Pages

Thursday, January 27, 2022

வீரமங்கை வேலு நாச்சியார் கல்வெட்டு

வீரமங்கை வேலு  நாச்சியார் கல்வெட்டு

-- கடலூர் ந. சுந்தரராஜன்

சிவகங்கை ராணி வேலுநாச்சியாரின் தமிழ்க் கல்வெட்டு

தமிழகத்தில் சிவகங்கை சமஸ்தானத்தின் ஆட்சிப் பொறுப்பினை தனது கணவரான முத்துவடுகனாதரின் மறைவிற்குப் பின்னர் வேலுநாச்சியார் கவனித்துக் கொண்டார். மன்னர்  இறந்ததினால் குழப்பநிலை ஆங்கில ஏகாதிபத்தியத்தின் நெருக்கடி போன்ற நிலைகளைச்  சமாளித்து மருதுபாண்டியர் மந்திரி தாண்டவராயப் பிள்ளை ஆகியோரின் துணையோடு1776  வரை ஆட்சி செய்தார்.

வேலுநாச்சியார் காலக் கல்வெட்டு ஒன்று சிவகங்கை நகருக்கு அருகில் உள்ள சக்கந்தி என்ற ஊரில் பிள்ளையார் கோவிலில் கண்டறியப்பட்டு சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

          ஸ்ரீ சக்கந்தி அய்யா முத்து 
          வடுகனாத தேவரய்யா அவர்கள் 
          பாரியாள் வேலு நாச்சி 
          யாரவர்கள் உபயம் 




சிவகங்கை ராணி சக்கந்தியில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு உபயமாக செய்ததன் நினைவாக இக்கல்வெட்டு வெளியிடப்பட்டிருக்கலாம்.  இந்தியாவின் விடுதலைப்போராட்டத்திற்கு எனக் குரல்கொடுத்த முதல் தமிழ் பெண்ணரசி சிவகங்கை ராணி வேலுநாச்சியாரின் தமிழ்க் கல்வெட்டு
வெளியிட்ட கல்வெட்டு என்பது இதன் சிறப்பு. 





வீர மங்கை வேலு  நாச்சியார் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுக்  கொண்டு வரப்பட்ட விதம்:
அருங்காட்சியகம் சிவகங்கை நகரில் தொடங்க ஆயத்தப் பணிகள் நடைபெற்று வந்த காலம், ஆண்டு 1997-98. இருக்கை கூட இல்லா நிலையில் தமிழ் வளர்ச்சித் துறை  அலுவலர் அலுவலக மேசையில் ஒரு நாற்காலி ஒரு மரப்பெட்டி உடன் ஒண்டு குடித்தனம் தொடங்கிய காலகட்டம். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் வட்ட வடிவில் இருக்கும். தமிழ் வளர்ச்சி அலுவலகம் எதிரே சமூக நலத்துறை இருந்தது.  அங்கே பாலு என்ற இளைஞர் பணிபுரிந்தார். "சார், எங்கள் ஊர் சக்கந்தி, அது வேலு நாச்சியார் பிறந்து வளர்ந்த ஊர். நீங்கள்  வந்தால் நன்றாக  இருக்கும்,"  என்றார். 

எனது வெள்ளை நிற ஸ்கூட்டியில் பாலுவுடன் பத்துக் கிலோமீட்டர் பயணித்து சக்கந்தி கிராமத்தை அடைந்த போது சூரியன் கோபம் கொண்டு மேற்கில் கருமேகங்கள் இடையே ஓடத் தொடங்கினான்.  இது தான் பிள்ளையார் கோயில் என்றார் பாலு.  ஒரு கருவறை மற்றும் மண்டபத்துடன் கூடிய அமைப்பு. கோயில் உள்ளே செல்ல ஒன்றே கால் அடி நீளம் ஓர் அடி நீளம் முக்கால் அடி உயரம் கொண்ட படிக்கட்டுக்  கல் இருந்தது. "பாலு இந்தக் கலை  திருப்பிக் கவிழ்த்துப் போட முடியுமா?"  என்றேன்.  உதவிக்கு எங்கிருந்தோ கடப்பாரை உடன் வந்த தன்னார்வலர் திருப்பிப் போட்டபோது அதில் எழுத்துக்கள் இருப்பது தெரிந்தது. அதை கோவை  இலை போட்டுத்  தேய்த்த பின்தான் படிக்க முடிந்தது.  

அந்த கல்வெட்டில்   "ஸ்ரீ சக்கந்தி அய்யா முத்து வடுகத் தேவரய்யா பாரியாள் வேலு நாச்சியார் உபயம்" என்ற வரிகள் இருந்தது இன்றும் பசுமையாக என் நினைவில் உள்ளது.  பாலு என்று அழைத்து சற்றே புருவம் உயர்த்தினேன்.  உடனே பாலு "அந்தக் கல்லை சார் ஸ்கூட்டில வைங்க" என்றார்.

மாலை சூரியன் தொடுவானத்தைத்  தொட்டு விடத்  துடித்தான். என் ஸ்கூட்டி புகை கக்கிப்  புறப்படும் போது, "சார், வழியில் காட்டு மாடு இருக்கும் பார்த்து போங்க என்றார்". "காட்டு மாடென்றால்??!!" என்று இழுத்தேன்.அது வீட்டில்  வளர்க்கும் மாடுதான்,  காட்டில்  தங்கிவிட்டால்  காட்டு மாடாக  மாறி மனிதர்களையும்  முட்டித்  தாக்கும்" என்றார். காட்டு மாடு பயத்துடன் சிவகங்கை வந்து அடைந்தேன். மாவட்ட ஆட்சியரிடம் கல்வெட்டு செய்தியைத்  தெரிவித்த போது, "பரவாயில்லையே!!! மியூசியமே திறக்கவில்லை  அதற்குள் கல்வெட்டு சேர்த்து விட்டீர்களே," என்றார். 

[ந. சுந்தரராஜன் காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், கடலூர் - 1]


1 comment:

  1. சுவையாத் தரப்பெற்றுள்ள தகவல்.

    ReplyDelete