Saturday, June 3, 2017

பற்று வரவு

-- கவிக்கோ அப்துல்ரகுமான்
 





இறக்கப்போகிறவனே! நில்
கணக்கை முடித்துவிட்டுப்போ!

வாழ்க்கையெல்லாம் பற்றெழுதியவனே!
உன்பங்குக்கு ஒரு வரவாவது
வைத்துவிட்டுப்போ!

இந்த பூமிக்கு 
ஒரு பிச்சைக்காரனாகவே வந்தாய்!
ஒரு கடனாளியாக
சாகப்போகிறாயா?

என்னுடையதென்று
நீ உரிமைகொண்டாடும் எதுவும்
உன்னுடையதல்ல!

உன் உடல்
உன் பெற்றோரிட்டபிச்சை!

உன் சுவாசம்
நீ காற்றிடம்வாங்கிய கடன்!

நீ சுவைத்த வாழ்க்கை
பல தேனீக்கள் திரட்டிவைத்த
தேனென்பதை அறிவாயா?

பசித்தபோதெல்லாம்
பூமியின்மார்பில்
பால்குடித்தாயே!

ஆயுள்முழுவதும்
ஐந்துபிச்சைப்பாத்திரங்களில்
வாங்கி உண்டாயே!

எதற்காவது விலைகொடுத்தாயா?
வாடகையாவது தந்ததுண்டா?
நன்றியாவதுசெலுத்தினாயா?

மேகத்தின் நீரையும்
சந்திரசூரியவிளக்குகளையும்
பயன்படுத்தினாயே!

கட்டணம்கட்டியதுண்டா?

அனுபவங்களின் திருமணங்களுக்குவந்து
விருந்துண்டாயே!

மொய்யெழுதினாயா?

சமூகம்கட்டிய
கூரைகளின் அடியில் குடியிருந்தவனே!

தீவிபத்துநடந்தபோது
உன்பங்குக்கு
ஒருவாளிநீராவது வீசினாயா?

உன் முன்னோரின்நதிகளிலிருந்து
உன்வயல்களுக்கு
நீர்பாய்ச்சிக்கொண்டவனே!

வெள்ளம் கரையுடைத்தபோது
ஒருதட்டாவது
மண்சுமந்தாயா?

அறிமுகமில்லாதகைகளால்
கண்ணீர்துடைக்கப்பட்டவனே!

சகமனிதனின்
ஒருதுளிக்கண்ணீரையாவது
நீ துடைத்திருக்கிறாயா?

யாரோ ஊற்றிய நீரால்
புன்னகைபூத்தவனே!

ஒரு காய்ந்த உதட்டிலாவது நீ
புன்னகையை மலர்த்தியிருக்கிறாயா?

என்ன உறவு உன் உறவு?

வாங்கலைமட்டும்செய்தாயே!
கொடுக்கலைச்செய்தாயா?

எந்தக்கையாலோ
சுடரேற்றப்பட்டவனே!

ஒருவிளக்கையாவது நீ
ஏற்றிவிட்டுப்போகவேண்டாமா?

மொத்தமாகச்செத்துப்போகிறாய்!

கொஞ்சம் சில்லறையாகவாவது
நீ இங்கே இருக்கவேண்டாமா?

மரணக்காற்றில்
ஒரு விளைக்கைப்போல்
அணைந்துபோகாதே!

ஓர் ஊதுவத்தியைப்போல்
கொஞ்சம் நறுமணமாவது
விட்டுவிட்டுப்போ!

உன் சாவில் சாம்பலையல்ல
நெருப்பைவிட்டுச்செல்!

மண்ணில் ஒரு காயத்தையல்ல
ஒரு மருந்தைவிட்டுச்செல்!

ஒருதடயமுமில்லாமல்
மறைவதற்கு வெட்கப்படு!
குற்றவாளிதான்
அப்படிச்செய்வான்.

-கவிக்கோ அப்துல்ரகுமான்
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment