Pages

Monday, February 1, 2016

சேலம் ஆத்தூர் அருகே 16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு


-- ஆறகழூர் பொன்.வெங்கடேசன்.


தொல்லியல் படிவம்:
சேலம் ஆத்தூர் அருகே 16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

கண்டுபிடித்தவர்: 
தொல்லியல் முனைவோர்  திரு. ஆறகழூர் பொன்.வெங்கடேசன்

இடம்:
சேலம் மாவட்டம் தலைவாசலுக்கு அருகே உள்ள நத்தக்கரை கிராமம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே உள்ள வரலாற்று புகழ் மிக்க ஊர் ஆறகளூர். இந்த ஊருக்கு வடக்கு பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர் நத்தக்கரை.

கல்வெட்டு:

நத்தக்கரையில் வசிக்கும் தலைமை ஆசிரியர் மனோகரன் என்பவரின் வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் 85 செ.மீ நீளமும், 45 செ.மீ. அகலமும் உள்ள கற்பலகையில் இரு புறங்களிலும் 49 வரிகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது

இக்கல்வெட்டு கி.பி.1585 ஆம் ஆண்டு வெட்டப்பட்டுள்ளது. சுபமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் என நட்சத்திர குறிப்புகளோடு இக்கல்வெட்டு ஆரம்பமாகிறது.

ஆறகளூரில் உள்ள காமநாகேஸ்வரர் கோயிலில் உள்ள பெரியநாயகிக்கு, நத்தக்கரை கிராமம் நாயக்க மன்னர்களால் ஆற்றூர் (தற்போதைய ஆத்தூர்) நட்டவாரிடம் தானமாக தாரை வார்த்து வழங்கப்பட்டது என கல்வெட்டு தெரிவிக்கிறது.

மேலும், இக்கல்வெட்டு குறிப்பிடும் தானத்தை அழிவு செய்வோர் கங்கை கரையிலே சினைப் பசுவை கொன்ற பாவத்திற்கு உள்ளாவார்கள் என கல்வெட்டு தெரிவிக்கிறது.

இக்கல்வெட்டை நாட்டவர்கள் சொல்ல ஆற்றூரை (தற்போதைய ஆத்தூர்) சேர்ந்த நாட்டு கணக்கணான காமீஸ்வரன் பொறித்துள்ளார் என்பதை இக்கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.

தலைவாசலுக்கு கிழக்கு, நாவல்குறிச்சிக்கு தெற்கு, பெரியேரிக்கு மேற்கு, இடைப்பட்ட நத்தகரை கிராமம் என கிராமத்தின் நான்கு எல்லைகளையும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

11 ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரை ஆறகளூர் மகதை நாடு என்ற குறுநில நாட்டின் தலைநகராய் இருந்தது.

மூன்றாம் குலோத்துங்க சோழனின் தளபதியாய் இருந்த பொன் பரப்பின வாணகோவரையன் என்பவர் ஆறகளூரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்துள்ளார். சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசு, நாயக்கர்கள் கீழ் ஆட்சி நடந்துள்ளது.

எனவே, ஆறகளூரை சுற்றி உள்ள பகுதிகளில் இன்னும் புதிய கல்வெட்டுக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆய்வாளர்கள்:
கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், மங்கை வீரராகவன், பொன்.வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய குழு இந்த கல்வெட்டை ஆய்வு செய்தது

படங்கள்:  




___________________________________________________________
 

தொல்லியல் முனைவோர்
திரு. ஆறகழூர் பொன்.வெங்கடேசன்
ponvenkatesan64@gmail.com
___________________________________________________________
 



2 comments:

  1. பதிவுக்கு மிக்க நன்றி மேடம்

    ReplyDelete
  2. உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete