Tuesday, February 20, 2018

இராமேசம்


——   இராம.கி.

திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம் 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (~ கி.பி.1230) செல்லிநகர்ப் பெரும்பற்றப்புலியூர் நம்பியால் இயற்றப்பட்டது. பிறவாயாக்கைப் பெரியோனின் 64 திருவிளையாடல்களை விவரிக்கும் நூல்களில் இதுவே தமிழில் முதலெழுந்ததாய்த் தெரிகிறது. நம்பியார் புராணத்தை ஏட்டுச்சுவடியிலிருந்து அச்சுநூலாக முதன்முதல் 1906 இல் வெளியிட்டவர் உ.வே.சா. ஆவார். அதன் மறுபதிப்பு உ.வே.சா. நூலகத்தால் 1972 இல் மீண்டும் வெளியிடப்பெற்றது. இதற்குமுன் முழுதாகவன்றி அங்குமிங்கும் உதிரி உதிரியாய்ச் சில செய்திகளைத், தேவாரம், கல்லாடம், திருவாசகம் போன்றவற்றில் அறியலாம். இதற்கப்புறம் எழுந்த பல நூல்களில் கி.பி. 1660 இல் எழுந்த பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணமும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதாகும்..

அது என்னவோ தெரியவில்லை. பின்னவர் நூலையே பலரும் இக்காலத்திற் பேசுகிறார். ஆனால் உள்ளீடு பார்த்தால், அக்காலச் செய்திகளை (குறிப்பாகப் பாண்டியன் கடுங்கோன், அவனுக்கும் முந்தைய களப்பாளர் காலச் செய்திகளை) அறிய பரஞ்சோதியார் நூலை விட நம்பியார் புராணமே பயனுள்ளது. (இதன் pdf படியை முனைவர் ழான்லுக் செவ்வியார் எனக்கு அனுப்பிவைத்தார். மாணிக்கவாசகர் காலம் பற்றிய என்னாய்விற்கு இந்நூலே பெரிதும் உதவியது.) தமிழறிஞரில் மிகப் பலர் நம்பியார் புராணத்தின் பயன்பாட்டை உணர மறுக்கிறார். என்னைக்கேட்டால் திருவாலவாயுடையார் புராணத்தை  மீளாய்வது பயன்தரும். உருப்படியாக ஆய்வுசெய்யத் தான் நம்மூரில் ஆளில்லை. தமிழாய்வு பெரிதும் தளர்ந்துள்ளது. நானிங்கே சொல்லவருவது வேறு.

உ.வே.சா. வெளியீட்டின் முகவுரையில் பாண்டி நாட்டுத் தேவாரத்தலங்களாய் 14 தலங்களைக் குறிப்பிடும் வெண்பாவொன்று வரும்..

கூடல் புனவாயில் குற்றால மாப்பனூ
ரேடகநெல் வேலி யிராமேச - மாடானை
தென்பரங்குன் றஞ்சுழிய றென்திருப்புத் தூர்கானை
வன்கொடுங்குன் றம்பூ வணம்

இங்கு காட்டப்படும்  “இராமேசத்தின் பழைய பெயரென்ன?” என்று எழும் கேள்விக்கு . . .  இதன் விடையோடு தொடர்புடைய மற்ற செய்திகள் பலருக்கும் பயன்படுமென்று எண்ணி இங்கே பதிகிறேன். முதலில் ஈசம் என்ற சொல்லின் பொருளறியவேண்டும். (சிவன்கோயில்கள் பலவும் ஈசமென்றே சொல்லப்படும்.) ஈசமென்பது திசைதொடர்பான சொல். திசைகள்பற்றிய என் பழந்தொடரின் 3 ஆம் பகுதியில் (http://valavu.blogspot.in/2008/04/3.html) ஈந்து>ஐந்து>ஐந்திரம், கிழக்குத்திசை குறிக்குமென நிறுவினேன்.

ஈந்து>ஈத்தின் தொடர்பாய் ’ஈசம்’ எழுந்து, வடகிழக்கைக் குறிக்கும். ஈசன்/சிவன் வடகிழக்குத் திசைக்கு உரியவனென்றே மனையடிநூலில் சொல்லப்படும். இந்தியப் பெருநிலத்தின் வடகிழக்கிற்றான் குயிலாலுவ>கயிலாலுவ மலையுள்ளது. சிவன் அம்மலையில் உள்ளதாகவே தமிழரிற் பலரும் தொன்மஞ் சொல்வர். கயிலாயமன்றி ஈசன் திருவுரு அமைந்த இடங்களும்/கோயில்களும் கூட ஈசமென்றே அழைக்கப்பட்டன. ஈசத்தைச் சங்கதம் வகரஞ் சேர்த்து ஈஸ்வமாக்கும். இதேபோல் ஈசனை தமிழ்முறைப்படி மதிப்புக்கூட்டி ஈசராக்கி சங்கத முறைப்படி ஈஸ்வராக்குவர். ஈஸ்வரிலிருந்து தமிழ்முறைப்படி ஈஸ்வரம்>ஈச்சுரம் ஆகும். இப்படித் தமிழும் சங்கதமும் மாறிமாறி ஊடாடியே சிவன் கோயில்களுக்கான பெயரெழுந்தது. சங்கதம் பழகவேண்டாமெனில் ஈசமே நமக்குப் போதும். 




சிவனுக்கெனச் சொல்லப்படும் 12 சோதிலிங்கங்களில் இராமேசத்தைத் தமிழ்நாட்டிலும், சோமேசத்தைக் கூர்ச்சரத்திலும், நாகேசம், குசுமேசம் போன்றவற்றை மராட்டத்திலும், விசுவேசத்தை உத்திரப் பிரதேசத்திலும் பொருத்துவர். இவையத்தனையும் ஈசமென்று முடியுந் தலங்கள். அகரமும் ஈகாரமுஞ் சேர்ந்து வடமொழிப் புணர்ச்சியில் ஏகாரமாகும். இதுபோக, வித்தநாதம் (வைத்யநாதம்), வீமநாதம் (பீமநாதம்), திரியம்பகமென்ற 3 தலங்கள் மராட்டத்திலும், திருப்பருப்பதம் (சிரீசைலம்) ஆந்திரத்திலும், ஓங்காரம், உஞ்சை (உச்செயினி) மத்தியப் பிரதேசத்திலும், கேதாரம் உத்திரப்பிரதேசத்திலும் காட்டப்படும். இராமேசத்தில் 2 இலிங்கங்கள் உண்டு, முதல் இலிங்கம் மணலால் ஆனது. இரண்டாவது கல்லால் ஆனது. முதலாவதைச் சீதை பிடித்துவைத்தாள் என்றும், இரண்டாவதை அனுமன் வடக்கிருந்து கொண்டுவந்தானென்றுஞ் சொல்லப்படும். (தொன்மக்கதைகள் உண்மையா, இல்லையா என்ற சிக்கலுக்குள் நான் போகவில்லை. நம்புபவனுக்கு அவை உண்மை.)



இராமேசக் கோயில் தேவாரகாலத்தில் மிகச்சிறிதே. இன்றுள்ள மண்டபங்கள், சுற்றாலைகள் எல்லாம் அன்றில்லை. மிஞ்சிமிஞ்சிப் போனால் கருவறையைச் சுற்றி ஒரு சுற்றாலை இருக்கும். 12 ஆம் நூற்றாண்டில், பாண்டியரின் தாயாதிச் சண்டையில் ஊடுவந்த ஒரு சிங்கள மாமன், மன்னன் பராக்கிரம பாகுவே பழங்கோயிலை இடித்து இன்றுள்ள கோயிலின் அடிப்படை அடவை உருவாக்கினான் என்பர். (நாம் விரும்பினாலும், விரும்பாவிடினும், தமிழர்-சிங்களர் ஊடாட்டம் நம் வரலாற்றில் நெடுகவேயுண்டு. இதைத் தவிர்க்கமுடியாது. அவனுக்கு நாம் பெண் கொடுத்தோம், அவன் வீட்டில் பெண் எடுத்தோம். அது தொடர்கதை.) 

கோயில் இறைவர்பெயர் இராமநாதர் (மணல் இலிங்கத்திற்கு அது பெயர்.). அவருக்கு முன்னிருக்கும் கல் இலிங்கத்திற்கு இராமலிங்கமென்று பெயர். (எத்தனை பேருக்குத் தெரியுமென்று தெரியவில்லை. இராமசாமியெனில் அது பெருமாளைக் குறிக்கும். இராமநாதனெனில் சிவனைக் குறிக்கும். இவன் ”ரம்மிய”மானவனா? அன்றி இராமனுக்கு நாதனா? என்பது பார்வையைப் பொறுத்தது. இறைவி பெயர் மலைவளர் காதலி,(பருப்பத/பர்வத வர்த்தினி என்பது சங்கதவாக்கம்.). கோயிலுக்குள் உள்ள பல்வேறு நீர்நிலைகள் உப்புநீர் மேல் கூடியுள்ள நன்னீரால் ஏற்படுவது. இன்று நம்மூர் ஐயர்கள் இங்கு கிடையாது. பண்டாக்கள் என்னும் மராட்டியக் குருக்களேயுண்டு. இது வரலாற்றிலேற்பட்ட விசயநகர, மராட்டிய, நாயக்கர் தாக்கம் என்றெண்ணுகிறேன். இன்றுள்ள மண்டபங்கள் எல்லாம் இவர்களால், பின்வந்த சேதுபதிகளால், எழுந்தது. மூன்றாம் சுற்றாலை மிகப் பெரிது. கோயிலிற் கூட்டம் சொல்லிமாளாது. ஒரே இரைச்சல். அங்குமிங்கும் ஓட்டம். எங்கும் பார்த்தால் நீர்ச்சகதி.

காசிக்கும், குமரிக்கும் (அப்படித்தான் சோழர்காலக் கல்வெட்டெல்லாம் சொல்கிறது) சொல்லப்பட்ட இடையுறவு எப்படியோ காசிக்கும், இராமேசத்திற்குமாய் மாறி விட்டது. எப்பொழுது மாறியதென்பது சுவையான ஆய்வு. ஒருவேளை பாண்டியராட்சி முடிந்தபின் ஏற்பட்டதோ, என்னவோ? கோயிலுக்குள் இந்தியே இங்கு அன்றாட மொழியாய்த் தெரிகிறது. விரைவு வண்டிகளில் நம்மூர்க்காரரை விட வடவர் கூட்டமே மிகுந்துள்ளது. கோயிலின் கிழக்குவாசலுக்குமுன் நீராடுங்கடலில் குப்பைகளும், மாசுகளும் நிரவிக் கிடக்கின்றன. இதை யாராவது சரிசெய்தால் என்ன என்று தோன்றுகிறது. ”ஸ்வட்ச் பாரத்” எங்கு போயிற்றென்று தெரியவில்லை. இன்னுங்கூட மரங்களைநட்டுத் தீவைச் சற்று சரி செய்யலாம். வறட்சி கூடிவருகிறது. தண்ணீர்த் தட்டுப்பாடு பெரிதாகவேயுள்ளது. கோயிலில் தெரிசனத்தை முடித்தபின், அப்துல்கலாம் நினைவகத்தில் கூட்டம் கூடுகிறது. தீவின் பொருளியல் வளர்ச்சியில் அதுவொரு மாற்றம். 

தேவாரகாலத்தில் இராமேசம் ஒரு தீவில்லை. (ஏனென்று கீழே சொல்கிறேன்.) இராமநாதபுரத்திலிருந்து கடலுக்குள் நீண்டுசெல்லும் துருத்தியாகவே அதுவன்று இருந்திருக்கலாம். துருத்தியின் முடிவில் வில்வடிவில் பாதி முழுகியும் முழுகாதும் நிலமிருந்து அப்பக்கம் மன்னாரை இணைத்தது. அதையே சேது என்றார். மன்னாருக்கு அடுத்தது திருக்கேதீச்சுரம். வில்வடிவின் தொடக்கமான விற்கோடியை தனுஷ்கோடியென சங்கதத்தில் பெயர்த்துச் சொல்வார். (விற்கோடியைத் தொல்முதுகோடி என்று சிலர் சொல்லமுற்படுவது புரட்டு. அகநானூறு சொல்வது இந்த இடமில்லை. அது திருமறைக்காட்டிற்கு அருகிலுள்ள கோடிக்கரை. அதைப்பற்றி வேறு இடங்களில் நான் நெடுகப் பேசியுள்ளேன். மீண்டும் இங்கு பேசிப் பொரித்தெடுக்க வேண்டாமென விடுக்கிறேன்.)

இன்று இராமேச்சுரத்திலிருந்து விற்கோடி வரை தமிழக அரசினர் உருப்படியான சாலை ஒன்றைப் போட்டுள்ளார். ஒருமாதம் முன் இராமேசம் போனபோது இதைப் பார்த்தேன். வியந்துபோனேன். இப்பொழுது இராமேசம் வருவோர், தானியை எடுத்துக்கொண்டு விற்கோடி வரை போய்வருகிறார். அடுத்தமுறை நீங்களும் போய்வாருங்கள். பார்த்து வியக்கவேண்டிய ஓரிடம். துருத்திக்குள் நடந்து சென்று இந்தியமுனை தொடும்போது, அங்கிருந்து வில் வளர்வதை நன்றாகவே உணரமுடியும் , நாசா வெளியிட்ட படத்திலும் இதைப்பார்க்கலாம். இது மாந்தன் செய்த சேது என்பதை மட்டும் நான் ஏற்கேன். வானம் தெளிவாகி, பார்வை கூர்மையாகி, கையில் தோற்றப்பெருக்கி இருக்குமானால், அந்தப்பக்கக் கோடியில் நிலத்தைப் பார்க்கலாம்.



சம்பந்தர் காலத்தில், இன்றிருப்பதைவிட 2,3 மீட்டர்கள் கடலாழம் குறைந்திருக்கும். துருத்தி இன்னும் சில கிலோமீட்டர் நீண்டிருக்கும். வெகு எளிதில் சம்பந்தர் கேதீச்சுரம் பார்க்கும் தொலைவிற்குப் போயிருப்பார். இந்தப்பக்கத்திலிருந்து அவர் திருக்கேதீச்சுர விமானத்தைக் கூடப் பார்த்திருக்கலாம். யார்கண்டார்? (இராமேசம் அன்று தீவில்லை என்று ஏன் சொன்னேன்? தீவாயிருந்தால், படகு வைத்தல்லவா இராமேசம் போயிருக்கமுடியும்? பின் அதேபடகில் திருக்கேதீசம் போக என்ன சிக்கல்? ஆனால் அவர் போகவில்லையே? இங்கிருந்தே கேதீசத்திற்கும் திருகோணமலைக்கும் பதிகம் பாடிவிட்டாரே? இத்தனைக்கும் அருகில் பாண்டிய அரசி மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் கூட இருந்தாரே? அப்படியென்றால் என்ன பொருள்? கேதீசத்தை விற்கோடியிலிருந்து பார்க்கமுடிந்தது. இடையில் கடல். பிள்ளையை வைத்துக்கொண்டு இக்கு (risk) எடுக்க அரசியும், அமைச்சரும் விரும்பவில்லை. அதேபொழுது இராமநாதபுரத்திலிருந்து நடந்தே, அல்லது ஊர்திவழி நகர்ந்தே, இராமேசம் வரமுடிந்தது என்று தானே பொருள்?

மயிலை சீனி வேங்கடசாமியும், 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, குறிப்பிட்ட விழாநாட்களில் இராமேசத்து இராமலிங்க ஊருலவரைத் தூக்கிக்கொண்டு இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் வரை வந்து, அங்கு ஒருநாள் வைத்திருந்து கோயிலுக்கு மீண்டும் எடுத்துச்செல்வரென்று தெளிவாக ஆதாரத்துடன் பதிவுசெய்வார். ஆகப் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை இராமேசம்  தீவல்ல. வெறும் துருத்தி. பார்த்தீர்களா? இவ்வளவு சொன்னேன். இராமேசத்தின் மறுபெயர் சொல்ல விட்டேனே? ஒருகாலத்தில் எங்கள் அரசர்களின் குடும்பப் பெயர் சேதுபதி. அவர்கள் சேதுக்கு ”பதி”. சேது என்பது முன்னால் சொன்னேனே அந்த விற்கோடிக்கு அப்புறம் உள்ள இயற்கை இணை. சேதுள்ள ஊர் சேதூர். அந்த ஊருக்குப் போகும் 2 விரைவுவண்டிகளின் ஒன்றின் பெயர் இராமேசுரம் விரைவி, இன்னொன்று சேது விரைவி. சேதுதான் அந்தவூரின் மாற்றுப்பெயர். இராமநாதபுரச் சீமையில் யாரைக் கேட்டாலும் இம்மாற்றுப்பெயரைச் சொல்வர்.

”சேதுவை மேடுறுத்தி வீதிசெய்வோம்” என்றான் பாரதி.
”சேடனென்னப் பொலிந்தது சேதுவே” கம்பரா. சேதுப. 66
“சேதுவின் இராமநாதனை நிறுவிய காதையை” என்பது சேதுபு.அவை.1
“சேதுகாவலன் திருவணை காவலன்” கல்லாடம்.
“சேதுபுராணம்” என்பது 16 ஆம் நூற்றாண்டில் நிரம்பவழகிய தேசிகரால் பாடப்பெற்ற இராமேசுரப்புராணம்.


________________________________________________________________________
தொடர்பு: இராம.கி. <poo@giasmd01.vsnl.net.in>
http://valavu.blogspot.com





No comments:

Post a Comment