Saturday, August 26, 2017

திருவாரூர் கொடுங்கைக் கல்வெட்டு



திருவாரூர் ருணவிமோசன ஈசுவரர் கொடுங்கைக் கல்வெட்டு

படம் உதவி: முனைவர் காளைராசன் 


கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு துரை  சுந்தரம், கோவை: 
கல்வெட்டுப் படம் படிப்பது சற்றுக் கடினமாக இருந்தது. படித்தவரையில் அதன் பாடம் கீழே தந்துள்ளேன். உயரத்தில் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளதே ஒழியச் சிறப்பான செய்தி இல்லை. நிலக்கொடையைப் பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டுப்பாடம்:
1 .......கவும் இவ்வூர் வெள்ளாளன்.........................
2 ஞ்ஞூறும் இந்நிலம் ஒன்றரைக்கும்  இத்தேவர் பண்டாரத்தே
   கிரையத் திரவியமும்
3 ... சிகாமணி வளநாட்டு வேளாநாட்டு ப்ரஹ்மதேயம்
  (களை?)ச் சாத்தந்குடி ஸபையோ(ம்)
4 ....நிலம் தாங்கள் வேண்டுங் குடிகளுக்கு (ஊர்)க்காலால் 
   அடுத்து முதலாந நெல்
5 ............................திருவமுது........  இருநாழியாக ....
6 .........யும் ........த்து................நில்ம்
குறிப்புகள் :
சிவப்பு மையில் காட்டப்பெற்றவை கிரந்த எழுத்துகள்.
கல்வெட்டு நிலக்கொடை பற்றியது. ஒரு வெள்ளாளன் கொடுத்த  கொடையாகலாம்.
இரண்டாம் வரியில் உள்ள “ஞ்ஞூறும்”  என்பது “ஐஞ்ஞூறும்”   என்பதன் குறைவடிவம். ஐந்நூறு குழியாக இருக்கலாம்.
நிலம் ஒன்றரை என்பது ஒன்றரை மா -நிலமாக இருக்கலாம்.
கொடை நிலம், பிரமதேயச் சபையினர் விற்ற நிலமாக இருத்தல்வேண்டும். நிலத்தை விற்றுக் கிடைத்த பொருள் கோயிலின் கருவூலத்தில் (பண்டாரத்தே)  சேர்க்கப்படுகிறது. "கிரையத்திரவியம்” என்னும் தொடரால் இது விளக்கம் பெறுகிறது.
இத்தேவர் என்பது  கோயிலின் இறைவரைக் குறிக்கும்.
பிரமதேயத்தின் பெயர் மூன்றாவது வரியில் சாத்தன்குடி என்னும் பகுதிப்பெயரில் சுட்டப்பெறுகிறது.  இந்தப் பிரமதேய ஊர் சோழ நாட்டின் சத்திரிய சிகாமணி வள நாட்டில் வேளாநாடு என்னும் நாட்டுப்பிரிவில் இருந்தது.
கொடை நிலத்தை (வேண்டும்) உழுகுடிகளுக்குக் கொடுத்து உழவால் வந்த விளைச்சலில் கோயிலின் அமுதுபடிக்காக நெல் அளந்து தரப்படவேண்டும். நெல்லின் அளவு இரு நாழி குறிக்கப்படுகிறது. ஊரில் வழக்கிலிருக்கும் அளவு கருவியான ஊர்க்காலால் நெல் அளக்கப்படவேண்டும். கால் என்பது நெல் அளக்கும் கருவியைக்குறிக்கும். இக்கருவிகள் ஊருக்குப் பொதுவாக ஒன்றும், கோயிலுக்குப் பொதுவாக ஒன்றும் எனப்  பலவாறு அமையும். கருவிகளுக்குத் தனியே பெயரும் அமைவதுண்டு. இராசராசன் கால், ஆடவல்லான் கால் ஆகிய பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரின் “திருவாரூர் மாவட்டத்  தொல்லியல் வரலாறு” என்னும் நூலின் குறிப்புப்படி, திருவாரூர் வட்டம்  சத்திரிய சிகாமணி வளநாடாகவும்,  வேளாநாடாகவும் இருந்துள்ளது.


 

No comments:

Post a Comment