Monday, June 15, 2020

தொல்காப்பியர் காலம் முதல் இன்று வரை பெண்கள் தொடர்பான அச்சம்



  ——   முனைவர் ஜ.பிரேமலதா


            ஒன்றின் மீதான பற்றே அச்சத்திற்குக் காரணமாக இருக்கிறது. இயல்பான வாழ்க்கை பறிபோய் விடுமோ என்ற அச்சம் தான், ஆதிகால மனிதனிடம் இயற்கை, விலங்கு போன்றவற்றை வணங்குவதற்குக் காரணமாக இருந்தது. பாதுகாப்பான வாழ்க்கை பற்றிய சிந்தனையே இன்றைய கண்டுபிடிப்புகளுக்குக் காரணம். 

            ஆதிகால மனிதன் வேட்டையாடி வாழ்க்கை நடத்திய காலத்தில், பெண்ணும் வேட்டையாடி வாழ்ந்து வந்தாள். அவளுக்கான மக்கட்பேறு அவளுக்கு வேட்டையாடுதலில் தடையாக இல்லை. மாறாக அவள் குழுவாக வாழ்வதற்கு உறுதுணையாக இருந்தது. தன் வாழ்க்கைத் துணையைத் தேர்வதிலும், தலைமைப் பண்பைப் பெற்றிருந்தாள். எனவே அக்காலச் சமுதாயம் தாயாண்மைச் சமூகமாக விளங்கியது.பின் வேட்டையாடும் விலங்குகளை வளர்த்து அதைப் பாதுகாத்து உணவு தேவையை ஈடு செய்யக் கற்றுக் கொண்டார்கள். விலங்குகளுக்காகவும், தம் குழுவுக்காகவும் உணவு உற்பத்தியில் ஈடுபட்டது அச்சமுதாயம். வேட்டையாடல், உணவு உற்பத்தி இரண்டிலும் இருபாலரும் சம அளவில் ஈடுபட்டார்கள். பின் ஆண் வேட்டையாடலிலும், பெண் உணவு உற்பத்தியிலும் ஈடுபட்ட நிலையில் வளப்படுத்தப்பட்ட நிலமும், பாதுகாக்கப்பட்ட விலங்குகளும் தனி உடைமையாக்கப்பட வேண்டிய சூழலில் பெண் மக்கட் பேற்றின் பொருட்டும் வளர்க்கும் பொருட்டும் வேட்டையாடலில் ஈடுபடாமல், உணவு உற்பத்தியில் மட்டும் ஈடுபட்டாள்.
            தனி உடைமைச் சமுதாயத்தில் பெண்ணும் உடைமைப் பொருளாக்கப்பட்டு ஒருவனுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அவன் உடைமைப் பொருள்கள் சென்று சேர்ந்தன. இதனால் திருமண முறை தோற்றம் பெற்று, கற்பு நெறி வலியுறுத்தப்பட்டது. ஆனால், ஆண் கற்பு நெறி  உடைமை ஆதிக்கத்தின் காரணமாகப் பின்பற்றவில்லை.உடைமையும், ஆதிக்கமும் ஆண் தரப்பிலிருந்தாலும், மக்கட் பேறின் எதிர்காலம் கருதியும் பெண் கற்புக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டாள். வேட்டையாடலினால் ஏற்படும் உயிர் இழப்பும், பாதுகாப்பற்ற நிலையும் அவளை உடைமை சமூகத்திற்குள் தள்ளி முடக்கியது.அச்சமின்றி வேட்டையாடிய காலத்தில் அவள் போர்த் தெய்வமாக விளங்கினாள். குடும்ப அமைப்பும், நில உடைமைச் சமுதாய வாழ்வும் நிலைபெற்ற நிலையில் அவளிடமிருந்த தலைமைத்துவமும், குழு வாழ்வும் பறிக்கப்பட்டது.

கற்புக் கோட்பாடு:
            தாய வாழ்வு முறையிலிருந்து மாறிய தந்தை மைய சமூகத்தில், அவள் தன் பேராற்றலை உணர முடியாத வகையில் கற்புக் கோட்பாடு அவள் மீது வலுவாகத் திணிக்கப்பட்டது. மீண்டும் அச்சமற்ற நிலையைப் பெறாமலிருக்கும் பொருட்டு, பல கருத்தாக்கங்கள் அவள் மீது திணிக்கப்பட்டன. தாயாண்மைச் சமூகம் ஆதி குடிகளுடையதாகவும், தந்தை மைய சமூகம் நடப்பியலான சமூகமாகவும் மாற்றம் பெறத் தொடங்கிய கால கட்டத்தை மகாபாரதத்தில் பார்க்கலாம். சத்தியவதி மற்றும் திரௌபதி போன்றவர்கள் தாயாண்மைச் சமூகத்தின் எச்சங்கள். உடைமைச் சமூகம், இனக்குழு சமூகமாகவும், பின் அரசாகவும், பேரரசாகவும் உருமாற்றம் பெறத் தொடங்கிய நிலையில் பெண்ணின் நிலை இன்னும் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இதனால் ஆண் பிறப்பு உயர்வாகவும், பெண் பிறப்பு இழிவாகவும் பார்க்கப்பட்டது. பெண் என்பவள் உடைமைப் பொருளாகவும், போகப் பொருளாகவும் மாற்றப்பட்டாள்.

            போர்த் தெய்வமாக, வேட்டையாடியவளாக, தலைமைப் பண்பு மிக்கவளாக விளங்கிய பெண் வீட்டிற்குள் முடக்கப்பட்டாள். அவளைச் சுற்றி ‘பெண் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்பது போன்ற கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டு, அதிலிருந்து மீளாமல் வாழப் பழக்கப்படுத்தப்பட்டாள். எனவே, கட்டுப்பாடுகளும், அச்சுறுத்தல்களும் அவளைச் சிந்தனையற்றவளாக மாற்றின. இதிலிருந்து மீள நினைத்த பெண்கள் ஔவையாரைப் போல வெகு சிலரே. ஒளவையும் ஆண்மையச் சமூகம் கட்டமைத்த வட்டத்திற்குள்ளாகவே இருந்து தனக்கான வாழ்வைக் கட்டமைத்துக் கொண்டார். ஆண் மைய சமூகத்தை எங்கும் எதிர்க்கவில்லை.

            தமிழில் முதலில் கிடைத்துள்ள நூல் தொல்காப்பியம். இத்தொல்காப்பியம் ஆண் மைய சமூகம் நன்கு வேரூன்றி பேரரசுகள் மக்களை தங்கள் அதிகாரத்திற்கேற்ப பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற சூழலில் எழுதப்பட்ட நூல்.  அச்சம்தான் இனக்குழு உருவாகவும், அரசு உருவாகவும், பேரரசு உருவாகவும் காரணமாக இருந்துள்ளது. பேரரசை நிலை நிறுத்திக் கொள்ளவும் அச்சமே உதவியுள்ளது. தொல்காப்பியம் காட்டுகின்ற சமூகத்தில், பெண் என்பவள் எல்லாவற்றிற்கும் அச்சப்பட வேண்டும். ஆண் எதற்கும் அச்சப்படக்கூடாது. 

            ஆண் அச்சப்பட்டால் என்னவாகும்? போர் வீரர்களை உருவாக்க முடியாது. போரில் ஈடுபட முடியாது. நாட்டை காக்க முடியாது. இதனடிப்படையில்;
            "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
            சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே"
            என்ற கடமைகள் கட்டமைக்கப்பட்டன.

            இங்கு சங்க காலத்தில் மக்கட்பேறு உற்பத்திக்கு அடிப்படையாகப் பெண் விளங்கியிருக்கிறாள். போருக்குத் தந்தையை, கணவனை, மகனை அனுப்பும் பெண் போற்றப்பட்டிருக்கிறாள்.
அச்சம் என்பது தேவையா? தேவையற்றதா? அச்சம் ஆக்கத்திற்கும், அச்சமின்மை அழிவிற்கும் காரணமாக இருக்க வேண்டும். ஆனால் இவை பெண் வாழ்வில் தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.“வள்ளுவர் அஞ்சுவது அஞ்சாமை பேதைமை, அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்“ என்கிறார். எதற்கு அஞ்ச வேண்டும், எதற்கு அஞ்சக்கூடாது என்பதில் சமூகம் ஆணுக்கு வேறு மாதிரியாகவும், பெண்ணுக்கு வேறு மாதிரியாகவும் அச்சத்தைக் கட்டமைப்பு செய்துள்ளது.
            "பெண் எல்லாவற்றிற்கும் அச்சப்பட வேண்டும்"
            "ஆண் எதற்கும் அச்சப்படக் கூடாது"

            தொல்காப்பியர் காலத்திலிருந்து இன்று வரை இந்த கருத்தாக்கத்தின் அடிப்படையில்தான் ஆணுக்கும், பெண்ணுக்குமான கட்டுப்பாடுகள், வளர்ப்பு வேறுபாடுகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. 
அச்சம், பே, நாம், உரூம், வெரு, உட்கு எனத் தொல்காப்பியத்தில் அச்சம் குறித்தான பல சொற்கள் பயின்று வருகின்றன.
            1.  இயல்பாகத் தோன்றும் அச்சம் - அச்சம்
            2.  உள்ள நடுக்கத்தை ஏற்படுத்தும் தோற்றம் அல்லது ஓசை உட்கு
            3.  மிரட்சியைத் தரும் தோற்றம் உரு
            4.  பே - மனிதர் அல்லாத தோற்றம்

            என்வகை மெய்ப்பாடுகள் – “அச்சம், அணங்கே, விலங்கே, கள்வர், தம் இறை எனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே“ (மெய்ப்) என்ற தொல்காப்பியம் குறிப்பிடும், இந்த நான்கு வகை அச்சங்களும் பெண்களுக்குத்தான் ஆண்களுக்குக் கிடையாது.
            1)  ஆரிடை வந்தாய் நீ - கலித்தொகை - ஆண்களின் அச்சமின்மை
            2)  குக்கூ என்றது கோழி - குறுந்தொகை - உட்கு சென்றது 157/1-2 –பெண்ணின் அச்சம்.

தொல் -கற்பியல் – “அஞ்ச வந்த உரிமைக் கண்ணும்“
(தலைவனுக்கு அச்ச வருமிடம் இது ஒன்றுதான்.)

நீதி இலக்கியங்கள்:
            தெய்வந்தொழாள் கணவனைத் தொழுதெழும் பெண்ணாக மாற்றப்படுகிறாள்.
            கணவனே கண்கண்ட தெய்வமாக நினைத்து வாழும், பெண் 
            1)  கணவனைப் பிரிந்து விடுவோமோ என அஞ்சுகிறாள். 
            2)  காதலரைச் சுடு உணவு சுடுமோ (களவியல்)
            3)  கண் மை காதலர் முகத்தைக் கருப்பாக்கி விடுமோ என அஞ்சுகிறாள்.
            (தன் நிலை பற்றி எங்கும் அச்சப்படவில்லை)

ஆணுக்கான அச்சம்:
அச்சப்பட வேண்டியது -- 
            1.  தீயவைக் கண்டு
            2.  பகை, பாவம், பழி வரும் என
            3.  கொலை வரும்
            4.  வஞ்சிப்பதற்கு
            (வெருவந்த செய்யாமை (அரசன் அச்சப்படுத்தும் தோற்றமுடையவனாக இருக்கக் கூடாது)

அச்சப்படக் கூடாதது - அஞ்சாமை -- 
            அவை அச்சம் - (729, 726, 727 )
            உயிர் அச்சம் - (244), (50)
            உறுப்பு அச்சம் (585)

காப்பியங்கள்:
சிலப்பதிகாரம் - கண்ணகி:
            எந்தச் சூழலிலும் கலங்காத, தெளிவான துணிச்சலான பெண்ணாகக் கண்ணகி விளங்குகிறாள். புகார் காண்டத்தில் தேவந்தி, கண்ணகியிடம் மீண்டும் கணவனோடு சேர்ந்து வாழ பாசண்ட சாத்தன் என்ற கடவுளை வணங்க வேண்டும் என்று கூறுகிறாள். கண்ணகி ‘பீடன்று’ என மறுத்து விடுகிறாள். கோவலன் மாதவியோடு சேர்ந்து வாழ்ந்து மணிமேகலை எனும் மகளைப் பெற்றிருக்கிறாள். கண்ணகி, அந்தணர் ஓம்பலும், அறவோர்க்களித்தலும், செய்ய இயலவில்லை என வருத்தப்படுகிறாள்.தன் வாழ்க்கை இப்படியே கழிந்து விடுமோ எனக் கண்ணகி அச்சப்பட்டிருந்தாள் அவள் தேவந்தி சொன்னதை நம்பி சாத்தன் வழிபாட்டை மேற்கொண்டிருப்பாள்.   அச்சமே கீழ் மக்களது ஆச்சாரம். அச்சம் இருப்பவர்கள் தான் மூடநம்பிக்கைகளைப் பின்பற்றி எதையாவது பற்றிக் கொள்கிறார்கள். கையில் கயிறு கட்டுதல், ஊர் தோறும் தல வழிபாடு மேற்கொள்ளுதல், எந்தக் கடவுளையும் வணங்குவது என்று தன்னை மாற்றிக் கொண்டேயிருக்கிறாள் பெண் . கண்ணகி திடமான அச்சமற்ற பெண்ணாக இருப்பதால் தான் தேவந்தி கூறுவதை மறுத்து விடுகிறாள். கோவலன் யானையை அடக்கிய மாவீரன்தான். பெரும் பொருளிருந்த காலத்தில் பலருக்கு வாரிக் கொடுத்த வள்ளல் தான். ஆனால், பொருளிழந்த நிலையில் அவனுக்குள் ஏற்படுகிற அச்சம் தான் மாதவியைச் சந்தேகப்பட வைத்தது, ஊரை விட்டுச் செல்லக் காரணமாயிற்று. சிலம்பு விற்கச் செல்லும் போது ஒற்றைச் சிலம்பை மட்டும் எடுத்துச் செல்லக் காரணமாயிற்று.

            வணிகம் செய்பவர்களுக்குத் தெரியும், ஒற்றைச் சிலம்பை, ஒற்றை வளையலை, ஒற்றை கம்மலை யாரும் வாங்க மாட்டார்கள். அது திருட்டுப் பொருளாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். உடைமையாளர்கள் பெரும்பாலும் இவற்றைத் தனியாக விற்க மாட்டார்கள். அச்சம் கோவலனுக்குள் ஏற்படுத்திய பதட்டத்தினால்தான் மாதவி தவறாகத் தெரிகிறாள். பெற்றோரை, உறவுகளைச் சந்திக்கத் தயங்குகிறான். ஒற்றைச் சிலம்பை விற்கச் செல்கிறான்.

            இதிலிருந்து மாறுபட்ட நிலையில், கண்ணகி தென்படுகிறாள். கணவன் மாதவியின்பால் இருந்த நிலையில் நிலை கலங்காமல், பிற தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளாமல் உறுதியாக இருக்கிறாள். புகாரை விட்டு, மதுரையில் வாழ வேண்டிய சூழலிலும், அச்சமற்றவளாக இருக்கிறாள். நம்பி வந்த கணவன் இறந்த நிலையில் உற்றார், உறவு, ஊர், நாடு அனைத்தும் அந்நியமான சூழலிலும் நிலை கலங்காதவளாக தங்களுக்கான நீதி கேட்டு தனியொருவளாகக் களமிறங்குகிறாள்.

            அஞ்சாமல் எந்நிலையிலும் நிலை கலங்காதவளாக இருக்கின்ற காரணத்தினால் தான் அவளால் தெளிவாகச் சிந்திக்க முடிகிறது. ஒரு வணிகனின் மகளாகப் பிறந்து, வணிகக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு, ஒரு வணிகனுக்கு மனைவியாக விளங்கும் கண்ணகி, வணிக மரபை அறிந்தவளாக இருக்கிறாள். பாண்டிய நாட்டு அரசியின் காற்சிலம்பில் இருப்பது முத்து பரல்கள் எனத் துல்லியமாகக் கணிக்கிறாள்.

            மன்னனை அச்சமில்லாமல் சந்தித்து நீதி கேட்கிறாள். யாரும் எதிர்பாராத விதத்தில் மன்னன் சிலம்பிலிருப்பது மாணிக்கப் பரல்கள் எனத் தெரிய வருவதற்கு முன்னரே மன்னனை, ‘தேரா மன்னா’ என்கிறாள். அறிவில் தெளிவும் , அச்சமின்மையும் உடையவளாகக் கண்ணகி விளங்குகிறாள். அவளுடைய அச்சமின்மை தான் மன்னனைக் கள்வன் என நிரூபிக்கக் காரணமாயிற்று. அரசாட்சிக் கவிழவும் காரணமாயிற்று. காப்பியம் முழுமையும் கண்ணகி உறுதியான நிலைப்பாட்டினை உடையவளாக விளங்குகிறாள்.

மணிமேகலை:
            மணிமேகலைக் காப்பியத்தில் மாதவி, மணிமேகலை இருவரும் கண்ணகிக்கு நிகரான பாத்திரங்களாகக் காணப்படுகின்றனர்.மாதவி கோவலன் இறந்த பின், சித்ராபதி போல் ஊராரின் அலருக்குப் பயப்படாமல் துறவு மேற்கொள்கிறாள். தன் மகளைக் கண்ணகியின் மகளெனக் கணிகை குலத்திலிருந்து கொண்டே கூறுகிறாள். சித்ராபதிக்கும், அரச குலத்திற்கும் அஞ்சாமல் மணிமேகலையைத் துறவு மேற்கொள்ளச் செய்கிறாள். மணிமேகலை தொடக்கத்தில் குழப்ப நிலையில் இருப்பதால், அவளுக்கு எதைக் கண்டாலும் அச்சம் தோன்றுகிறது. உதயகுமரனின் மீதான ஈர்ப்பு ஒரு புறம், தாய் மாதவியின் துறவு தூண்டல் ஒரு புறம், பாட்டி சித்ராபதியின் சூழ்ச்சி ஒரு புறம் அவளை அலைக் கழிக்கிறது. இந்நிலையில் உறங்கிக் கொண்டிருக்கும் மணிமேகலையை மணிமேகலா தெய்வம் மணிபல்லவத் தீவிற்குக் கொண்டு சென்று விடுகிறது. தெய்வத்தின் துணை கொண்டு மணிமேகலை தெளிகிறாள். மணிமேகலா தெய்வம், தீவதிலகை, கந்திற் பாவை என்ற மூன்று பெண் தெய்வங்களும் அவளுடைய பரிணாம வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கின்றன.

            நமக்குப் பேராபத்து வரும் காலத்தில் உதவி செய்பவர்களை நாம் தெய்வமாக வணங்குவது இயல்பு. இங்குத் தெய்வங்களே உதவி செய்திருக்கின்றன.  அதிலும் மூன்றுமே பெண் தெய்வங்கள்தான் என்பது சிந்தித்தற்குரியது.  அறவண அடிகள் போன்றவர்கள் வழிகாட்டுகிறார்கள். இப்படி வாழலாம் என்று வழிகாட்டுவது வேறு. உதவி செய்வது வேறு. மாதவியும் மணிமேகலையும் அறவண அடிகளைத் தேடிச் சென்றுதான் வழிகாட்டுதலைப் பெறுகிறார்கள். ஆனால் மணிமேகலா தெய்வம், தீவதிலகை, கந்திற்பாவை மூன்றும் தானாகவே முன்வந்து உதவி செய்கின்றன. பெண்கள் தங்கள் அச்சத்திலிருந்து விடுதலை பெற்று, தன்னம்பிக்கையோடு வாழ, பெண்கள் தான் முன் வந்து உதவ வேண்டும் என்பதை இந்த தெய்வங்கள் வழி சாத்தனார் காட்டுகிறார்.  மணிமேகலா தெய்வம் கொடுக்கின்ற மூன்று வரங்கள் கிடைத்தால் மணிமேகலை ஆளுமை பெறுகிறாள்.
            1.  வானில் பறக்கும் மந்திரம் - பயணம்
            2.  உரு மாற்றம் - அச்சம் - ஆளுமை
            3.  பசியற்ற நிலை - பற்றற்ற நிலை
இம்மூன்றையும் எந்த மனிதரும் சிந்தனை மாற்றத்தினால் பெற முடியும் என்பதைத்தான் மணிமேகலை பாத்திரம் நமக்குக் காட்டுகிறது.

சமய இலக்கியங்கள்:
            சமயங்கள் என்ற நிலை வரும் போது, பன்னிரு திருமுறைகளில் சிவனை முன்னிலைப் படுத்த உமையை அஞ்சி நடுங்குபவளாகக் காட்டியிருக்கிறார்கள். சங்க காலத்தில் போர்த் தெய்வமாக விளங்கும் கொற்றவை, பக்தி இலக்கிய காலகட்டத்தில் போரைக் கண்டு நடுங்குபவளாக, சிவனின் போர்க்கோலத்தைக் கண்டு அஞ்சுபவளாகக் காட்டப்பட்டிருக்கின்றாள்.
            வெருவமதயானை உரி போர்த்து உமையை அஞ்ச வரு வெள்
விடையினான் (தேவாரம் - சம் - 35285/3)
            வேனல்ஆனை உரித்து உமை அஞ்சவே
கான ஆனை காண்டீர் கடவூரரே - தேவா- (அப்: 1439/3,4)
            மலைக்கு மகள் அஞ்ச மத கரியை உரித்தீர் (தேவா - சுந்.83/1)

எனும் போது இந்த தேவார அடிகள் கேள்விக்குள்ளாகிறது. "ஆர் அணங்கு உறும் உமையை அஞ்சு வித்து அருளுதல் பொருட்டால்" (தேவா சம்.2472/3) 
சிவனாகிய இறைவன் கூட போர்த் தெய்வமாக விளங்கும் கொற்றவையை அஞ்சுவிப்பது எதற்கென்றால், பின் அவளுக்கு அருளைத்தந்து, தான் அவளினும் மேம்பட்டவன் என்பதைக் காட்டவே என்று இந்த வரிகள் கூறுகின்றன.  

            ஆண்கள் தங்களின் ஆளுமையை, தெய்வக் கதைகளின் (புராணம்) வழி கட்டமைத்துக் கொள்ளும் நிலையை இங்கு பார்க்க முடிகிறது. காரைக்காலம்மையார் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் அச்சம் தரும் சுடுகாட்டை தன் வாழிடமாகத் தேர்ந்து கொள்கிறார். பேய் போலத் தோற்றம் தரும் சுடுகாட்டில் வசிக்கும் மக்களோடு தானும் பேய்க்கோலம் கொண்டு வாழப் பழகுகிறார். பெண்களை அவர்களின் ஆளுமை நிலையில் அப்படியே ஏற்றுக் கொள்ளாத மக்கள் வாழும் நாட்டை விடச் சுடுகாடே மேலானது என்ற அவருடைய தெளிவு அவருடைய அச்சமற்ற தன்மையினாலே தான் நிகழ்ந்துள்ளது.

            ஆண்டாள், விஷ்ணு சித்தரின் வளர்ப்பு மகள். தொல்காப்பியர் காலத்திலேயே வேரூன்றி விட்ட வருணாசிரம, சாதி நிலைப்பாடுகள் 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாளின் காலத்தில் எப்படி வளர்ச்சி பெற்றிருக்கும் என நினைத்துப் பார்த்தால், ஆண்டாளின் நிலை புரிந்து விடும்.  அறிவும், ஆற்றலும், ஆளுமையும் உடைய பெண்களிடம் அச்சமென்பது இருக்காது. இப்படிப்பட்ட பெண்களை ஆண்கள் அச்சத்தோடு பார்த்து மிரளும் நிலையில், வருணாசிரம, சாதிப் பாகுபாடும் சேர்ந்து கொண்டால் ஒரு பெண்ணின் நிலை என்னவாக இருக்கும் என்பதை ஆண்டாள் வாழ்க்கை காட்டுகிறது. இவையெல்லாம் ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கைக்குப் பெரும் தடைக்கற்களாக நிற்கும்போது, மனிதர்களையே வெறுக்கும் நிலைக்கு அப்பெண் தள்ளப்படுகிறாள். "மானிடர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கிலேன்" என்ற ஆண்டாளின் வரிகள் அவள் சூழலைத் தெளிவாக விளக்குகிறது. இச்சமூகத்திற்கு எதிராக அவள் உரம் கொள்கிறாள். துணிந்து நிற்கிறாள். அவளுடைய அச்சமற்ற துணிவு அவளுக்கான பாதையைக் காட்டுகிறது. கண்ணனைக் கனவில் மணக்கிறாள். சாதாரண மானுடர்களிடமிருந்து விலகி, கண்ணனைக் கைப்பிடித்து வாழ்ந்து, மேலான நிலையடைகிறாள்.

            காரைக்காலம்மையார், கண்ணகி, மாதவி ஆளுமையுள்ள, அச்சமற்ற பெண்களைக் கண்டு ஆண்கள் அச்சப்படுகிறார்கள்.

சிற்றிலக்கியம்:
            சிற்றிலக்கிய காலகட்டங்களில் பெண் போகப் பொருளாகவும், ஆளுமையற்றவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள். பரணி நூல்கள் தான் போர்த்தெய்வமான கொற்றவையைப் பேய்களின் தெய்வமாக முன்னிலைப்படுத்துகின்றன. ஆனால், அவள் பேய்களுக்கு உணவு கிடைப்பதற்குக் காரணமாக இருந்ததன் காரணமாகப் போற்றப்படுகிறாள்.

முடிவுரை:
            இன்று கொரானா எனும் வைரஸ் உலகை ஆட்டிப் படைக்கும் நிலையில், உலகிலுள்ள ஐந்து பெண் பிரதமர்கள் தான் அதை அச்சமின்றி எதிர்கொண்டு உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். பாதுகாப்பான வாழ்க்கையை மேற்கொள்ள, அச்சப்பட்டு வாழ வேண்டும் என்பதை விடவும், அச்சமின்றி தன்னம்பிக்கையோடு அதை எதிர் கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். பெண் மீண்டும் வலிமை பெற இவர்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.


தொடர்பு:
முனைவர் ஜ.பிரேமலதா
தமிழ் இணைப் பேராசிரியர், 
அரசு கலைக்கல்லூரி (த), சேலம் -7
மின்னஞ்சல்: piyupremsurya90@gmail.com 
தொலைபேசி: 99488417411
வலைத்தளம்:  http://vjpremalatha.blogspot.in



No comments:

Post a Comment