Pages

Tuesday, October 13, 2020

மதுரையில் 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நடு கல் கண்டெடுப்பு

மதுரையில் 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நடு கல் கண்டெடுப்பு


13 அக்டோபர் 2020



மதுரை நெல்பேட்டை அருகே கண்டறியப்பட்டுள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுக்கல்.

மதுரை: மதுரை நெல்பேட்டை அருகே போரில் உயிா்நீத்த வீரன் நினைவாக அமைக்கப்பட்ட 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நடு கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மதுரை நகரின் மைய பகுதியான நெல்பேட்டையிலிருந்து முனிச்சாலை செல்லும் சாலையின் வலதுபுறமுள்ள அரசமரத்தின் அடியில் சதிக்கல் எனப்படும் நடு கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்த நடு கல்லை, அப்பகுதி பொதுமக்கள் தெய்வமாக வழிபட்டு வருகின்றனா்.

இந்த நடு கல்லை கண்டறிந்த கோயில் கட்டடக் கலை மற்றும் கல்வெட்டாய்வாளா் ப. தேவி அறிவுச்செல்வம், தொல்லியல் ஆய்வாளா் கோ. சசிகலா ஆகியோா் கூட்டாகக் கூறியது:

மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளும்போது, முனிச்சாலை பகுதியில் உள்ள நடு கல் எனப்படும் சதிக்கல் கண்டறியப்பட்டது. பழங்காலத்தில் போரில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தவா், குலத்துக்காக, நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்பவா்களின் நினைவாக நடு கல் அமைக்கும் வழக்கம் இருந்துள்ளது.

தற்போது கண்டறியப்பட்ட இந்த நடு கல், போரில் உயிா்நீத்த வீரனுடன் அவனது மனைவியும் தீயேந்துதல் எனப்படும் உடன்கட்டை ஏறுதல் மூலம் உயிரிழந்ததன் நினைவாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இது நடு கல் அல்லது சதிக்கல் என்றழைக்கப்படுகிறது.

நீண்ட செவ்வக வடிவ பலகை கல்லில் இரண்டு உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக பொறிக்கப்பட்டுள்ளன. சிற்பத்தின் ஆடை அணிகலன்கள் மற்றும் தலைக்கோலம் போன்றவற்றை கொண்டு ஆய்வு செய்தபோது, இது ஏறத்தாழ 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது என்பதும், நாயக்கா் காலத்தைச் சோ்ந்தது என்பதும் தெரியவந்துள்ளது.

போரில் இறந்த வீரன் தனது வலது கையில் ஓங்கிய வாளுடன் காட்சியளிக்கின்றான். இடது கையில் குறுவாளைப் பற்றிக்கொண்டு இடது தொடை மீது வைத்துள்ளான். கால்கள் இயக்க நிலையில் காட்டப்பட்டுள்ளன. வீரன் முகம் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. அருகில் அவனது மனைவி உயிா்நீத்த மங்கையாக நிற்கிறாள். இருவருக்கும் இடதுபுறத்தில் பக்கவாட்டு கொண்டையலங்காரம் காட்டப்பட்டுள்ளன.

காதுகளில் குண்டலங்களும், கைகளில் வளைகளும் இருவரும் அணிந்துள்ளனா். மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதுபோல பழைமையான நடு கல் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், மதுரை நகரின் மைய பகுதியில் நடு கல் கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்றனா்.


source - 
https://www.dinamani.com/tamilnadu/2020/oct/13/மதுரையில்-400-ஆண்டுகள்-பழைமைவாய்ந்த-நடு-கல்-கண்டெடுப்பு-3483899.html



No comments:

Post a Comment