Wednesday, June 25, 2014

குடதிசை மருங்கில் – 2


- தேமொழி.


2. இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்

 









உலகின் மிகத் தொன்மையான இந்தியக் கலாச்சாரத்தில் சிற்பங்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் பலகோடி இந்துக்களுக்கு சிற்ப வழிபாடு மத அடிப்படையின்  ஆதாரமாக விளங்குகிறது. இன்றும் பின்பற்றப்படும் உலகின் புராதனமான இந்து சமயத்தின் வழிபாட்டிற்காக செதுக்கப்பட்டவை  இந்திய தெய்வங்களின் சிற்பங்கள். இவை சான் ஃபிரான்சிஸ்கோ கலை அருங்காட்சியகத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இந்த சிலைகளில் பல தேர்ந்தெடுக்கப்பட்டு “ஆசியக் கலை அருங்காட்சியகத்தின் இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்” என்ற சிறப்புக் கண்காட்சியாக    ஆகஸ்ட் 25, 2012 முதல்  பிப்ரவரி 25, 2013 வரை பார்வைக்கு வைக்கப் பட்டன.  இச்சிலைகள் பெரும்பாலும் ஏழாம் அல்லது எட்டாம் நூற்றாண்டுகளின்  காலத்தினைச் சார்ந்த கோயில் சிற்பங்கள்.  வழிபாட்டிற்காக கற்களிலும், மரத்திலும் அழகிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட இச்சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் ஆனபின்பும் அத்தெய்வங்களின் தெய்வீக அழகினைப் பறைசாற்றுகின்றன.

*கீழ் வரும் இக்கட்டுரையின் பகுதி அருங்காட்சியகத்தின் சிலைகளின் படங்களையும், அதற்கு அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் விளக்க உரைகளையும் மொழி பெயர்த்து, அருங்காட்சியகத்தின் முன் இசைவு பெற்று தொகுத்து வழங்கப் படுகிறது.

  அருங்காட்சியத்தில் இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்
இந்து மதக் கோயில்களில்  எழுந்தருளச் செய்யப்பட்ட தெய்வங்கள் கற்சிலை வடிவில் பக்தர்களின் ஆராதனைக்கும் வழிபாட்டிற்கும் உரியவர்களாய் இருப்பவர்கள். கணக்கிலடங்கா இந்துமத பெருந் தெய்வங்களும், சிறுதெய்வ வழிபாட்டிற்கான தெய்வத்தன்மை உடையவர்களாக கருதப்படும் முன்னோர்களும் கற்சிலை தெய்வங்கள் வடிவில் காட்சியளிக்கிறார்கள். பெரும்பான்மையான இந்து மதத்தினர், படைப்புகள் யாவும் சக்தி வாய்ந்த உயர்ந்த கடவுள் ஒருவரினால் உருவாக்கப் பட்டது என்பதை நம்புகிறார்கள். படைப்புத் தொழில் செய்யும் பிரம்மா, உயிர்களைக் காக்கும் திருமால், அழிக்கும் தெய்வமான சிவன் ஆகியோர், மற்றும் பல உருவங்களைப் பெற்ற சக்தி வாய்ந்த பெண்தெய்வங்கள் யாவரும் அண்ட சராசரங்களையும் தோற்றுவித்து, காத்து, அழித்து எல்லையில்லாத் திருவிளையாடல்களைக்  காலம் காலமாகத் தொடர்ந்து நிகழ்த்துகிறார்கள் என்பது இந்துமதக் கோட்பாடு.

இத் தெய்வங்களே பல உருக்கொண்டு அவதாரங்களாகவும், சிறு தெய்வங்களாகவும், கிராமிய தேவதைகளாகவும், வணக்கத்துக்குரிய வீரர்களாகவும், காவல் தெய்வங்களாகவும் பல உருவில் தோன்றி மக்களைக் காத்தருள்கிறார்கள். இந்து மத தெய்வ வழிபாடு ஒரு நிலையான முறையில், தொடர்ந்து ஒரு கடவுளை வழிபடும் அமைப்பில் அமைந்ததல்ல. ஒவ்வொரு கடவுளும், ஒவ்வொரு காலக்  கட்டத்தில், இந்தியாவின் பற்பல பகுதிகளில் வெவ்வேறு வடிவில், அப்பகுதிகளில் வாழும் மக்களிடம், அவர்கள் வாழ்ந்த காலத்தில் போற்றி வணங்கப் படுபவர்கள்.  எனினும் பெரும்பான்மையான இந்து மதத்தினரிடம்  இக்கடவுள்கள் யாவரும் ஒரு கடவுளின் பல்வேறு மறுவடிவங்களே என்ற மாறாத கருத்தும் உண்டு. பெரும்பான்மையான இந்துக்கள் ஒரு கடவுளை சக்தி வாய்ந்த முதன்மைக் கடவுளாக ஏற்றுக்  கொண்டு அவர்களுக்கு உகந்த கடவுளாக  அத்தெய்வத்தை  வழிபடுபவர்கள்.

இந்து மதத்தினர் தெய்வங்களின் உருவங்களை தங்கள் இல்லங்களிலும், பக்தர்கள் குழுமும்  உற்சவ விழாக்களிலும், கோயிலின் கருவறைகளிலும் வைத்து வழிபடுவார்கள்.  தெய்வச் சிலைகள் வெறும் அலங்காரமாக வைக்கப் படுவதில்லை.  கோயிலின் வடிவத்திற்கும் அமைப்பிற்கும் சிலைகளுக்கும் தொடர்புள்ளது. தெய்வச் சிலைகள் கோயிலின் கருவறையின் வழியாக உயிரோட்டத்துடன் மக்களின் நம்பிக்கைக்கான ஆதாரத்தை வழங்குகிறது.
பிரமாண்டமான கோயில்களில் தெய்வச் சிலைகள் பீடத்தில் தனித்து நிற்கும் உருவங்களாக அமர்த்தப் பட்டிருக்கும். ஒவ்வொரு கோயிலும் ஒரு தனிப்பட்ட கடவுளுக்காக நிர்மாணிக்கப் பட்டு, தெய்வச் சிலைகள் கருவறையில் எழுந்தருளச் செய்யப் பட்டிருக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் பூக்கள், பழங்கள், நைவேத்தியங்கள், வேண்டுதல்படி மற்றும் பல காணிக்கைகளைப் படைத்தது, தெய்வங்களை வழிபட்டு, தெய்வ அருளினை வேண்டி வணங்கிச் செல்வார்கள்.

பண்டைய நாட்களில் வரையறுக்கப் பட்ட சிற்பக் கலை விதிகளின் அடிப்படையில் தெய்வச் சிலைகளின் உடலமைப்பும் முகமும் வடிவமைக்கப் படும். ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் சிலைகள் மிகவும் கலை நுணுக்கத்துடன், அழகிய உடலமைப்புடனும், முகபாவத்துடனும் செதுக்கப் பட்டிருக்கும். மேலும் தெய்வங்களின் சிலைகள் இயல்பு வாழ்க்கை நிலையை ஒத்திராமல், கடவுள்களின் சக்தியை, தெய்வீகத் தன்மையை உணர்த்தும் வகையில் அமைக்கப் பெற்றிருக்கும்.

பல சக்திகளை உடையவர் என்பதனை உணர்த்த திருமால் நான்கு கைகளையும், அவற்றில் சங்கு சக்கரங்களை ஏந்தி அரசர்கள் போன்ற உடையலங்காரத்துடன் இருப்பார்.  சிவன் ஏறத்தாழ அரை நிர்வாண வகையில் ஆடை அணிந்து பாம்புகளை அணிந்திருப்பார். அவரது தலை முடி துறவிகளைப் போன்று கொண்டையிட்டு முடியப் பட்டிருக்கும். சிவனும், திருமாலும், பராசக்தியும் அவர்களைப் பற்றிக் கூறும் புராண கதைகளுக்கு ஏற்றவாறு பற்பல வடிவங்களில் சிலை எடுக்கப் பட்டிருப்பார்கள். அது போன்றே மற்ற பிற இந்துமதத் தெய்வங்களும் அவர்களுக்கென்று குறிப்பிடப் பட்ட வடிவங்களுடன் சிலை வடிக்கப் பட்டிருப்பார்கள். இவ் வடிவங்களைக் கொண்டு இத்தெய்வங்களை அடையாளம் கண்டு கொள்வது, இடைக்கால ஓவியங்களில்  கிறிஸ்துவ மதத்தின் துறவிகளை அவர்களது உருவங்களைக் கொண்டு அடையாளம் காண்பது போன்ற சவால் நிறைந்த ஒன்றாகும்.

  கணேசா:

அருங்காட்சியக அடையாள எண்: B62S14+ L2012.0801.023

கணேசர் தடைகளை நீக்கும் கடவுள்.  எந்த செயலையும் துவக்குவதற்கு முன், —பிற கடவுள்களை வணங்குவதற்கும் முன் கணேசரை வணங்குவது உட்பட, அவரை வணங்குவது வெற்றியைத் தரும். இந்தியாவில் அனைவருக்கும் விருப்பமான கடவுளான கணேசர் மகுடம் மற்றும் அணிகலன்கள் தரித்து, கையில் மழுவாயுதத்துடனும், தாமரையுடனும், கொழுக்கட்டைகளுடனும், உடைந்த தந்தத்துடன் காட்சி தருவார்.  உடைந்த தந்தம் இந்திய இதிகாசம் மகாபாரதத்தை எழுத எழுதுகோலாக  வழங்கப்பட்டது. கணேசரின் துதிக்கையைத் தடவிச் செல்வது வாழ்க்கையில் நல்வாய்ப்புகளை நல்கும் என்பது கணேசரை வழிபடுவோரின் நம்பிக்கை.


அருங்காட்சியக அடையாள எண்: B62S14+ L2012.0801.023

கணேசரின் யானை முகமும், கரங்கள் பல பெற்றிருப்பதும் அவரது தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது. இவை கணேசருக்கு அமையப் பெற்றிரிருப்பதன் காரணத்தைப் பல்வேறு புராணக் கதைகள் விளக்குகின்றன. கணேசரின் அன்னை பார்வதி தனக்கு ஒரு மகன் வேண்டும் என விரும்பித் தனது  கணவன் சிவனுக்குத் தெரிவிக்காமல், அவர் உதவி இன்றித் தானே கணேசரை உருவாக்கினார்.  உண்மையை அறிந்திராத சிவன் தவறாக எண்ணி கணேசரின் தலையை வெட்டி விட்டார்.  பிறகு தவறை உணர்ந்து யானையின் தலையை கணேசருக்குப் பொறுத்தி அவரைப் பிழைக்க வைத்தார். யானைகளுக்கு இந்தியக் கலாசாரத்தில் சிறப்பிடம் அளிக்கப் படுகிறது.  யானைகள் மழை மேகத்தின் நிறத்தையும் உருவத்தையும் பெற்றிருப்பதனால் அவை வளமைக்கும் செழுமைக்கும் அடையாளமாக கருதப் படுகிறது.

இந்து தெய்வம் கணேசர்: இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த இந்தச் சிலை 12-13 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B62S14+ L2012.0801.023

(தொடரும்)

[*படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]

Source:
http://www.flysfo.com/museum/exhibitions/deities-stone-hindu-sculpture-collections-asian-art-museum
Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
San Francisco Asian Art Museum
August 25, 2012–February 25, 2013
All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
© Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.


License: Creative Commons license: Attribution-NoDerivs 3.0 Unported (CC BY-ND 3.0)

Thanks to Vallamai: http://www.vallamai.com/?p=30905

themozhi@yahoo.com 

No comments:

Post a Comment