Thursday, March 26, 2015

ஆடானையப்பர் ஆலயம் - பாண்டியநாட்டு பாடல் பெற்ற தலம்

-- சொ.வினைதீர்த்தான்

ஆடானையப்பர் ஆலயம்
பாண்டியநாட்டு பாடல் பெற்ற தலம் வழிபாடு



திருவாடானை அரசு கலைக்கல்லூரி மணிமேகலை காப்பியம் குறித்த பயிலரங்கில் உரையாற்றச்சென்றிருந்தபோது 23.3..2015 மாலை பாண்டியநாட்டில் பாடல்பெற்ற பதினான்கு கோவில்களில் ஒன்றாகிய ஆடானையப்பர் கோவிலில் வழிபட்டுவந்தேன்.

 
இராமநாதபுரம் சமத்தானத்தின் ஆளுகைக்குட்ட நகரத்தார் திருப்பணியான கோவில் குடமுழுக்கு காணவிருக்கிறது. அருமையான சிற்பத்தொகுதிகள் நிறைந்த 130 அடி ஒன்பதுநிலை கோபுரத்திற்கு வண்ணபூச்சு வேலை பூர்த்தியாகவிருக்கிறது.


1.ஆடானையப்பர், ஆதிரத்னேசுவரர், அஜகஜேசுவரர் என்று பெருமான் அழைக்கப்படுகிறார். நல்லவேளை ஊர் அஜகஜேஸ்வரம் என்றில்லாமல் ஏழாம் நூற்றாண்டில் ஞானசம்பந்தப்பெருமான் அழைத்த ஆதியான் உறை ஆடானை  என்ற பெயரிலேயே திருவாடானை எனப்பதிவாகிவிட்டது.

புராணக்கதை மிகவும் பொருள்பொதிந்தது. வருணன் மகன் வாருணி என்பான் துர்வாசமுனிவரின் வேள்விக்கு இடையூறு செய்துவிடுகிறான். கோபத்திற்கு பெயர்போன துர்வாசர் மரபுக்குப்பொருந்தாத செய்கை புரிந்ததால் ஆட்டின் தலையும் யானையின் உடலும்கொண்ட பொருந்தா உருவமடையுமாறு வாருணிக்குச் சாபம் அளித்துவிடுகிறார். ஆட்டின் வாயால் யானை உடலுக்கு ஏற்றவாறு உண்ணமுடியாமல் அவன் பசிப்பிணியடைகிறான். மணிமேகலை கதையில் வருகிற காயசண்டிகையும் கூட ஒரு முனிவர் உண்ண வைத்திருந்த அருங்கனியை அவர் குளிக்கச்சென்றிருந்தபோது சிதைத்துவிடுவதால் தீராப்பசி நோய்க்கு ஆளாகும்படி முனிவருடைய சாபத்தைப்பெறுகிறாள். பின்பு அமுதசுரபி உதவியால் அவள் பசிப்பிணியை பாரகம் அடங்கலும் பசிப்பிணி தீர்த்த பாவையாகிய மணிமேகலை போக்குகிறாள். இங்கு வாருணி சூர்ய தீர்த்தத்தில் மூழ்கி சிவனை வழிபட்டுச் சாபவிமோசனம் பெறுகிறான்.
 
ஒருவன் பொருந்தாத செய்கை செய்தால் என்ன நிகழும் என்பதை இத்தொன்மக் கதைகள் உணர்த்தும் செய்தியாக நான் மாணவர் பயிலரங்கில் பகிர்ந்துகொண்டேன். மாணவர்கள் படிக்கும் காலத்தில் மாணவருக்குப் பொருந்தாத செயலில் ஈடுபட்டால் துன்பப்படவேண்டும் என்பதை உணர்த்தினேன்.
 
2.முன் மண்டபம் வித்தாரமான கல்திருப்பணி. 108 தூண்கள். பெரும்பாலும் வடிவங்கள்,பூக்கள்,பறவைகள் என்ற வகையில் பலநூறு புடைப்புச்சிற்பங்கள். தூண்களின் வரிசையும் ஒழுங்கும் அத்தூண்கள் தாங்கும் கல்பலகைகளின் வேலைப்பாடும் கவர்வன. 

3.திருச்சுற்று மண்டபத்தில் அறுபத்துமூவர் பத்தியில் ஒவ்வொரு அடியாருக்கும் மேலே சுவரில் அவருடை வண்ணத்திருவுரு ஓவியம் தீட்டப்பட்டுள்ளது வேறெங்கும் காணக்கிடைக்காதது.

 
4.ஆலமர்செல்வனின் மண்டபம் அழகான சிற்ப தூண்களுடன் கருங்கல் திருப்பணி.சனகாதி முனிவர்கள் நால்வரும் வரிசையில் அமர்ந்துள்ளனர்.
 

5.இங்குள்ள முருகனை அருணகிரிநாதர் “ஆசாரபக்தியுடன் ஞானாகமத்தையரு ளாடானை நித்தமுறை பெருமாளே” என்று ஞானம் பெற வழிகாட்டியவனெனத் தொழுகிறார்.
 
 
6.ஆதிரெத்னசுவரர் என்ற திருப்பெயருடனும் அழைக்கப்படுகிற சிறிய இலிங்கத் திருவுரு இரத்தினம்போல விளக்கொளியில் ஒளிவிடுகிறது.

7.சுவாமியின் இடப்பக்கத்தில் கிழக்கு நோக்கி முன்மண்டபம், சுற்றுப்பத்தி என்று பரந்த தனிக்கோவிலில் அம்பிகை அன்பாயி, அன்பாயிரவல்லி, சினேகவல்லி என்ற திருபெயர்களோடு அருளாட்சி செய்கிறாள். வல்லி என்றாள் கொடி. அன்பு,சினேகம் ஒரு கொடியாகத்தழுவினால் எவ்வளவு பேறு!
 
8.இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமானை மலரால் அர்ச்சித்து மனதால் சிந்தித்து நாவால் அவன் புகழ்பாட வளமெல்லாம் பெருகும் என்பது உறுதியென திருஞானசம்பந்தர் பதிகம் அருளியுள்ளார். “போதினார் புனைந்து ஏத்துவார்தமை வாதியா வினைமாயுமே”என்பதும்”அங்கை யானுறை யாடானை நாதனை தன்கையால் தொழுதுஏத்தவல்லவர் மங்கு நோய் பிணிமாயுமே” என்பதும் அவருடைய திருவாக்கு.

  
திருக்கோவில் படங்கள் பகிர்ந்துள்ளேன்.  நண்பர்கள் ஆதிரத்னேசுவரர் என்னும் ஆடானைஅப்பர், சினேகவல்லித்தாயார் அருள்பெற வாழ்த்துகிறேன்.
 
 






 



 
 
 


Wednesday, March 25, 2015

மனோசக்தியின் மகிமை

-- தேமொழி

ஹேவுட் என்னும் ஐரோப்பியர் கல்கத்தா டெலிகிராப் பத்திரிக்கைக்குக் கொடுத்த தகவல்


சில வியத்தகு நிகழ்வுகள் அவ்வப்பொழுது இந்தியாவில் நிகழ்கின்றன. அறிவியலுக்கு அப்பாற்பட்ட இந்த நிகழ்வுகளை விளக்கவும் வழியில்லை. 

மூன்று மாதங்களுக்கு முன் நான் கோவையிலிருந்து திருச்சிக்கு தொடர்வண்டியில்  முதல் வகுப்பில் பயணம் செய்த பொழுது எதிர்கொண்ட புதுமையான வியக்கவைக்கும் நிகழ்விது.   

இரண்டாம் வகுப்பில் உடல்முழுவதும் திருநீறு அணிந்து, நீண்ட சடைமுடியுடனும் கண்களிலும் முகத்திலும் ஒளி துலங்க, பற்றற்ற வகை என்று சொல்லக்கூடிய  பார்வையினைக்  கொண்ட துறவி ஒருவரைக் காண நேர்ந்தது.  

நிலையத்தில் வண்டியில் ஏறுமுன்னரே அவரை நான் பார்த்திருந்தேன். பயணச்சீட்டு இன்றி வண்டியில் நுழைந்தவரை பயணச்சீட்டு சோதனை  செய்பவர் வெளியில் இறக்கி விட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த நினைவிருந்தது. இப்பொழுது மீண்டும் அவரை வண்டியினுள் கண்டதும் பக்தி நிறைந்தவர் யாரோ அவருக்காக பயணச்சீட்டு வாங்கிக் கொடுத்து உதவினார்கள் போலும் என எண்ணிக் கொண்டேன். 

சற்றுக் கழித்து சோதனை செய்பவர் அவரிடம் ஏதோ சர்ச்சையில் இறங்கவும் ஏற்பட்ட சத்தம் என் கவனத்தைக் கவர்ந்தது. . துறவி  பயணச்சீட்டு  இல்லை என்று தலையை மட்டுமே அசைத்து  உணர்த்தினார், வாய்திறந்து  மறுமொழி அளிக்கவில்லை.  இதற்குள் வேடிக்கை பார்க்கவென ஒரு கூட்டமும்  சேர்ந்துவிட்டது.   கோபமுற்ற சீட்டு பரிசோதகரால் மீண்டும் துறவி  வண்டியிலிருந்து இறக்கிவிடப்பட்டார். நானும் அத்தோடு அந்த செயலுக்கு முடிவேற்பட்டது என்றுதான் நினைத்தேன். 

ஆனால், நடந்தததோ வேறு.  அத்துறவி நடைமேடையில் நின்றுகொண்டு வண்டியை முறைத்துப் பார்த்தவாறே  இருந்தார்.  வண்டி புறப்படும் நேரம் வந்தது.  புறப்படும் மணியும் அடித்தாகிவிட்டது. வண்டியை இயக்கத் தொடங்கினார்கள். ஆனால், எவ்வளவு முயன்றும் தொடர் வண்டி நகரவில்லை.  நிலைய ஊழியர்கள் பரபரப்பாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.  

இயந்திரக் கோளாறாக இருக்கும் என்று எண்ணி அந்த என்ஜினை நீக்கிவிட்டு வேறொண்டு பொறுத்த நினத்தாலும், தண்டவாளத்தில் இருந்து அதை நகர்த்தவும் முடியவில்லை. அப்பொழுது சிலர் துறவியை வெளியேற்றியதால் அவர் வண்டியை நிறுத்திவிட்டார் என்று நிலைய அதிகாரியிடம் கூறவும் அவர் சிரித்தார்.  இதற்குள்  இயந்திரப் பரிசோதனையில் வண்டியில் பழுதொன்றும் இல்லை என்ற தகவலும் கிடைத்தது. பழையபடி இயக்க முற்சித்தபொழுதும், நீராவி மட்டும் வெளியேறியதே ஒழிய வண்டி நகரவேயில்லை. 

வேறுவழியின்றி நிலைய  அதிகாரி துறவியை அணுகி பேசத் துவங்கினார். துறவி தான் போக வேண்டிய இடத்திற்குத் தேவையான பயணச் சத்தத்திற்கான  பணம் தன்னிடமில்லை என்றும், தனக்கு யாரும் துன்பம் தராமல் தான் விரும்பும் இடத்திற்குப் பயணம் செய்ய உதவவேண்டும், அவ்வாறு உறுதியளித்தால் வண்டியை தடை செய்யமாட்டேன்  என்று சைகையால் தெரிவித்தார்.  வேறுவழியின்றி தொடர்வண்டியின் அதிகாரிகள் இசைவு தெரிவித்தனர். 

துறவியும் அவசரமின்றி அமைதியாக தான் முன்னர் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று அமர்ந்துகொண்டு, இனி வண்டி புற்றப்படலாம் என்ற தோரணையில் சைகையால்  அனுமதி வழங்கினார். அந்தக் குறிப்பின்படி அதிகாரி குழுலூதி, கொடியை அசைத்ததும் ஓட்டுனர் வண்டியை இயக்கினார், என்ன வியப்பு வண்டியும் நகரத் துவங்கியது. 




நாடார் குல மித்திரன், 1922ம் ஆண்டு டிசம்பர் 11 அன்று  வெளிவந்த  இதழ்  (மலர் 4 - இதழ் 11) தந்த செய்தி 

தேமொழி
[ themozhi@yahoo.com ]

Tuesday, March 17, 2015

1921 ஆம் ஆண்டின் தமிழகத் தொழிலாளர் புள்ளிவிவரம்

– தேமொழி.


 
1922ம் ஆண்டு டிசம்பர் 1  ஆம் தேதி வெளிவந்த நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை (மலர் 4 - இதழ் 10)  இதழில் வெளியான, தமிழகத்தைப் பற்றிய கருத்தைக் கவரும் புள்ளிவிவரங்களின் தொகுப்பு ...


லாகூர் ச. போ என்பவர் எழுதிய கட்டுரை சென்னை மாகணத்தின் தொழில் நிலை பற்றிய புள்ளிவிவரங்கள் 1922ம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதியன்று வெளிவந்த இதழில் தரப்பட்டுள்ளன:
  • 1921 ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி ...14% மக்கள் மட்டுமே தொழிற்சாலைகளை  நம்பி வாழ்க்கை நடத்தினார்கள் 
  • நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்  எண்ணிக்கை 14,06,286

தொழில் நிறுவனங்கள்:
  • 2105 தொழில் நிறுவனங்கள் மட்டுமே சென்னை மாகாணத்தில் இருந்தன. இவற்றில், 13,06,270  ஆண்களும்; 41,269 பெண்களும் பணிபுரிந்தனர்.
  • இந்தியத் தொழிலாளிகளில் 14 வயதிற்கு உட்பட்டவர்களில் 6,353 சிறுவர்களும்,   5,362 சிறுமிகளும் அடங்குவர்.
  • இத்தொழிலாளர்களில் 1,389 பேர் ஐரோப்பியரும் ஆங்கிலேய இந்தியர்களும் ஆவார்கள்.
  • சென்னையின் அரசுக்குட்பட்ட போர்க்கருவிகள் தொழிற்சாலையில் பொறுப்புள்ள நிர்வாகப் பதவியில் இந்தியர் ஒருவர் கூட இல்லை 

தொழிற்சாலை உற்பத்தி பற்றிய மேலும் விரிவான தகவல்கள்:
  • காப்பி தேயிலை போன்ற தோட்டப்பயிர்களின் உற்பத்தி பத்தாண்டுகளில் மும்மடங்கு பெருகியது.
  • 91 சுரங்கங்களும் அவற்றில் மாங்கனிசும், மைகாவும் அதிகம் வெட்டி எடுக்கப்பட்டன.  இச்சுரங்கங்களில் 6,665 தொழிலாளர்கள் வேலை  செய்தனர்.  அவர்களில் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 352 பேரும், 235 சிறுமிகளும் அடங்குவர். 
  • நெசவுத் தொழில் நிறுவனங்கள் மொத்தம் 441; இவற்றில் 33,871 ஆண்களும், 13,750 பெண்களும் பணிபுரிந்தனர்; இவர்களில் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 2,115 பேரும், 1,894 சிறுமிகளும் பணி புரிந்தனர். 

இத்தொழிற்சாலைகளில் ...
  • பருத்தி எடுக்கும் தொழிலுடன் தொடர்புடைய நிறுவனங்களின் எண்ணிக்கை 228ம்; அவற்றில் பணி செய்த ஆண்களின் எண்ணிக்கை 6,707 என்றும், பெண்களின் எண்ணிக்கை 5,075 ம் ஆகும், 14 வயதிற்குட்பட்டோரின்  எண்ணிக்கை 177.  பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஒருவரும், கிரக்கர்கள் இருவரும், நான்கு ஜப்பானியரும், ஐந்து சுவிச்சட்சர்லாந்து பணியாளர்களும் இத்தொழிற்சாலைகளில் பணி புரிந்தனர். 
  • நூல்நூற்கும், துணி நெய்யும்  தொழ்ற்சாலைகளின் எண்ணிக்கை 115 ம், இவற்றில் 23,439 ஆண்களும், 6,167 பெண்களும் பணிபுரிந்தனர்.  இவர்களில் 14 குட்பட்டோரின் எண்ணிக்கை 3,377. நிர்வாகப்பணியிலும், உயர் பதவிகளிலும் இருந்தோரில் ஒரு அமெரிக்கர் இரண்டு பிரெஞ்சுக்காரர், இரண்டு டச்சுக்காரர்களும் அடங்குவர்.
  • கைத்தறிகளின்  எண்ணிக்கை 1,69, 403.  தஞ்சை, சேலம் பகுதிகளில் விசைநாடாத் தறிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. 
  • 21,525 பேர் வேலை செய்யும் மாநகராட்சி தொழில் நிறுவனங்கள் 53 இருந்தன.  தோல் பதனிடும் தொழிற்சாலைகள் 84 ம், அதையொட்டி ய எலும்பரைக்கும் ஆலைகளும் 4,674 பேருக்கு வேலைவாய்ப்பளித்ததுள்ளது.  நவீன வகையில் அமைக்கப்பட்ட 7 சார்க்கரைத் தொழிற்சாலைகளும் சென்னை மாகாணத்தில் இருந்தன.
  • குறிப்பிடப்பட்ட அனைத்து தொழிற்சாலைகளிலும், நிர்வாகத்திலும், உயர்பதவியிலும் இருந்தவர் யாவரும் அந்நியர்களே, இவர்கள் லாபத்தில் பங்கு பெரும் முதலாளிகளாகவும் இருந்தனர்.  அங்கு பணிபுரிந்த இந்தியர்கள் கூலிகளாகவும், குமாஸ்தா, மேஸ்திரி தொழில்களில் இருந்தனர். உடல் உழைப்பைத் தந்த இவர்கள் யாவருக்கும் லாபத்தில் பங்கு இல்லை. 
  • சென்னை மாகாணத்தின் தொழில்வாய்ப்பு உயரவேண்டுமானால் அதற்கு அரசின் நடவடிக்கையும், இப்பகுதியில் வசிக்கும் செல்வந்தர்களும் முயற்சித்தால் முன்னேறலாம் என லாகூர் ச. போ என்பவர் எழுதிய கட்டுரை தகவல்கள் தருகிறது. 

பெரியாரின் பேட்டி

– தேமொழி.
அருப்புக்கோட்டை காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளரான “ஈரோடு ஸ்ரீமான் ஈ. வெ. ராமசாமி நாயக்கர்” என்றழைக்கப்பட்ட பெரியாருடன் அக்டோபர் 31, 1922 அன்று மாலை 8 – 9 மணி வரை நாடார் குலமக்களில் சிலர் ஒரு நேர்காணலில் பங்கு பெற்றார்கள்; அப்பொழுது நாடார்குல மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பெரியார் உரைத்த பதில்கள் சுருக்கமாக இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளது. இது அக்கால தமிழக நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு ஆவணம் என்ற கோணத்தில் வழங்கப்படுகிறது:
_________________
சென்னை காங்கிரஸ் பிரிவில் நாடார் இனத்தவரின் எண்ணிக்கை ஒரு நூறைக் கூட எட்டவில்லை. உங்களுக்கு காங்கிரசின் மீது நம்பிக்கை ஏற்படும்படி காங்கிரசின் நடவடிக்கை இல்லாதது இதற்கோர் காரணமாக இருக்கலாம். தற்பொழுது நடந்த மதுரை தென்காசி மாநாடுகளுக்குப் பிறகு நிலைமை மிகவும் மோசமானதாக எனக்குத் தோன்றுகிறது.
இந்நிலைக்கு அடிப்படைக்காரணமான ஊழல்களை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை. நிலைமையின் தீவிரத்தை நான் சரியாகக் கணிக்காததால், மூன்று நான்கு அதிகமான வாக்குகளினால் நாடார்களைப் பற்றிக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் * தோல்வியடைந்துவிட்டது.
பஞ்சமர்கள் கோவிலில் நுழைய ஒப்புதல் கிடைக்கும் வரை நாடார்களும் பொறுமை காத்து, பிறகு அனைவரும் கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்று கூறுவது சரியல்ல. அது நாடார் குல மக்களை நையாண்டி செய்வதற்கு ஒப்பாகும்.
சென்னை மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களை விட தென்மாவட்டங்களில் சாதிக்காழ்ப்புணர்வும் கண்மூடித்தனமும் அதிகமாக இருக்கிறது. வடமாவட்டங்களின் சில பகுதிகளில் நாடார்குலத்தையும்விட தாழ்ந்த குலம் என்று கூறப்படுபவர்கள் கோவிலுக்கு நுழையத் தடை இல்லை. ஆனால் நாடார்குல மக்களை தடை செய்யும் தெற்கு மாவட்ட மக்களின் இந்த மனநிலைக்குக் காரணம் புரியவில்லை.
எனது கட்டுப்பாட்டில் இருக்கும் 18 தேவஸ்தானங்களில் பஞ்சமர் என்று ஒதுக்கப்படுபவரும் கூட கோவிலுக்குள் செல்ல நான் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அரசாங்கம் வழங்கிய பெருமைமிகு “ராவ்பகதூர்” பட்டங்களைப் பெற்றோர் என் முயற்சியின் குறுக்கே நிற்கிறார்கள். ஆனால் விரைவில் நிலைமை மாறும் என்று தெரியும் அறிகுறிகள் சிலவற்றினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
சமீபத்தில் நான் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்ற பொழுது மேலாடையை நீக்கிவிட்டு உள்ளே நுழையும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். ஆனால், நான் கோவில் உள்ளே சென்ற பொழுது போலீஸ் காவலர் தலையில் தொப்பி, இடுப்பில் கச்சை, காலில் பூட்ஸ் ஆகியவற்றை அணிந்து நின்று கொண்டிருக்கிறார். இது நம் மக்களுக்கு ஏனோ கண்ணில் படவில்லை. இதைத்தான் பக்தியின் குருட்டுத்தனம் என்று நான் குறிப்பிடுகிறேன். இதற்குப் பிறகு பக்தியின் அடிப்படையில் மட்டுமே என் மேலாடையை எடுக்கச் சொன்னார்கள் என்று எப்படி நான் பொருள் கொள்வது?
உயர்வு தாழ்வு எண்ணங்களும், அதன்பொருட்டு சண்டைகளும் தமிழக தென்பகுதியில்தான் அதிகம் இருப்பது கண்டு என் மனம் கவலை அடைகிறது. இவையெல்லாம் அடியோடு ஒழிந்து சமத்துவம் ஏற்படாதவரை நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் அது நிலைக்காது.
அந்நியர்கள் நம்மை ஆட்சி செய்யும் நிலைக்குக் காரணம் நாமே. அவர்களை வெளியேற்றுவதும் நம் கையில்தான் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே நானும் திருவாளர் வரதராஜுலு நாயுடு அவர்களும் குறைந்தது இரண்டு மாதங்களாவது தென்னகத்தின் இப்பகுதியில் பணியாற்ற எண்ணியுள்ளோம்.
காங்கிரசார் நாடர்களின் உரிமை பற்றி மாநாடுகளில் பேசுகிறார்களோ இல்லையோ, ஆனால் நாட்டின் சுதந்திரம் கிடைக்க தங்கள் நடைமுறைகளில் நல்வழியைக் கடைபிடிக்க வேண்டும். தங்கள் செயல்களில் நேர்மையின்றி, நாடர்களின் உரிமைகளைக் கருத்தில் கொள்ளாது, அவர்களுக்காக தங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்காவிட்டால் காங்கிரசின் செய்கையில் நேர்மை இல்லை என்றாகிறது. நேர்மை இல்லாவிட்டால் இயக்கத்தில் வெற்றி காண இயலாது. இந்த நிலைமையை நீட்டிப்பதில் பயனில்லை.
காங்கிரசில் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மக்கள் இருக்கிறார்கள். நாடார்களுக்கு எதிராக போலிக்காரணங்கள் கூறுவதும், நாடர்குல தீர்மானம் பற்றி தங்களுக்கு தடையொன்றுமில்லை என்றும், ஆனால், மற்றவர்கள்தான் அவர்கள் விருப்பத்திற்குத் தடை செய்வது போல பேசுபவர்களை நானறிவேன். ஆனால் இவர்களின் எண்ணிக்கையில் வெகு சிலரே. இவர்களைப் பொருட்படுத்தக் கூடாது. நாட்டுக்கு உழைப்பதைக் கடமையாகக் கொண்டுள்ள உண்மையான நாட்டுப் பற்றுள்ளவர்களும் காங்கிரசில் உள்ளனர்.
நாடார்குல மக்களில் சிலர் சில நாட்களுக்கு முன்னர் சமத்துவம் மறுக்கப்படும் இந்துக் கோவிலில் நுழைய முற்பட்ட செயலை நானறிவேன். உங்களுக்காக எந்த உதவியும் செய்ய நான் தயாரக உள்ளேன், ஆனால் தற்போதைய நிலைமை உதவிகரமாக இல்லை. அந்நியர் கையில் ஆட்சி இருக்கும்வரை, நமக்கு இதில் வெற்றி கிடைக்காது. இந்தியர்கள் கையில் ஆட்சி கிடைக்கும்வரை வெற்றி வாய்ப்பு குறைவு, ஆனால் நம் கையில் அதிகாரம் கிடைக்கும் நாள் நெருங்குகிறது என்பது என் கருத்து. சுதந்திரம் பெறுவது உடனே கிடைக்காவிட்டால் அது வெகு காலத்திற்கு தள்ளிப் போய்விடும். ஆகவே, அன்பு நாடார்குல நண்பர்களே அதனால் நீங்கள் இந்தியாவின் சுதந்தரத்திற்காகப் பாடுபடுங்கள்.
ஸ்ரீனிவாசய்யங்கார் உங்கள் ஆதரவாளர்தான் என்பது எனக்கு நன்கு தெரியும். உங்களுக்கும் அவரைப்பற்றித் தெரியும். ஆனால், மதுரை மாநாட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்காக அவரைக் குறை சொல்வதில் பயனில்லை. நாடார்களைப் பற்றிக் கொண்டுவந்த தீர்மானம் தோற்றுப் போனதில் அவர் வேண்டுமென்று உங்களுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கவில்லை என்பதாக நான் கருதுகிறேன். நாடார்குல மக்களின் தியாகங்கள் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மட்டும் இது போன்ற சமூகக்குறைகளை எதிர்கொள்ளாமல் இருந்திருக்க நேர்ந்திருந்தால் சிறந்த நாட்டுப்பற்றுள்ளவர்கள் என்பவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.
உங்களது மனக்குறைகளை கடந்த 15 ஆண்டுகளாகவே நானறிவேன். அதைப்பற்றி பலமுறை பேசியும் உள்ளேன். பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டபிறகு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக உங்களுடன் நன்கு பழகும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. உங்களிடம் நான் நன்றியும் நல்லெண்ணமும் கொண்டுள்ளேன். இது முகத்திற்கெதிரில் கூறும் வெறும் புகழ்ச்சி உரை அல்ல. ஆனால், நீங்கள் எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி. உங்களிடம் பல நல்ல குணங்கள் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக உள்ள நல்ல குணம் நீங்கள் சொன்ன சொல் மாறது இருப்பது.
இதற்குச் சான்றாக ஒரு நிகழ்வைக் காட்ட விரும்புகிறேன். நான் மதுவிலக்குக்கு எதிராக போராடிய பொழுது “கள் குத்தகை” எடுக்கும் நாடர்கள் சிலரிடம் நாட்டின் நலத்திற்கு முன்னுரிமை அளித்து குத்தகை எடுப்பதைத் தவிர்க்கும்படி வேண்டிக் கொண்டேன். அவர்களும் என் வேண்டுகோளை ஏற்றனர். ஒருமுறை இதற்காக நாடார் ஒருவரை அணுகி என் வேண்டுகோளை வைக்கச் சென்றபொழுது, அரசு 144 தடை விதித்து, அந்த சட்டத்தின் கீழ் என்னை ஊரை விட்டு வெளியேறச் சொன்னார்கள். எனினும், அந்த நாடார் எனக்கு ஆறுதல் சொல்லி, நான் பேச்சு மாறமாட்டேன், உங்கள் அறிவுரைப்படி குத்தகை எடுக்க மாட்டேன் என்று கூறி என்னைத் தேற்றி அனுப்பி வைத்தார்.
அவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றி குத்தகையும் எடுக்கவில்லை என்று நான் மகிழ்ந்தேன். ஆனால், அந்தக் குத்தகையை வேளாளர்களில் சிலரும், கவுண்டர்களில் சிலரும் எடுத்த பொழுது வருத்தமுற்றேன். இறுதியாக நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது, சமீபத்திய நிகழ்வுகளின் காரணமாக மனம் வருந்தி காங்கிரஸ் மீது வெறுப்பு கொள்ளாதீர்கள். இயன்றால் காங்கிரஸ் உறுப்பினராகுங்கள். முதலில் நாட்டிற்கும் பிறகு உங்கள் சாதிக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.
உங்களை என்றும் நான் நினைவில் கொள்வேன், எனக்கு நீங்கள் கொடுத்த மரியாதை மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்களை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன். திருப்பூரில் நடக்கவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிற்கு உங்களில் ஒருசிலராவது வரவேண்டும் என்று விருப்பத்துடன் அழைக்கிறேன்.
_________________
* இத்தீர்மானம் தொடர்ந்து வந்த திருப்பூர் மாநாட்டில் நிறைவேறியது என்று இந்த இதழிலேயே மற்றொரு செய்தி அறிவிக்கிறது. ஆனால் அப்பொழுது தீர்மானத்தை நிறைவேற்ற ஏற்பட்ட தடைகளையும், மாநாட்டில் நடந்த கூச்சல் குழப்பங்களையும், தீர்மானத் தடைக்கு பாமரகள்தான் காரணம் என்று பழிபோட்ட கற்றறிந்த காங்கிரஸ் உறுப்பினர்களின் உண்மை குணத்தையும் கண்ட நாடார்குல மக்கள், தீர்மானம் நிறைவேறியும் மகிழ்ச்சி அடையாததை, அந்த இதழின் 4 வது பக்கத்தில் “குளிக்கப் போன இடத்திலா சேற்றைப் பூசிக்கொள்வது” என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட செய்தியொன்று குறிப்பிடுகிறது.
_________________
பெரியாரின் நேர்காணல் தகவல் இடம் பெற்ற பத்திரிக்கை:
நாடார் குல மித்திரன், பதிப்பு: நவம்பர் 11, 1922 , மலர் 4: இதழ் 8, பக்கம் எண்: 2 – 3
‘தமிழ் மரபு அறக்கட்டளை’மின்னாக்கம் செய்துள்ள இந்த இதழை இந்த சுட்டியில் காணலாம்
மற்றும் பல ‘நாடார் குல மித்திரன்’ பத்திரிக்கையின் மின்னாக்கங்களின் தொகுதியை
“தமிழ் மரபு நூலகம்” வலைத்தளத்தில் காணலாம்

நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=55073

Wednesday, March 11, 2015

துப்பாக்கிக் கவுண்டர்

 உதயபெருமாள் கவுண்டர் (எ) துப்பாக்கிக் கவுண்டர்
வீரவரலாறு

காளையார் கோயில் அருள்மிகு காளீசுவரர்  கோபுர வாயிலில்
துப்பாகிக் கவுண்டர் சிலை, மற்றம் அவர் சுட்டு வீழ்த்திய கரடி சிலை.
17ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள கொங்குநாடு என்று அழைக்கப்படும் பகுதியில் தர்மபுரியில் பிறந்தவர் உதயபெருமாள் கவுண்டர்.

வெள்ளையரின் படையில் கவுண்டர்
வெள்ளையர் படையில் சேர்ந்து சுமார் 10 ஆண்டுகளாக துப்பாக்கி சுடுதல். துப்பாக்கி. வெடிகுண்டு. தோட்டா தயாரித்தல், ஆகியவற்றில் திறமை மிக்கவராக விளங்கினார். அதனால் அவரை உடன் பணிபுரிந்தவர்கள் துப்பாக்கி கவுண்டர் என்றே அழைத்தனர்.

    
    வெள்ளையர் படையில் சேர்ந்து இருந்தாலும் இயல்பாகவே நாட்டுபற்று மிக்கவராக இருந்ததால் வெள்ளையர்கள் நம்மை அடிமைப்படுத்துவது பிடிக்கவில்லை. எனவே, சகவீரர்களிடம் வெள்ளையர்களை எதிர்ப்பது சம்பந்தமாக நாட்டுபற்றை ஊட்டினார். இதை அறிந்த வெள்ளையர்களின் மேல் அதிகாரிகள் உதயபெருமாள் கவுண்டரை கொல்ல திட்டம் தீட்டினர். ஆனால் அவர்களின் திட்டத்தை அறிந்த உதயபெருமாள் கவுண்டர் அங்கிருந்த சில வெள்ளையரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு அங்கிருந்து வெளியேறினார். அச்சமயத்தில் சிவகங்கை சீமையில் வீர மங்கை வேலுநாச்சியார் வெள்ளையர்களை எதிர்த்து போர் புரிந்து வருவதை தமது உற்ற நண்பர்விருப்பாச்சி கோபால நாயக்கர் மூலம் ஏற்கனவே கவுண்டர் அறிந்து இருந்ததால், விரைந்து சிவகங்கை சீமை நோக்கி பயணம் ஆனார்.அந்த சமயத்தில் சிவகங்கை சீமையில் மருது சகோதரர்கள் ஆட்சி நிர்வாகம் செய்து வந்தார்கள். வேலுநாச்சியார் அவர்கள் உடல் நலக்குறைவால் விருப்பாச்சி கோட்டையில் தங்கியிருந்தார்.

சிவகங்கை சீமையில் கவுண்டர்
        சிவகங்கை சீமையின் காரைக்குடி கழனிவாசல் பகுதிக்கு வந்து சேர்ந்த உதயப்பெருமாள் கவுண்டர், சக போராளிகள் மு்லம் அன்னை வேலுநாச்சியார் கோபால நாயக்கரின் விருப்பாச்சி கோட்டையில் தங்கி இருப்பதை அறிந்த கவுண்டர் ராணியாரை சந்திக்க விருப்பாச்சி கோட்டைக்கு சென்றார்.
வீரமங்கையைச் சந்தித்த கவுண்டரிடம், பிரதானிகளான மருது சகோதரர்களுடன் சேர்ந்து நீ பணிபுரிய வேண்டும் என்றும், மேலும்சிவகங்கை சீமைக்கு கௌரி வல்லப உடையணத்தேவர் தான் எனது சுவீகார புத்திரன் என்றும, அவரை தேடி கண்டுபிடித்து இந்த ஓலை நறுக்கை ஒப்படைக்க வேண்டும் என்றும் கட்டளை இட்டார். ராணியாரிடம் இருந்து ஓலையை பெற்றுக்கொண்டு, ராணியாரிடமும் கோபாலநாயக்கரிடமும் விடைபெற்றுக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு சிவகங்கை சீமை வந்த கவுண்டர் மருது சகோதரர்கள் படையில் சேரத் தருணம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார்.

மருதிருவருடன் கவுண்டர்
பெருமழையின் காரணமாக மறவமங்கலம் கண்மாய் உடைப்பு ஏற்பட்டு மக்கள் திரண்டு உடைப்பை அடைத்துக்கொண்டு இருந்தனர்.மருதிருவரும் அங்கு வந்து மக்களை உற்சாகப்படுத்திக்கொண்டு இருந்தனர். இந்த செய்தி அறிந்து, மக்களைக் காப்பாற்றும் பொருட்டு அங்கு சென்ற உதயபெருமாள் கவுண்டர், பம்பரமாக சுழன்று தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். கண்மாய் உடைப்பு சரிசெய்யப்பட்டதும், மக்கள் அனைவரும் மகிழ்ந்திருந்த சமயம், பெரியமருது அங்கு கூடிஇருந்த மக்களை பார்த்து, யார் இந்த கண்மாயில் நீந்தி அக்கரைக்கு செல்கிறார்களோ அவர்களுக்கு விரும்பும் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மருது சகோதரர்கள், படையில் சேர இது தான் தக்க தருணம் என உணர்ந்த கவுண்டர் சற்றும் தாமதியாமல் கடல் போல் விரிந்து கிடந்த கண்மாயில் குதித்து அக்கரைக்கு சென்றதுடன் திரும்பியும் நீந்தி வந்து சேர்ந்தார். 
 
 
     அதிசயித்து நின்ற பெரியமருது, கவுண்டரை அழைத்து  “யார் நீ என்று கேட்டார். தான் தர்மபுரியை சேர்ந்தவன் என்றும் தனது பெயர் உதயபெருமாள் கவுண்டர் என்றும், துப்பாக்கி சுடுவதில் சிறந்தவன் என்பதால் என்னை அனைவரும் துப்பாக்கி கவுண்டர் என்று அழைப்பார்கள் என்றும் சொன்னார். பெரியமருது உதயபெருமாளை பார்த்து நீ துப்பாக்கி சுடுவதில் வல்லவன் என்றால் அதோ அங்குவானத்தில் பறந்து செல்லும் வல்லூறுவை சுட்டு வீழ்த்து பார்க்கலாம் என கூறினார். உடனே தனது துப்பாக்கியை கொண்டு ஒரே தோட்டாவில், அந்த பறவையை வீழ்த்தி காட்டினார். கவுண்டரின் திறமையை கண்டு வியந்த பெரியமருது அவரது பணி நமக்கு தேவைப்படும் என்று எண்ணியவாறு, உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று  கேட்டார். “எனக்கு பரிசு எதுவும் வேண்டாம். என்னை தங்களது படையில் சேர்த்துக்கொண்டால் போதும் என்று உதயபெருமாள் கவுண்டர் கூறிய பதிலை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்த பெரியமருது உடனடியாக சின்னமருதுவிடம் நமது படையில் துப்பாக்கி படைபிரிவு ஒன்றை ஏற்படுத்தி அதற்கு உதயபெருமாள்கவுண்டரை தளபதியாக்க உத்தரவிட்டார். மேலும் உதயபெருமாள் கவுண்டரை திருப்பாச்சேத்தி அம்பலகாரராக அறிவித்து திருப்பாச்சேத்தியில் சென்று தங்கும்படி கூறினார். தமது எண்ணம் நிறைவேறிய மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொண்ட உதயபெருமாள் கவுண்டர், தனது மனைவி பொன்னாயி மற்றும் மகன்கள் ஆறுமுகம், உதயபெருமாள் ஆகியோருடன் திருப்பாச்சேத்தியில் தங்கினார்.மேலும், ஊர் பிரச்சனைகளை பேசி தீர்க்கவும், போராளிகளை தயார் செய்யவும் தனது வீட்டின் அருகிலேயே சவுக்கை ஒன்று அமைத்தார்.அந்த பகுதி இன்றும் கவுண்டவளவு“ என்று அழைக்கப்படுகிறது.
 மருது சகோதரர்கள் இட்ட உத்தரவுப்படி, சத்திரபதி கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சியும் தாராமங்கலத்தில் துப்பாக்கிகள் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையையும் ஏற்படுத்தி உதயபெருமாள் கவுண்டர் சிறப்பாக நடத்திவந்தார். வெள்ளையர்களைசுட்டுவீழ்த்த வெறி கொண்டு இருந்த உதயபெருமாள் கவுண்டர் தினமும் குளக்கரைக்கு சென்று, கண்ணில் படும் வெள்ளை கொக்குளை சுட்டு வீழ்த்தி தனது வெறியை தீர்த்துக்கொண்டார்.

வீரமங்கையின் மறைவு
25.12.1796ல் வீரமங்கை வேலுநாச்சியாரின் மறைவிற்கு பிறகு, ராணியாரின் சுவீகார புத்திரன் கௌரிவல்லபர் அறந்தாங்கி பகுதியில் பதுங்கி வாழவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.

ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததும் பாளையங்கோட்டை போரும்
     
அதன்பின்னர், திருநெல்வேலி சீமையில் வீரபாண்டிய கட்டபொம்மனை வெள்ளையர்கள் தூக்கிலிட்டனர். கட்டபொம்மனின் குடும்பத்தாரையும் வெள்ளையர்கள் சிறை வைத்தனர்.  அங்கிருந்து தப்பி வந்த ஊமைத்துரை சிவகங்கை சீமையை அடைந்து மருதுசகோதரர்களிடம் அடைக்கலமாகி நடந்த விபரங்களை கூறினார். மனம் வேதனையுற்ற பெரியமருது உடனடியாக சின்னமருதுவையும் உதயபெருமாள் கவுண்டரையும் அழைத்து, தேவையான படைவீரர்களை அழைத்துக்கொண்டு திருநெல்வேலி சீமைக்குச் சென்றுபாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்  கட்டபொம்மனின் குடும்பத்தாரை காப்பாற்றி வரும்படி உத்தரவிட்டார். நடுஇரவில்பாளையங்கோட்டையை அடைந்த வீரர்கள் நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு திடீர் தாக்குதல் நடத்தி, கட்டபொம்மனின் குடும்பத்தாரை காப்பாற்றி சிவகங்கை சீமைக்கு அழைத்து வந்தனர். 

மருது சகோதரர்கள் மீது வெள்ளையரின் கோபம்
 ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததுடன் பாளையங் கோட்டையிலும் மருது சகோதரர்கள் தாக்குதல் நடத்தியதால், வெள்ளையர்கள் மருது சகோதரர்கள் மீது கோபம் கொண்டனர். மருதிருவரும் இந்நிகழ்ச்சிக்கு பிறகு, வெள்ளையர் ஆதிக்கத்தை முழுமையாக எதிர்க்க முடிவுசெய்தனர். இதனால் உதயபெருமாள் கவுண்டர் தனது துப்பாக்கிக்கு வேலை வந்ததை எண்ணி, இனி குளக்கரையில் கொக்குகளை சுட வேண்டியதில்லை, பரங்கியர் தலையை சுட்டு வீழ்த்தலாம் என அகமகிழ்ந்தார். 
 
திருப்பாச்சேத்தி போர்
7.6.1801ஆம் ஆண்டு திருப்பூவணம் திருப்பாச்சேத்தி வழியாக இராமநாதபுரம் பகுதிக்கு மேஜர் கிரே தலைமையிலான வெள்ளையர் படை வருவதை அறிந்த உதயபெருமாள் கவுண்டர் தனது சக போராளிகளுடன் திருப்பாச்சேத்திக்கு மேற்கே 1 மைல் தொலைவில் இரு கண்மாய்கள் இணையும் இடத்தில் மரங்கள் அடர்த்தியாக இருந்த பகுதியில், மறைந்திருந்து தாக்கும் கொரில்லா போர் முறையில் திடீர்தாக்குதல் நடத்தினார். இந்த சண்டையில் மேஜர் கிரே சுட்டு கொல்லப்பட்டார். தளபதி நாகின் ஈட்டியால் தாக்கப்பட்டு காயமடைந்தார். லெப்டினன்ட் ஸ்டு்வர்டு தாடை எழும்பு முறிந்து பலத்த காயமடைந்தார். மேலும் வெள்ளையர் படையில் 15 பேர் கொல்லப்பட்டனர்.பரங்கியர் படை அத்துடன் புறமுதுகிட்டு ஓடியது. இந்த தாக்குதல் குறித்து வெல்ஸ்”  என்னும் வெள்ளையர் தளபதி தனது டைரியில்குறிப்பு எழுதி வைத்துள்ளார். இந்த போரில் வெற்றி பெறக் காரணமாக இருந்த உதயபெருமாள் கவுண்டரின் வீரத்தைப் பாராட்டி அவருக்கு திருப்பாச்சேத்தி சிவன் கோயிலில் சிலை வைக்க  பெரியமருது உத்தரவிட்டார். (மேற்படி சிலை திருப்பாச்சேத்தி சிவாலயத்தில் முருகன் சன்னதியில் உள்ளது).
கர்னல் அக்னியூவின் கோபம்
திருப்பாச்சேத்தியில் நடந்த போர் சண்டை குறித்து தகவல் அறிந்த கர்னல் அக்னியூ, மருது சகோதரர்களை அழிப்பதே எனது முதல் வேலை என்று, சிறுவயல் நோக்கி தனது படையுடன் புறப்பட்டார். இதை அறிந்த மருது சகோதரர்கள் தமது படையுடன் சிறுவயலில் இருந்து காளையார்கோயில் கோட்டைக்கு சென்றனர். சிறுவயல் வந்த அக்னியூ தலைமையிலான படை ஏமாற்றம் அடைந்தது.சிறுவயலில் இருந்து காளையார்கோயில் வரை அடர்ந்த காட்டு பகுதியாக இருந்ததால், பீரங்கிகளை கொண்டு செல்ல ஏதுவாக சாலை அமைக்கும் பணியில்  வெள்ளையர் படை ஈடுபட்டது. 
 
அக்னியூவின் வெள்ளை கரடி
மருது சகோதரர்கள் தமது படையை உதயபெருமாள் கவுண்டர் தலைமையில் காட்டு பகுதிக்கு அனுப்பினர். கொரில்லா போர் முறையில் வெள்ளையர் படையை தாக்கினர். அந்த சமயத்தில் அங்கிருந்த கர்னல் அக்னியூவை உதயபெருமாள் கவுண்டர் துப்பாக்கியால்,குறிபார்த்து சுட்டார். அப்போது, அக்னியூ வளர்த்த வெள்ளை கரடி குறுக்கே வந்து பாய்ந்து அக்னியூவை காப்பாற்றி தன் உயிரைமாய்த்துக்கொண்டது. கோபம் கொண்ட அக்னியூ பீரங்கியை உதயபெருமாள் பக்கம் திருப்ப உத்தரவிட்டான். நொடிப்பொழுதில் உதயபெருமாள் கவுண்டர் வேறுதிசைக்கு சென்று தனது துப்பாக்கி தாக்குதலை நடத்தினார்.

கௌரிவல்லபரை சந்தித்த கவுண்டர்
அந்த சமயத்தில், சிவகங்கை சீமைக்கு உரிமை கோரிய கௌரிவல்லபரை மன்னராக அறிவித்து வெள்ளையர்கள் கௌரிவல்லவரை தங்களுடன் வைத்துக்கொண்டனர். வேறு வழியின்றி வெள்ளையர் படையில் வந்த கௌரிவல்லபரை யார் எனத் தெரியாததால், முதலில் குதிரையைச் சுட்டு வீழ்த்தினார்.  தமிழ் மன்னர் போன்ற தோற்றத்தில் குதிரையில் வீற்றிருபவர் யார் என அருகில் இருந்தவர்களிடம் உதயபெருமாள் கவுண்டர் விசாரித்தபோது, அவர்தான் மன்னர் கௌரிவல்லபர் என அறிந்ததும், நிராயுதபாணியாக நின்ற கௌரிவல்லபரிடம், ராணி வேலுநாச்சியார் கொடுத்த ஓலை நறுக்கை ஒப்படைத்து விட்டு, அடுத்த கணமே அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். ஒன்றும் புரியாத நிலையில், நிராயுதபாணியான தம்மை கொல்லாமல் ஏதோ ஓலையை கொடுத்துவிட்டு செல்கிறானே இந்த வீரன் என்று எண்ணிய கௌரிவல்லபர், அந்த ஓலையை பிரித்து பார்த்தபோது ராணி வேலுநாச்சியார் தன்னை சுவீகார புத்திரன் என்று அதிகாரம் அளித்திருப்பதை அந்த ஓலை மூலம் அறிந்து பூரிப்படைந்த கௌரிவல்லபர் உதயபெருமாள் கவுண்டருக்கு தனது மனதார நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
1801 ம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்கள் சிறுவயலில் இருந்து காளையார்கோயில் வரை வெள்ளையர் படை சாலை அமைத்தனர். இந்த இரு மாதங்களும் வெள்ளையர் படையும் மருதுசகோதரர்கள் படையும் நடத்திய துப்பாக்கி சண்டையில் இரு தரப்பினருக்கும் உயிர்சேதம் அதிகமானது.     1801ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ந்தேதி வெள்ளையர் படை முன்னேறி காளையார்கோயிலை அடைந்ததும், கர்னல் அக்னியூ, கர்னல் இன்ஸ், கர்னல் ஸ்பிதா ஆகியோர் வியூகம் அமைத்து காளையார்கோயில் கோட்டையை தாக்கினர்.

மாவீரனின் வீரமரணம்
உதயபெருமாள் கவுண்டரின் வேண்டுகோளின்படி.  மருது சகோதரர்கள் தலைமறைவாகினர்.  மருதுபடை உதயபெருமாள் கவுண்டர் தலைமையில் காளையார்கோயில் கோட்டையிலிருந்து வெள்ளையர் படையை எதிர்த்துத் தாக்குதல் நடத்தினர். கர்னல் அக்னியூ, தனது வெள்ளைக் கரடியை சுட்டுக் கொன்ற உதயபெருமாள் கவுண்டர் கோட்டையிலிருந்து போர் நடத்துவதை அறிந்ததும், தனது பீரங்கியை கொண்டு தாக்கும்படி உத்தரவிட்டான். அவனது உத்தரவின்படி நடந்த பீரங்கி தாக்குதலில், வெள்ளையர் படைக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த  துப்பாக்கி கவுண்டர் என்று அழைக்கப்பட்ட உதயபெருமாள் கவுண்டர் வீரமரணம் அடைந்தார். பிணக்குவியலின் நடுவே காளையார்கோயில் கோட்டையில் நுழைந்த வெள்ளையர் படைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மருதிருவரை பிடிக்க முடியவில்லை.

சிவகங்கை அரண்மனையில் கௌரிவல்லபர்
5.1.01801 ஆம் ஆண்டு சிவகங்கை அரண்மனை புதுப்பிக்கப்பட்டு ஆஸ்தான மண்டபம் அலங்கரிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட சிம்மாசனத்தில் மேளவாத்தியங்கள் மந்திரம் முழங்க வீரமங்கை வேலுநாச்சியாரின் சுவீகாரபுத்திரன் கௌரிவல்லபர் அரியாசனத்தில் அமர்ந்து பதவிஏற்றார்.

உதயபெருமாள் கவுண்டருக்கு சிலை
கௌரிவல்லபர் பதவி ஏற்றதும் முதல் ஆணையாக, சிவகங்கை தெப்பக்குளத்தின் மேல் கரையில் கௌரி வினாயகர் ஆலயம் அமைக்கவும், தென்கரையில் தனது தெய்வத்தாய் வீரமங்கை வேலுநாச்சியாரின் மாலையீடு மீது ஆலயம் அமைக்கவும், வெந்தியூர்காட்டில் தான் தனித்து நின்றபோது. தம்மை தாக்காமல் விட்டு. ராணியார் எப்போதோ கொடுத்த ஓலையை கடமை தவறாமல் தன்னிடம் ஒப்படைத்த உதயபெருமாள் கவுண்டருக்கு அவர் வெற்றியூர் காட்டில் கர்னல் அக்னியூவின் வெள்ளை கரடியை சுட்ட நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் விதமாக காளையார்கோயிலில் உதயபெருமாள் கவுண்டர் வீரமரணம் அடைந்த இடத்தில் சிலை அமைக்கவும்உத்தரவிட்டார். அதன்படி அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் கோயில் நுழைவு வாயிலில் உதயபெருமாள் கவுண்டர் வெள்ளைகரடியை சுட்டபடி சிலை அமைக்கப்பட்டது.
கொங்கு சீமையில் பிறந்து வெள்ளையரை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சிவகங்கை சீமையில் திருப்பாச்சேத்தியில் அம்பலகாரராக இருந்து, தன் மனைவி மக்களை பிரிந்து காளையார்கோயில் போரில் வீரமரணம் அடைந்த உதயபெருமாள் கவுண்டரின் வாழ்க்கை போர்முனையில் துவங்கி, போர்முனையிலேயே முடிந்தது.
அதன்பின்னர், மருது சகோதரர்கள் இருவரும் வெள்ளையர்களிடம் பிடிபட்டபோது, தாங்கள் மானியமாக அளித்ததை திரும்பப் பெறக்கூடாது என்ற அவர்களின் வேண்டுகோளின்படி, மருது சகோதரர்களால் உதயபெருமாள் கவுண்டருக்கு அளிக்கப்பட்டிருந்த அம்பலகாரர் பட்டமும், மானிய கிராமங்களையும் கொண்டு அவரது மனைவி பொன்னாயி தன் மகன்களை வளர்த்து, அவர்களை அறப்பணியில் ஈடுபடுத்த முற்பட்டார்.

உதயபெருமாள் கவுண்டரின் வாரிசுகள்
உதயபெருமாள் கவுண்டரின் மகன்களுக்கு பிள்ளை பட்டம் வழங்கப்பட்டு, அவர்கள் ஆறுமுகம்பிள்ளை, உதயபெருமாள் பிள்ளை என்றே அழைக்கப்பட்டனர். அத்துடன் திருப்பாச்சேத்தியில், பிள்ளைமார் இனத்திலேயே மணம் முடித்து, அவர்களுடைய வாரிசுகள் பத்து தலைமுறையாக பிள்ளைமார் சமுதாயத்தினராகவே திருப்பாச்சேத்தியில் வாழ்ந்து வருகின்றபோதிலும், ஊர்மக்களால் கவுண்டபுரத்தார் என்றே அழைக்கப்படுகிறார்கள்.

கவுண்டபுரத்தாரின் அறப்பணி   
உதயபெருமாள் கவுண்டரின் மகன்கள் ஆறுமுகம்பிள்ளையும் உதயபெருமாள்பிள்ளையும் அறப்பணியில் தீவிரம் காட்டினர்.திருப்பாச்சேத்தியில் உள்ள மருநோக்கும் பூங்குழலி உடனாய திருநோக்கிய அழகிய நாதர் திருக்கோயிலில் சுற்றுச்சுவர், கோட்டை வாசல் கட்டினர். மேலும் வினாயகர் சன்னதி, முருகன் சன்னதி, பைரவர் சன்னதி  கோயில்களை புனரமைப்பு செய்துள்ளனர். இதற்கான ஆதாரமான கல்வெட்டு மேற்படி கோயிலின் கிழக்கு வாசல் முன்மண்டபத்தில் இன்றும் உள்ளது. மேலும் யாத்திரை வருபவர்கள் தங்குவதற்கு மடமும் கட்டிஉள்ளனர். பொதுமக்கள் வசதிக்காக ரயில்வே துறைக்கும், காவல்துறைக்கும் இடம் விட்டு உதவியுள்ளனர்.
மேலும், உதயபெருமாள் கவுண்டரின் வாரிசுகள் தொன்றுதொட்டு இன்று வரை, ஒவ்வொரு ஆண்டும் தைபூசத்திருநாள் அன்று அன்னதானமும், நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமி அன்று     அம்பாள் குதிரை வாகனத்தில் கவுண்டபுரத்தார் மடத்தில் எழுந்தருளி, பின் அங்கு கவுண்டரின் வாரிசுகளான கவுண்டபுரத்தார் சார்பாக அம்மனுக்கு சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்டு, மடத்திலிருந்து புறப்பட்டு மகரநோன்பு பொட்டலில் சென்று அம்பு விடும் நிகழ்ச்சியும் ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 
 உதயப்பெருமாள்கவுண்டர் பற்றிய ஆவண நூல்கள்
1.   காளையார்கோயில் மு.சேகர் எழுதிய வீரம் விளைந்த சிவகங்கை சீமையின் செம்மண்”.
2.   
தேச விடுதலையும் தியாகசுடர்களும் புத்தகத்தில் மு.ஜீவபாரதி அவர்கள் எழுதிய துப்பாக்கி கவுண்டன் என்ற கட்டுரை.
3.   
தேசிய விடுதலையில் கொங்குநாட்டினரின் பங்கு என்ற புத்தகத்தில், ஈரோடு புலவர். செ.ராசு அவர்கள். தஞ்சை தமிழ்பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை தலைவர் (ஓய்வு) எழுதிய துப்பாக்கி கவுண்டர் என்ற உதயபெருமாள் கவுண்டர் என்றகட்டுரை.
4.   முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் தென்பாண்டி சிங்கம்.
5.   
செவல்குளம்புலவர் அ.சா.குருசாமி அவர்கள் எழுதிய மாவீரர் மருதுபாண்டியர்.
6.   
மீ.மனோகரன் எழுதிய மருதுபாண்டிய மன்னர்கள்.
7.   
வெல்ஸ் டைடரி வால்யூம் 1. பக்கம் 81.82
8.   
திருப்பாச்சேத்தி சிவாலயத்தின் கிழக்கு வாயில் முன்மண்டபத்தில் உள்ள கல்வெட்டு

திருப்பாச்சேத்தியில் கவுண்டபுரத்தார்களால் நடத்தப்படும் விழாக்கள்


1.   
தைப்பூசத்திருநாளில் அன்னதானம் நடத்துதல்.
2.   மாசிமாதம்டூகளாpவிழாடூசிவாலயத்திலுள்ள உதயப்பெருமாள் கவுண்டர் அவர்களின் திருஉருவசிலைக்கு மரியாதை செய்து பின் வைகை ஆறு சென்று குலதெய்வ வழிபாடு செய்தல்.
3.    சித்திரைமாதம் அழகியநாயகிஅம்மன் கோயில் திருவிழாவில், முதல்நாள் (சித்திரை1ம்தேதி) முதல்திருக்கண்மரியாதை, அம்மன் சிம்மவாகனத்தில் அலங்காரம் செய்தல், பிரசாதம் வழங்குதல், துண்டு அணிவித்தல்.
4.    மதுரை சித்திரை திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு 10 நாட்கள் நீர்மோர் வழங்குதல்.
5.    ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமி அன்று     அம்பாள் குதிரை வாகனத்தில் கவுண்டபுரத்தார் மடத்தில் எழுந்தருளி, பின் அங்கு கவுண்டரின் வாரிசுகளான கவுண்டபுரத்தார் சார்பாக அம்மனுக்கு சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்டு, மடத்திலிருந்து புறப்பட்டு மகரநோன்பு பொட்டலில் சென்று அம்பு விடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
6.    
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி கவுண்டபுரம் பங்காளிகளின் பாட்டனார் மாவீரன் உதயப்பெருமாள் கவுண்டர் என்ற துப்பாக்கி கவுண்டர் நினைவுநாள் கொண்டாடுதல்.
7.    காராளருடைய அய்யனார்கோயில் புரவிஎடுப்பு விழாவில் முதல் குதிரை அரண்மனைக்கும் (சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம்) அடுத்தது கிராம கணக்கில் முதல் குதிரையும், முதல் மரியாதையும் கவுண்டபுரத்தாருக்கு கொடுக்கப்படுகிறது.

சமர்ப்பணம்        இந்திய விடுதலை வேள்வியில் தமது இன்னுயிரை மண்ணுக்குத் தந்து வீரமரணம் அடைந்த பல ஆயிரம் வீரர்களில் ஒருவரான உதயபெருமாள் கவுண்டர் என்ற துப்பாக்கி கவுண்டரின் வாழ்க்கை வரலாற்றை அனைவருக்கும் தெரியப்படுத்த அவரது வாரிசுகளான நாங்கள் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் திருப்பாச்சேத்தி உதயப்பெருமாள் கவுண்டர் என்ற துப்பாக்கிக் கவுண்டரின் வாரிசுகள் நன்றியை சமர்ப்பிக்கின்றோம்.

மானாமதுரை சுவாமிஜி அம்மா இவர்களது முன்னிலையில்,
திருப்பாச்சேத்தி அருள்மிகு சப்பாணி கருப்பர் கோயிலில் வைத்து
4 மார்ச் 2015 அன்று கவுண்டரின் வாரிசுகள், கவுண்டர் பற்றிய செய்திகளை
முனைவர் கி. காளைராசனிடம் வழங்கினர்.
முனைவர் கி. காளைராசன்