Pages

Sunday, February 28, 2016

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 10

-செல்வன்.


சன்னா: வேளச்சேரி பிரகடனம் தான். அந்தப் பிரகடனத்தை சிறுத்தைகள் 2007 செப்டெம்பரில் கொண்டுவந்தார்கள். இந்தப் பிரகடனத்திற்கு பின் கட்சியில் உள்ள அனைத்துப் பதவிகளும் கலைக்கப்பட்டன. புதியதாக இப்பதவிகளுக்கு விண்ணப்பம் செய்ய அனைத்துப் பகுதி மக்களும் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். இதன்பின் 2008 மார்ச் 21 முதல் தலித்துகள், முஸ்லிம்கள், தலித் அல்லாதவர்கள் உட்பட புதிய நிர்வாகிகள் பதவியேற்றார்கள். தலித் அல்லாதவர்கள் கட்சியில் சேர்க்கப்படுவதற்கான ஒரு காரணம் தமிழ்த் தேசியமாகும். கட்சியை ஜனநாயகமயமாக்கவும் இது உதவியது

பேரா யூகோ: இது வரவேற்கத்தகுந்த மாற்றமாகும். ஆனால் கட்சி தொண்டர்கள் சொல்வது என்னவெனில் "20 வருடங்களாகக் கட்சிக்கு உழைத்தோம். கட்சிக்காக அடிபட்டோம். சிறைச்சாலைக்குச் சென்றோம். இப்போது கட்சியாக மாறியவுடன் தலித் அல்லாதவர்கள் பதவிக்காக கட்சியில் சேருகிறார்கள்" என்கிறார்கள். கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் தலித் அல்லாதவர்களை ஏற்றுக்கொண்டார்களா?

சன்னா: தலித் அல்லாதவர்கள் தலித்துகளை ஏற்றுகொள்ளாமல் இருப்பது போல தலித்துகள் மத்தியிலும் தலித் அல்லாதவர்கள் மேல் அதே போன்ற தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. அத்தகைய தயக்கம் இல்லாமல் இருக்காது. அது இல்லையெனச் சொல்லி நாம் உண்மையை மூடி மறைக்கவும் முடியாது. நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு கட்சி என்பது ஒரு சமூகத்தின் கருத்துக்களின் வெளிப்பாடே ஆகும். உங்கள் கட்சிவேலை முடிந்தபின் நீங்கள் வீட்டுக்குத் தான் செல்லவேண்டும். வீட்டுக்குப் போனாலும் கட்சிவேலையை செய்வதை நிறுத்த முடியாது. கட்சியும் சமூகமும் ஒன்றே. ஆக சமுதாயத்தில் என்ன பிரச்சனைகளை சந்திக்கிறோமோ அதைக் கட்சியிலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. தலித் ஒருவரின் வீட்டருகே உள்ள இன்னொருவர் தலித்தை புறக்கணித்து, தலித்தின் வீட்டை எரித்து, சாதிமோதலை உருவாக்குவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகையில் தலித்துகளுக்கு தலித் அல்லாதவர்கள் மேல் சந்தேகம் வரத்தான் செய்யும். சமுதாயம் மாறினால் தான் இத்தகைய தயக்கமும், சந்தேகமும் கட்சிக்குள்ளும் நீங்கும். சமுதாய இயக்கங்கள் இத்தகைய கோணத்தில் சிந்தனைகளைக் கொண்டிருக்கையில் சாதிய வழி கண்ணோட்டங்களும் நீடிக்கவே செய்யும். ஆக தலைமை பதவியில் இருப்பவர்கள் இதை உணர்ந்து சமுதாய மனமாற்றத்துக்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்.

ஒரு இயக்கமாக நாம் அந்த நோக்கத்தை முன்னிறுத்தி பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும். அதை நாங்கள் செய்து வருகிறோம். அத்துடன் நில்லாது அதை மேலும் துரிதப்படுத்தவும் இருக்கிறோம். அப்படிச் செய்கையில் "நான் கட்சியில் 20 ஆண்டுகளாக இருக்கிறேன். நான் ஏன் அங்கீகரிக்கப்படவில்லை" என்பது போன்ற கேள்விகளை எதிர்கொள்ள நேரும். அந்தக் கேள்வி ஏன் தவறானது எனில் தலித் அல்லாதவர்கள் தலித்துகளின் தலைமையை ஏற்றுக் கட்சியில் இணைகையில் அது தலித்துகளுக்கு கிடைக்கும் ஒரு அரசியல் அங்கீகாரமே ஆகும். இந்தக் கோணத்தை நாம் பரவலாக புரியவைக்க வேண்டும். ஆனால் அதற்குக் காலம் பிடிக்கும் என்பதை உணர்ந்தே இருக்கிறோம்.

பேரா யூகோ: தலித் அல்லாதவர்கள் கட்சியில் சேர்கையில் தனிநபர்களாக சேர்கிறார்களா அல்லது அவர்களது இனக்குழுவின் சார்பில் இணைகிறார்களா?

சன்னா: தற்போதைய நிலையில் அவர்கள் தனிநபர்களாக தான் இணைகிறார்கள்.

பேரா யூகோ: அப்படியானால் இது தேர்தல் ரீதியாகக் கட்சிக்கு பெரிய அளவிலான வலுவை அளிக்காது. ஆனால் தேர்தல் அரசியலைக் கூட ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் தலித் அல்லாதவர்கள் கட்சியில் இணைவதால் சமூகரீதியான பயன்பாடுகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா?

சன்னா: நாங்கள் அரசியலில் இறங்கி ஜனநாயக பாதைக்கு திரும்பிய பின்னரே இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தேர்தல் புறக்கணிப்பை நாங்கள் தொடர்ந்திருந்தால், இத்தகைய வாய்ப்புக்கள் மிகக் குறைந்திருக்கும். ஏனெனில் தலித் அல்லாதவர்கள் எங்கள் கட்சியில் இணைந்தாலும் அவர்கள் புரட்சிகர மனப்பான்மையுடன் எங்கள் கட்சியில் இணைகிறார்கள் எனக் கூற இயலாது. அவர்கள் ஒரு ஜனநாயக சக்தி என வேண்டுமானால் கூறலாம். புரட்சிகர நோக்கம் கொண்ட இடைநிலை சாதிகள் நாங்கள் தேர்தல் புறக்கணிப்பைத் தொடர்ந்தபோதும் எங்களுடன் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். பதவிகளை எதிர்பார்த்து அவர்கள் எங்களுடன் இணையவில்லை. இப்போதும் அவர்களுக்கு அந்த நோக்கம் இல்லை. அவர்கள் கட்சிக்குள்ளும், அடிமட்ட அளவிலும் அமைதியாக அதிகம் வெளித்தெரியாமல் இயங்கி வருகிறார்கள். அவர்களைக் கட்சியின் தூண்கள் எனலாம். ஆனால் புதிதாக கட்சியில் சேரும் தலித் அல்லாதவர்களை வெறுமனே ஜனநாயக சக்திகள் என்றே கூற இயலும். கட்சிக்கு அவர்களால் பலனுண்டு. கட்சியால் அவர்களுக்குப் பலனுண்டு. இத்தகைய புரிதலுடனே இந்த உறவு தொடர்கிறது எனினும் காலப்போக்கில் இது மாறும் என எதிர்பார்க்கலாம்.


---..(திரு. சன்னா அவர்களின் நேர்காணல் தொடரும்...)..---
 
 
 

___________________________________________________________
 

 செல்வன்
 holyape@gmail.com
___________________________________________________________
 

No comments:

Post a Comment