப்பாற்றினார்.   ஒரு பெண் இத்துனை பெரிய பொறுப்பேற்பது நடைமுறையில் அரிதாக இருந்த காலம் அது. இக்காலத்திலும் கூட வெவ்வேறு வடிவங்களில் இது தொடரத்தான் செய்கிறது. ஆனால் ராணி பவானி தேவி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மிகத் திறமையாக அந்த பிரமாண்டமான சொத்துகளை நிர்வகித்து வந்திருக்கிறார். தன்னுடைய கட்டுப்பாடான தனிப்பட்ட வாழ்க்கை முறைமைகளாலும், மக்கள் மீது கொண்ட இரக்கம் மற்றும் தயாள குணத்தினாலும், அனைவராலும் மிகவும் விரும்பப்பட்டார் அவர். வங்காள நாட்டில், கோவில்கள், விருந்தினர் மாளிகைகள் மற்றும் சாலைகள் போன்றவைகள் கட்டுவதன் மூலமாக அவர் ஆற்றிய பணிகள் ஏராளம். பல்வேறு நீர்த் தொட்டிகள் கட்டுவதன் மூலமாக, மிக முக்கியமான தண்ணீர்ப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்.  அத்தோடு பல கல்வி நிறுவனங்கள் கட்டியதன் மூலமாக கல்விப் பணியையும் செவ்வனே கவனித்து வந்திருந்தார்.



ராணி பவானி போக்ரா மாவட்டத்தில், தானா ஆடம்டிகியின், சாட்டின் கிராம் என்னும் இடத்தில் 1715ம் ஆண்டு பிறந்திருக்கிறார். இவருடைய வாழ்க்கை சற்று போராட்டம் நிறைந்த ஒன்றாகவே இருந்திருக்கிறது. கணவர் ராமகாந்தா இறந்த 1746ம் ஆண்டிற்கு முன்பே இவர் அந்த சொத்துக்களின் பாதுகாவலராக, சொந்தக்காரராக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்.  அதற்குக் காரணம் ராணி பவானி தேவியின் நிர்வாகத் திறமையே. கணவர் இறந்த போது அவருக்குத் தாரா என்ற ஒரு மகள் மட்டும் இருந்திருக்கிறார். அவரை ரகுநாத லாகிரி என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்திருக்கிறார். சொத்துக்களை நிர்வகிக்கும் பணியையும் இவரே மேற்கொண்டிருக்கிறார். ஆனால் விதிவசத்தால் 1751ம் ஆண்டிலேயே, குழந்தை இல்லாத தம் இளம் மனைவியை விட்டுவிட்டு  திடீரென்று இறந்துவிட்டார் ரகுநாத லாகிரி. அதன் பின் மீண்டும் இராணி பவானி தேவியின் கைகளிலேயே அனைத்துப் பொறுப்புகளும் வந்து சேர்ந்தது. மீண்டும் தம் கடுமையான உழைப்பினாலும், நிர்வகிக்கும் திறனாலும் சொத்தை மேலும் பன்மடங்காகப் பெருக்கியுள்ளார். கோடிக்கும் அதிகமாக வருமானம் வரும் வகையில் அதனை செவ்வனே நிர்வகித்திருந்தார். தன்னுடைய 79வது வயதுவரை அதற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.



ஆனாலும் பவானியின் வாழ்க்கை முறை மிக எளிமையும், ஒழுங்கு முறை மாறாத ஒன்றாகவுமே இருந்தது. அன்றாடம் விடியலில் தொடங்கும் அவருடைய பொழுது வெகு நேரம் காலை பூஜையில் கழியும்.  அதன் பிறகு பத்து பிராமணர்களுக்குத் தானே சமைத்து அவர்களுக்குப் பரிமாறிவிட்டு தன் காலை உணவு உண்ணவே மதியம் ஆகிவிடும். உடனடியாக அலுவலகம் வந்து அன்றைய நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கானத் திட்டங்களை வகுத்து,  சம்பந்தப்பட்டவர்களுக்கு அப்பணியை இட்டுத் திரும்புவார். பின் மாலை நேரங்களில் கதாகாலட்சேபங்களும், சுலோகங்களும், கேட்பது வழக்கம். அதன் பிறகு அவருடைய நிறுவனத்தின் மேலாளர் வந்து கையெழுத்து வாங்க வேண்டிய கோப்புகளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, அடுத்து செய்ய வேண்டிய பணிகள் குறித்த பேச்சு வார்த்தைகளும், மற்ற தொடர்புகள் குறித்தும் பேசி அனுப்புவார். பின் ஆற்றங்கரைக்குச் சென்று மண் விளக்கில் நெய் ஊற்றி தீபமேற்றி வழிபாடு முடித்து, கொஞ்சம் போல சிற்றுண்டி ஏதாவது உண்டு முடித்து மீண்டும் அலுவலகம் வந்துவிடுவார். இந்த நேரத்தில்தான் பார்வையாளர்களும், குடியிருப்பவர்களும் தங்கள் வேண்டுதல்கள் மற்றும் வருத்தங்களைச் சுமந்தபடி ஆறுதல் தேடி அம்மையாரிடம் வருவது வழக்கம். இவையெல்லாம் முடிய இரவு 10 மணிக்கு மேல் ஆனாலும் அதன் பிறகு குடும்பத்தில் உள்ளவர்களின் நலம் குறித்து விசாரித்துவிட்டே ஓய்வெடுக்கச் செல்வார். காசிக்குச் செல்லும் பெரும்பாலான மலைப்பாதைகளும், ஆன்மீகப் பயணம் செல்பவர்கள் தங்குவதற்கான பல விடுதிகளும் இராணி பவானி அம்மையார் மூலம் கட்டமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வங்காளத்தில், தங்களுக்குச் சொந்தமான, கங்கைக் கரையிலிருக்கும் பல கிராமங்களின் நிலங்கள் ஏழை பிராமணர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. பவானிப்பூர் தாரா அம்மன் கோவிலின் புணரமைப்பின் பெரும்பான்மையான பங்கு  இவருடையது.  போக்ரா மாவட்டத்தின் ஷேர்பூர் உபசில்லா எனும் இடத்தில்  பவானிப்பூர் என்ற சக்தி வழிபாட்டுத் தளமான அம்மன் கோவில் அமைந்துள்ளது. இவருடைய  50.42 ஏக்கர் பரப்பளவில் உள்ள அற்புதமான வடிவிலான வீடு, இன்றும்  சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. சுற்றியிருந்த அகழிகளின் பெரும் பகுதி பூந்தோட்டம் மற்றும் பழத்தோட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.  1795ம் ஆண்டில் இராணி பவானி மறைந்த பின்பு அவருடைய வளர்ப்பு மகன் இராமகிருஷ்ணா இந்தப்பகுதியை ஆண்டு வந்தார்.






2 comments:

  1. முன்பின் பேசிக்கொள்ளாமல் வங்காள வரவு இரண்டு. நமது ரானி மங்கம்மா மாதிரி தான் ராணி பவானி அம்மா. நான் பவானிப்பூர் அம்மனை தரிசித்ததாக நினைவு.
    அந்த காலத்தில் இம்மாதிரியான முன்னோட்டம் செய்த பெண்ணரசியை பாராட்டத்தான் வேண்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள், பவள சங்கதி (ரி)!

    ReplyDelete
  2. அன்பின் ஐயா,

    தங்களுடைய வாசிப்பிற்கும், கருத்துரைக்கும், அன்பான வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete