Pages

Saturday, May 18, 2019

காலக் கவிதைகள்

—  திருத்தம் பொன். சரவணன்



மாலைநேரத்து மயக்கம் 

கதிரை மாய்த்தன்று ஓங்கல்
கங்குல் உய்த்தன்று திங்கள்
கண்ணை மூய்த்தன்று கமலம்
வெண்பல் ஏய்த்தன்று தளவம்
குடம்பை சேர்ந்தன்று குறும்பூழ்
மன்றம் ஊர்ந்தன்று மாவும் – மெல்ல என்
உயிரைத் தேய்த்தன்று மாலை.

பொருள்: கதிரவன் பெரிய மலையின் பின்னால் சென்று மறைந்துகொள்ளவும் இருளைக் கிழிப்பதுபோல் நிலவு வெளிப்படவும், நிலவைக் கண்டதும் தாமரைமலர் தனது கண்ணை மூடிக் கொள்ளவும், இதைக்கண்ட முல்லைக்கொடியானது தனது வெண்ணிறப் பற்களைக் காட்டிக் கேலியாகச் சிரிக்கவும், பறவைகள் தங்களது கூடுகளைச் சென்று அடையவும், ஆடுகளும் மாடுகளும் தங்கள் தொழுவத்திற்குத் திரும்பவும் இதோ மாலைப் பொழுது வந்தே விட்டது. என் உயிர் என்னைவிட்டு மெல்லப் பிரியத் தொடங்கி விட்டது. 


நன்றே செய்க ! இன்றே செய்க !!

தோன்றிய இடந்தனைக் காணலும் ஆகா
ஊன்றிய இடந்தனை உணர்தலும் ஆகா
ஞான்றிய உலகிதில் நம்மிடம் எதுவென
சான்றுகள் காட்டுவ நமதுநற் செயலே.

பொருள்: நாம் உருவான இடமான கர்ப்பப்பையினை நாம் காண இயலாது. அதைப்போல நாம் இறந்த பின்னால் நம்மைப் புதைத்து ஊன்றிய இடத்தையும் நம்மால் உணர இயலாது. அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் இப் பூவுலகில் நமக்கான இடம் எதுவென்று நமக்குத் தெளிவாகக் காட்டும் சான்றுகளாக இருப்பவை நாம் செய்யும் நற்செயல்கள் மட்டுமே. ஆதலால் நன்றே செய்க ! அதையும் இன்றே செய்க.!!






தொடர்பு: திருத்தம் பொன். சரவணன்
vaendhan@gmail.com
http://thiruththam.blogspot.com/






No comments:

Post a Comment