Pages

Friday, October 30, 2015

விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஆங்கிலோ இந்தியன் பள்ளி (1938)

- கோ.செங்குட்டுவன்.



கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் விழுப்புரம் இரயில்வேயில் பெருமளவு– ஆங்கிலோ இந்திய – தொழிலாளர்கள்தான் பணியாற்றினர். இவர்கள் தங்கள் குழந்தைகள் பயிலுவதற்கு தனியாக ஒரு பள்ளித்தேவை எனக் கருதினர். தங்கள் எண்ணத்தை அப்போதைய புதுச்சேரி மறைமாவட்டப் பேராயர் டாக்டர்.கோலஸ் என்பவரிடம் வெளிப்படுத்தினர்.

இதன்பேரில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கார்மேல் கன்னியர் சபையால் நடத்தப்பட்டு வந்த தெரசா எனும் கத்தோலிக்கக் கல்வி நிறுவனத்தை டாக்டர். கோலஸ் அணுகினார். இதனைத் தொடர்ந்து மேரி, ரீட்டா ஆகியோர் தலைமையில் செர்லிஸ்டெய்ன், ஹயாசின்த், பெனிகுனா ஆகியோர் அடங்கிய கார்மேல் கன்னியர் சபையினர் விழுப்புரம் வந்தனர்.

கிழக்குப் பாண்டிரோடில் இரயில் நிலையம் மற்றும் கிறிஸ்து அரசர் ஆலயத்தையொட்டி மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த “லாபோன்சா பங்களா” பள்ளிக்காகத் தேர்வு செய்யப்பட்டது. புதுச்சேரியை சேர்ந்த ஆங்கிலோ இந்தியக் குடும்பத்தினர் அந்த இடத்தை இவர்களுக்கு வழங்கினர். அங்கு, 21.01.1938இல் “சேக்ரட் ஹார்ட் கான்வென்ட்” தொடங்கப்பட்டது.

கார்மேல் கன்னியர் சபையால் கேரளாவுக்கு வெளியே சென்னை மாகாணத்தில் தொடங்கப்பட்ட முதல் கல்வி நிறுவனம், இக்கல்வி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில் இங்குப் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 18. மேலும், அன்றைய விழுப்புரத்தில் இரயில்வே இருபாலர் பள்ளி இயங்கி வந்ததால், சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் 5,6,7ஆம் வகுப்புகளுடன் தொடங்கப்பட்டது என்பதும், பின்னர்தான் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகள் தொடங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

1947இல் இப்பள்ளி நடுநிலைப்பள்ளியாகவும், 1949இல் உயர்நிலைப்பள்ளியாகவும், 1978இல் மேனிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் வியாபித்துள்ளனர்.

இங்கு உயர்தர இசைப்பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பியானோ கற்றுக் கொண்ட மாணவர்கள், புகழ்ப்பெற்ற இலண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் மிகச்சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றனர் என்பது, விழுப்புரத்துக்குப் பெருமை சேர்க்கும் விசயமாகும்.   


 



 
 
கோ.செங்குட்டுவன் 

ko.senguttuvan@gmail.com
 
 
 
 
 
 

No comments:

Post a Comment