Pages

Thursday, October 14, 2021

தலையங்கம்: தமிழரின் தொல்லியல் தடயங்களை மீட்போம்


வணக்கம்.

அனைவரையும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆய்வுக் காலாண்டிதழின் ஊடாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

கடந்த 3 மாதங்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு. அவைபற்றிய செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழக வரலாற்றுக்குச் சிறப்பு சேர்க்கும் மைசூர் ஆவணப்பாதுகாப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களை மீட்டுக் கொணரும் நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரிக்கப்பட்டு தமிழக வரலாற்று ஆய்வாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிகழ்வு 19.8.2021 அன்று நிகழ்ந்தது. தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு இந்த வழக்கினை நடத்த வேண்டும் என்ற சிந்தனையை 2017ம் ஆண்டு முதல் திட்டமிட்டு, 2018ம் ஆண்டு திரு. கௌதம சன்னா அவர்களது உதவியுடன், திரு.காந்தி அவர்களது ஆலோசனையின் படி மூத்த வழக்கறிஞர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.என்.ஆர்.இளங்கோ அவர்களது   உதவியுடன் இந்த வழக்கைத் தொடங்கினோம்.  இவ்வழக்கிற்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதோடு உண்மையில் எத்தனை கல்வெட்டுகள்  இருக்கின்றன, என்ற கேள்விக்கு விடையாகக் கல்வெட்டுக்களின் எண்ணிக்கையும்  இந்தத் தீர்ப்பு அறிக்கையில் வெளியிடப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இது இதுகாறும் நிலவி வந்த பல கேள்விகளுக்குச் சட்டப்பூர்வமான பதிலாகவும் அமைகிறது.    கடுமையான முயற்சியை மேற்கொண்டு இவ்வழக்கு வெற்றியடைய உழைத்த நாடாளுமன்ற உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் திரு.என்.ஆர்.இளங்கோ அவர்களுக்கும், சாதகமான தீர்ப்பினை வழங்கிய நீதியரசர்கள் கிருபாகரன், துரைசாமி ஆகியோருக்கும்  நன்றி கூற நாம் அனைவருமே கடமைப்பட்டுள்ளோம்.

கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம்   22ம் தேதி மெட்ராஸ் தின விழாவினை நாம் கொண்டாடுகின்றோம்.  இவ்வாண்டும் ஆகஸ்டு மாதத்தில் வரலாற்று சொற்பொழிவுகள், கானா பாடல்கள், மெட்ராஸ் நகருக்குச் சிறப்பு சேர்க்கும் விளையாட்டுகள் பற்றிய செய்திகள் என்பனவற்றோடு மெட்ராஸ் பற்றிய ஆய்வு நூலான `மெட்ராஸ் 1726`  என்ற தலைப்பிலான ஓர் ஆய்வு நூல் வெளியீடும், மெட்ராஸ் வரலாற்றில் தொழிற்சங்கத்தின் வளர்ச்சி மற்றும் மெட்ராஸில் அரசியல் தலைவர்கள் என்ற பல்வேறு தலைப்புகளில், ஆகஸ்ட் மாதம் 21,22 ஆகிய இரு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நாம் ஏற்பாடு செய்து கொண்டாடினோம். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் இணையத்தில் நிகழ்த்தப்பட்டு அவை யூடியூப் பதிவுகளாக தமிழ் மரபு அறக்கட்டளையின் யூடியூப் சேனல் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அன்றாட அலுவல்களுக்கு இடையே சென்னை பெருநகரில் ஒவ்வொரு நாளும் பயணித்தாலும் கூட, சென்னையில் இருக்கின்ற வரலாற்றுச் சின்னங்களை அடையாளம் கண்டு அறிந்து கொள்ளாதவர்கள் ஏராளம் பேர். அத்தகையோருக்குச் சென்னையின் வரலாற்றுச் சிறப்புக்களை அறிமுகப்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.

ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி தமிழ் மரபு அறக்கட்டளையின் 20 ஆண்டுக்காலப் பயணம் நிறைவடைந்து 21ஆம் ஆண்டில் தடம் பதிக்கும் நிகழ்வினை உலகம் முழுவதிலுமிருந்து தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் உறுப்பினர்களும் ஆர்வலர்களும் இணைந்து சிறப்பித்தார்கள்.  21 ஆண்டுகாலப் பயணத்தில் நமது அமைப்பு ஏற்படுத்தியுள்ள உலகளாவிய வரலாற்று விழிப்புணர்வு சார்ந்த நடவடிக்கைகளை நினைவு கூறவும் இந்த நிகழ்வு வாய்ப்பாக அமைந்தது.

மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை அரசு விழாவாக தமிழ்நாடு அரசு இவ்வாண்டு அறிவித்தது. இது வரலாற்று ஆர்வலர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைகின்றது.    

உலகத் தமிழர்களைப் பொறுத்த வரையில் செப்டம்பர் மாதம் சமூகநீதிக்கான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்யும் மாதமாக அமைந்தது. இதற்கு முக்கிய காரணம், கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் சமூக நீதிக்காகப் போராடிய, தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர்கள் பிறந்த நாட்களும் நினைவு நாட்களும் இந்த மாதத்தை அலங்கரித்தன என்பதுதான்.

செப்டம்பர் 5ஆம் தேதி வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள்; செப்டம்பர் 5ஆம் தேதி அன்னை தெரசா நினைவு நாள்; செப்டம்பர் 11 மகாகவி பாரதியார் நினைவு நாள்; செப்டம்பர் 15ஆம் தேதி அறிஞர் அண்ணா அவர்களது பிறந்த நாள்; செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் ஈ.வே ராமசாமி அவர்களது பிறந்தநாள்; செப்டம்பர் 17 ஆம் தேதி திரு.வி. கலியாண சுந்தரனார் அவர்களது நினைவு நாள், செப்டம்பர் 18ஆம் தேதி மூதறிஞர் ரட்டமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள்  என முக்கிய தலைவர்களின் நினைவுகளை எழுப்பும் மாதமாக அமைந்தது.

தமிழ்நாடு அரசு செப்டம்பர் 17ஆம் தேதியை சமூக நீதி நாள் என இவ்வாண்டு அறிவிப்பை வெளியிட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை மையமாகக் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் நிகழ்ச்சிகளும் வடிவமைக்கப்பட்டிருந்தன.  இவையனைத்தும் தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்தி வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

இவை தவிர தமிழக அரசு செப்டம்பர் மாதத்தில் நெதர்லாந்தில் பாதுகாக்கப்படுகின்ற சோழர் காலச் செப்பேடுகளை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்ற செய்தியை செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தார்கள் என்பதைப் பலரும் அறிந்திருப்பீர்கள்.   இதற்குத் தொடர்புடைய வகையில்  கடந்த ஆகஸ்ட் மாதம் நெதர்லாந்து லெய்டன் நூலகத்திற்கு நேரடியாகச் சென்றிருந்தபோது சேகரித்த தகவல்களை மையமாகக் கொண்டு நெதர்லாந்தில் உள்ள சோழர் காலச் செப்பேடுகள் என்ற தலைப்பிலான காணொளிப்  பதிவு ஒன்றினையும் இம்மாதம் வெளியிட்டது தமிழ் மரபு அறக்கட்டளை. 


மேலும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தமிழகத்தின் சென்னை அருங்காட்சியகத்தில் இந்த நெதர்லாந்து சோழர் காலச் செப்பேடுகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு கலந்துரையாடலையும் கல்லூரி மாணவர்களுக்கும் அருங்காட்சியக ஆணையர்,  அதிகாரிகள், பொதுமக்களுக்கு வழங்கினேன்.  இதன் தொடர்ச்சியாக அச்செப்பேடுகளை முறையாக நெதர்லாந்து அரசை அணுகிப் பெறுவதற்கான சாத்தியக் கூறுகளைத் திட்டமிடவும் கலந்துரையாடப்பட்டது.

மலேசியத் தமிழர்கள் வரலாறு பற்றிய ஓர்  ஆவணப்பதிவாக்க முயற்சிக்கான கலந்துரையாடல் நிகழ்வும் இம்மாதம் நிகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மலேசியக் கிளைக்கான புதிய வலைப்பக்கம் (https://malaysia.tamilheritage.org/) செப்டம்பர் மாதத்தில் உருவாக்கப்பட்டது வெளியிடப்பட்டது.

இம்மாத இறுதியில் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடுகளாக ஐந்து நூல்கள் வெளிவர உள்ளன.  இந்த ஆய்வு நூல்களை வாங்கி உங்கள் ஆதரவை வெளிப்படுத்துங்கள்.

தமிழால் இணைவோம்!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி




No comments:

Post a Comment