Sunday, November 14, 2021

மகிழ்வின் நாட்கள்


-- முனைவர் அ.சுகந்தி அன்னத்தாய்





தென்னகத்து சீமையிலே
இலந்தைக்குளம் கிராமத்திலே
வாழையடி வாழையென
ஏழுதலைமுறை கண்ட
முப்பாட்டன் பரம்பரையில்
ஆறாம் தலைமுறையாய்
வந்துதித்தோம் அனைவரும்
அன்பான வாரிசுகளாய்!

ஒரு மரத்துக் கிளைகளாய்
அடுத்தடுத்து வீடு இருக்க
ஒரு கூட்டுப் பறவைகளாய்
ஒன்றிணைந்து வாழ்ந்திட்ட
உறவுக் கூட்டமே எம் குடும்பம்!

மேலவீட்டுத் தாத்தா வாரிசுகளும்
நடுத்தாத்தா  வகையறாக்களும்
சின்னத்தாத்தா வீட்டுச் சிறுசுகளுடன்
மொட்டைமாடி நிலவொளியில்
சோறு உண்ட  நாட்கள்தான்
நிறைவான நாட்களாய்
நெஞ்சினிலே நிழலிடுதே! !

வகைவகையாய் அப்பாக்கள்
வாங்கிவந்த பண்டங்களையும்
வக்கனையாய் அம்மாக்கள்
ஆக்கி வைத்த வெஞ்சனங்களையும்
ஆவலாய் கடைபரத்த
ஆளாளுக்கு அள்ளி எடுத்துண்ட
மகிழ்ச்சிதான் என்னே என்னே!

விடியற்காலை நேரத்தில        
வெள்ளத்தாயம்மா டீக்கடையில
டீ ஒன்றைக் குடித்துவிட்டு
வெந்த மொச்சையையும்
சுடசுட தோசையும்
எஜமாந்தொர  பெரியப்பா
எட்டு ரூபாய்க்கு வாங்கிவந்தா
எட்டூருக்கும் மணக்குமன்றோ!

கயத்தாரு காரச்சேவும்
கழுகுமலை தேன்குழலும்
ஓலைப்பெட்டி சில்லுமிட்டாயும்
கோவில்பட்டி கடலைமிட்டாயுமென
ஜமாந்திக்குப்  போய்வரும்
ஜட்சப்பா வாங்கி வந்தா
சட்டென காலிபண்ண
ஈப்போல மொய்ப்போமன்றோ!

மாட்டுத் தொழுவத்தில
கறந்து வைச்ச பசும்பால
காய்ச்சி இறக்கும்முன்னே
தூக்கி குடிச்சதுவும்
கன்னுக்குட்டி ஈனியதும்
கறந்து வரும் சீம்பால
கருப்பட்டி போட்டுக் கிளறி
கிண்டி கீழே இறக்கியதும்
வழிச்சு வழிச்சு தின்னதுவும்
வருடங்கள் சென்றாலும்
நெஞ்சவிட்டு மறக்கலையே!

மாலையிலே ஓடிஆடி
விளையாடி முடிச்சதுவும்
தெற்கு வீட்டுத் திண்ணையிலே
தினம் இரவு கூட்டம் கூடி
வறுத்த கடலை தீரும் வரை
உடைச்சு உரிச்சு தின்றவாறே
கதைகதையாய்ப் பேசி மகிழ்ந்த
காலமும்தான் இனித்திடுதே!

தடதடனு  மோட்டார் சத்தம்
தெரு முனையில் கேட்டதுவும்
'கிராம்ஸ் அப்பா வர்றாங்க'னு
கையில் புத்தகத்தை எடுத்ததுவும்
வீட்டுக்குள்ளே போனதுவும்
விட்ட கதையைத் தொடர்ந்ததுவும்
கனவாத்தானே கண்ணுமுன்னே
வந்து வந்து போகுது இப்போ!

வடக்கு வீட்டு மாடியிலே
வானத்து விண்மீனாய்
வரிசையா படுக்கை போட்டு
விடியும் வரை விடுகதையை
மாற்றி மாற்றிக் கேட்டுவிட்டு
முகத்தில சூரியன் வந்து
சுரீர்னு உரைக்கும் வரை
உடல்முழுசும் போர்வைக்குள்ளே
சுருண்டவாறு புதைத்துக்கொண்டு
புரண்டு புரண்டு உறங்கியதுவும்
காலங்கள் கடந்த பின்னும்
கண்முன்னே விரியுது இப்போ!

அடுத்தடுத்த வீடுகளாய்
அருகருகே இருந்ததனால்
ஒரு மாடியில் ஏறி விட்டு
ஒற்றைச் சுவரு தாண்டி தாண்டி
தெருக்கோடிக்குச் சென்றுவரும் 
சாகசமும் இனிவருமோ?!

பிள்ளைகளா வளர்ந்த நாங்க
பருவ நிலை அடைந்ததுவும்
ஆளாளுக்கு ஒரு பக்கம்
வாழ்க்கைப்பட்டுப் போனாலும்
கள்ளங் கபடமற்ற
வெள்ளை உள்ளத்தோடும்
சொந்த பந்தங்களோடும்
அன்போடு வாழ்ந்துவந்த 

பிள்ளைப் பருவ நிகழ்வுகளை
பசுமையான நினைவுகளாய்
பதியம்போட்டு நான் வைச்சேன்!

மறக்க மனம் முடியாமல்
பொக்கிஷமா மனசுக்குள்ள
பொத்திவச்ச அத்தனையும்
மற்றவரும் காணும்படி - இன்று
மின் தமிழ் இதழிலே
கவிதையாய்க் கொட்டிவச்சேன்!

-- முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்



No comments:

Post a Comment