Pages

Tuesday, May 17, 2016

திருக்குறளும் எதிர்காலச் சந்ததியும்

-- இ.க.கிருஷ்ணமூர்த்தி, எஸ்ஸன், ஜெர்மனி


வள்ளுவர் கண்ட திருக்குறள் கடைச்சங்க காலமான கி.மு. 300 க்கும் கி.பி. 250 க்கும் இடைப்பட்ட காலத்தில் மதுரையை நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் என்ற நபர் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.  திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும் முடிவில் ஔவையார் துணையோடு மதுரையில்  அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.

திருக்குறளில் முதலாவது  ஈரடியான ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி 1330  ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் புகுத்தி ‘திருக்குறள்’ என்னும் தமிழ் அமுதை மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் திருவள்ளுவர். இதை ஔவையார் மிகச் சிறப்பாக அணுவைத்துளைத்து எழுகடலையும் அதில் புகுத்தினால் போல் என அதை மேம்பாட்டைச் சுருக்க விளக்கினார் வள்ளுவர் உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளை  உலக இலக்கிய அரங்கில் எல்லா மக்களால் ஏற்கப்பட்ட நூலாக தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெறச்செய்தவர். இவர் உலக மக்களால்;, ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதார்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவர் எழுதிய திருக்குறள்  பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர்.

திருவள்ளுவர் அவர்களின் பிறப்பு மற்றும் பிறப்பிடத்திற்கான சரியான சான்றுகள் இதுவரை இல்லை என்று தான் கூறவேண்டும். ஏனென்றால் அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் என்றும் மதுரையில் பிறந்ததாகவும் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்ததாகவும் சிலரும் கூறுகின்றனர். மேலும் அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். ஆனால்  இவை எதுவுமே உறுதிப்படவில்லை. மேலும் சிலர் அவர் ஒரு கிறித்துவர் என்றும் சமண மதத்தவர் என்றும் பவுத்தர் என்றெல்லாம் கூட பொய்யான தகவல்களைப் பரிமாறுகின்றனர். உண்மையில் அவர் ஒரு சைவனாகத்தான் இருந்திருக்கிறார். திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தை  விளக்குவதைப் பற்றியே எழுதியுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கருத்தியல் கண்காணிப்பாளர் தேர்வுத்துறை முன்னோடியான சோ. சண்முகம் அவர்கள் திருக்குறளில் சைவ சமயம் எனும் கட்டுரையில் திருக்குறளில் சைவ சமயக் கருத்துகள் நிரம்பியுள்ளன என்கிறார்.

ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால் இது ‘ஈரடி நூல்’ என்றும் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால் ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படும் இந்நூல் மனிதர்கள் தம் அகவாழ்விலும் புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்கியிருக்கிறது..இந்நூல் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக்கொண்டது
  • அறத்துப்பால்:- முதல் பிரிவான ‘அறத்துப்பாலில்’ மனசாட்சி மற்றும் மரியாதை நல்ல நடத்தை போன்றவற்றை பாயிரவியல் இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற உட்பிரிவுகளில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
  • பொருட்பால்:- இரண்டாவது பிரிவான ‘பொருட்பாலில்’ உலக விவகாரங்களில் எவ்வாறு சரியான முறையில் நடந்து கொள்வது என்பதை அரசியல், அமைச்சியல், அங்கவியல், ஒழிபியல் போன்ற உட்பிரிவுகளில் விளக்கியுள்ளார்.
  • இன்பத்துப்பால்:- மூன்றாவது பிரிவான ‘இன்பத்துப்பால்’ அல்லது ‘காமத்துப்பாலில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான காதல் மற்றும் இன்பத்தைத் தெளிவாக களவியல், கற்பியல் என்ற தலைப்புகளில் எடுத்துரைக்கிறார்.

முதல் பிரிவில் 38 அத்தியாயங்களும் இரண்டாவது பிரிவில் 70 அத்தியாயங்களும் மூன்றாவது பிரிவில் 25 அத்தியாயங்களும் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் பத்து ஈரடி குறள்கள் என மொத்தம் 1330 குறள்கள் உள்ளன. திருக்குறளில் உள்ள அனைத்துக் கருத்துகளும் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்பட்டாலும் இதை இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. ஆனால் அதன் பெறுமதியறிந்து திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. என்பது தமிழிற்கு பெருமையே ஆகும்.

இன்றைய உலகில் எதிர்காலச் சந்ததிக்கு இன்றியமையாததாகத் திகழ்வது  கல்வி, பண்பு, இல்லறம் ஆகும். எந்தவொரு சமூகத்தினரும் இக்கல்வியைக் கற்பதிலிருந்து விலகிச் செல்வது இன்றைய நவீன உலகில் மிகவும் அரிதாகக் காணப்படுகிறது. ஏனெனில் கல்வியின் சிறப்பை அனைத்துச் சமூகங்களும் புரிந்துள்ளன. இதனால் தான் இன்று கல்வியானது மனிதனின் அறிவுக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கிறது கல்வியின் சிறப்பு பற்றி கூறும்போது கல்வி கற்றவன் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப் படுகின்றான். இதற்குக் காரணம் அவன் கற்ற கல்வியே ஆகும். இதனையே திருவள்ளுவர் மிகவும் அழகாக வர்ணித்திருக்கிறார்.

ஒருவன் தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனைச் செயல் வடிவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவன் கற்ற கல்வியின் பயன் அவனுக்குக் கிடைக்கும். இல்லாவிடில் அவன் கற்ற கல்வியின் பயன் ஒன்றும் இல்லாமல் போய்விடும். இதனையும் திருவள்ளுவர் தனது திருக்குறளின் ‘கல்வி’ என்ற அதிகாரத்தின் முதலாவது குறளில் தெளிவாகக் கூறுகின்றார்.

‘கற்க கசடறக் கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத்தக’

என்று கூறுவதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
‘எண்’ என்று சொல்லப்படுவதும் ‘எழுத்து’ என்று சொல்லப்படுவதும் இவை இரண்டினையும் அறிந்தோர் சிறப்பு மிக்க மக்களின் உயிர்களுக்குக் கண் என்று சொல்லப் படுவர். இந்த அளவிற்குக் கல்வியின் சிறப்பு எடுத்துரைக்கப் படுகின்றது.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

கற்றவரின் சிறப்பு பற்றி கூறும் போது ஒருவனின் முகத்திலுள்ள கண்ணானது கற்றவருக்குரிய அடையாளம் என்று சொல்லப்படுகிறது. அதே கண் இல்லாதவருக்கு முகத்தில் இரண்டு புண் இருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது. இதன் மூலம் கல்வியின் சிறப்பும் அதனைக் கற்றவனின் சிறப்பும் கூறப்படுகின்றது.

மனிதன் ஆயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகின்றான். ஒருவன் தான் கற்ற கல்வியின் இன்பத்தை உணர்ந்தானாயின் அவன் மீண்டும் கற்பதையே விரும்புவான். இது கல்வியின் பண்பாகக் கருதப்படுகிறது.

கல்வி தொழிலுக்கும் வழி காட்டுகிறது. கல்வி என்பது வாழ்க்கை வாழ்வதற்காக உதவும் கருவியாகும். அறிவியலும் சமூகமும் வாழ்நாள் முழுவதும் தொடரும் கருவியாகும். வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை இனங்கண்டு அதற்கேற்ப கற்க வேண்டும். வாழ்க்கையை நெறிப் படுத்தவும் மேம் படுத்தவும் கல்வியை பயன்படுத்த வேண்டும். கல்வி கற்றவரிடம் ஒழுக்கம் பண்பு நேர்மை நீதி இவை அனைத்தும் ஒருங்கே அமைந்து காணப்படும். எனவே கல்வி யானது ஒரு மனிதனின் முக்கிய தேவை யாக இருக்கிறது. எந்தவொரு சமூகத்திலும் ஆண் பெண் என்ற வேறுபாடின்றி கல்வி இல்லாமல் இருப்பது இக்காலத்தைப் பொறுத்த வரை மிகவும் தாழ் வாகவும் இழிவாகவும் கருதப்படும்.

வெளிநாட்டவருக்குத் தமிழரின் விருந்தோம்பல் மிகவும் ஒரு அதிசயமாகப் பார்க்கப்படுகிறது தற்போதைய எதிர்காலச் சந்ததிகள் வெளிநாட்டுக் கலாச்சாரத்தில் மூழ்கி விருந்தோம்பலைத் தொலைத்துவிடாமல் காக்க பலகுறள்கள் எடுத்தியம்புகின்றது. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை  பருவந்து பாழ்படுதல் இன்று விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை. என இக் குறள் விளக்குகிறது.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள். இதேப்போன்று பண்பைப்பற்றியும் வள்ளுவர் எமது இளையோருக்கு ஏற்றவகையில் கூறியிருக்கிறார். பண்பை அவர் தம்  பண்பான குடும்பத்தில் கற்றுக் கொள்ளவேண்டும் எனக் கூறுகிறது.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு. 

எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும். தற்காலத்தில் அன்பை விட பணமே அதிக சிறந்தது என எண்ணுகின்றவர்களால் அன்பு சீரழிகிறது.

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.

நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.

அதேபோல் குடும்பவாழ்வு பற்றிக் கூறுகிறார். எதையும் முகம் கொடுத்து வாழவேண்டும் அப்போது நல்லகுடும்பமாக வாழலாம் என்கிறார் வள்ளுவர். ஆனால் இன்றைய சமூகத்தில் படித்த பெண்களை புறந்தள்ளும் செயலாக உள்ளது எனப் பெண்கள் பொருள் கொள்கிறார்கள். இவைபற்றிய சில குறள்கள்.

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.

நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன் நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும். என குறள் கூறுகிறது  எனவே கணவன் தனது மனைவியைத் திருத்தி ஒழுங்கமைப்பது என்பது சிக்கலான விடயமாகி தற்போது உள்ளது. இதனால் பலர் வாழ்வு முறிந்து போய்விடுகிறது.

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.

மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான். வள்ளுவர் மனைவிக்கு அஞ்சாது வாழ் என்கிறார் இதனால் இக்காலத்தில் பல பெண்கள் பெண்விடுதலை என்று குடும்பப் பிரிவுகள் ஏற்படுகிறது..

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.

மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர் தம்முடைய நண்பர்க்கும் உறவிற்கும் உற்ற குறையையும் செய்து முடிக்கமாட்டார்; அறத்தையும் செய்யமாட்டார். இதனால் தற்காலத்தில் தனது சொந்தங்களையும் நண்பர்களையும்  இழந்து தவிப்பான். மனைவியிடம் எதிர் வாதம் செய்தால் நிம்மதியை இழக்கின்றான் இது எதிர்காலச்சந்ததிக்கு பொருந்துமா? என்ற கேள்வி எழுகிறது.

திருக்குறளில் தற்காலத்தில் படித்த இளம் சந்ததிகளுக்கு பலவித அறிவுரைகளை வழங்கினாலும் படித்த பெண்களால் ஏற்கப்படாத சில குறள்களும் உள்ளது அவை பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கம் ஒற்றுமையாக வாழ வேண்டும் அப்போது குடும்பம் அமைதியாக அறத்துடன் வாழும் என்று கூறுவதை பல படித்த பெண்கள் உயர்வுதாழ்வு என எண்ணி பெண்ணடிமைத்தனம் எனக் கூறுவதால் அவர்கள் வாழ்வில் சலசலப்பு ஏற்படுவதைக் காணமுடிகிறது எனவே உலகத்தால் ஏற்கப்பட்ட நல்ல பலவிடயங்களைக் கொண்ட சொன்ன வள்ளுவர் பெண்கள் அறம் என்று  கூறிய விடயங்களில் எதிர்கால படித்த சந்ததியினர் சில குறள்களில் முரண்படுவது தவிர்க்கமுடியாது உள்ளது.   


குறிப்பு: பண்ணாகம்.காம் ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி, ஜெர்மனி எஸ்ஸன் நகரில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் வாசித்தளித்த கட்டுரை

நன்றி -   மின்தமிழ் பண்ணாகம்: http://www.pannagam.com/ekk-news-page
 ________________________________________________________ 
 
திரு.இ.க.கிருஷ்ணமூர்த்தி (கண்ணன்)
பண்ணாகம் இணைய ஆசிரியர்
________________________________________________________ 




 

No comments:

Post a Comment